பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்- தேனி.

உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால்.. அது எனக்குச் சொந்தமாகிவிடுமா? என்று அருணாச்சலபிரதேசம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறாரே?

Advertisment

mm

கால்வான் பகுதியில், அருணாச்சலபிரதேசத்தில் காலகாலமாக நிலவிவந்த எல்லைக்கோட்டை மீறி ஏக்கர்கணக்கில் நிலங்களை சீனா ஆக்கிரமித்திருக்கிறது என சர்வதேச செய்திகள் கூறுகின்றன. மேலும் அருணாசலப்பிரதேசத்தில் எல்லைதாண்டி சீனா குடியிருப்புகளையே கட்டியிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இந்திய நிலப் பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றம் செய்திருக்கும் தகவல்கள் மட்டும்தான் வருகின்றன போலிருக்கிறது. பாகிஸ்தானிடம் எல்லைதாண்டிப் போய் தாக்குதல் நடத்தும் துணிச்சல், சீனா எனும்போது காணாமல்போய்விடுகிறது. கச்சத்தீவுக்கு கச்சை கட்டுபவர்கள் பங்களாதேஷுக்கு தாரைவார்த்த நிலங்களைப் பற்றி பேசவே மறுக்கிறார்கள்.

Advertisment

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

ஊழல் பணம் எதையும் மீட்காமல் ஆறு மாதங்களாக சிறையில் வைத்திருந்தது ஏன் எனக்கூறி அமலாக்கத்துறை காவலிலுள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங்குக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதே?

அமலாக்கத்துறை தன் கையிலெடுத்த வழக்குகளில் 0.42 சதவிகிதம் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மற்ற வழக்குகளில் சுமத்திய குற்றங்களை அதனால் நிரூபணம் செய்ய முடிந்தததில்லை. 5,906 வழக்குகள் பதிவுசெய்ததில் 25 வழக்குகளில் மட்டுமே அதற்கு வெற்றி. ஆனால் மணிஷ் சிசோடியாவை ஒரு வருடம் சிறையில் வைத்தாகிவிட்டதல்லவா! இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை திகாருக்குக் கொண்டுபோய் விட்டதல்லவா! அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தவர்களுக்கு அதுவே போதுமானது.

Advertisment

dd

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

ஊழல்வாதிகளை சும்மா விடமாட்டேன் எனக் கூறும் பா.ஜ.க., தம் கட்சியைச் சேர்ந்த ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லையே ஏன்?

ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்பட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், சி.பி.ஐ., அமலாக்கத் துறையால் வழக்குத் தொடுக்கப்பட்டவர்கள் என 25 பேர் பா.ஜ.க.வில் சேர்ந்தபின் தூய்மையானவர்களாக மாறியிருக்கின்றனர். இப்படி காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகள் பா.ஜ.க.வில் சேர்ந்து தப்பித் திருக்கிறார்கள். ஒன்று, இவர்களுக்கு எதிரான வழக்கு கைவிடப்படும். அல்லது நெடுங்காலத்துக்கு அந்த வழக்கு கண்டுகொள்ளப்படாது. எதிர்க் கட்சியில் இருந்தவரை அவரை கொள்ளையன், திருடன் என விமர்சிக்கும் பா.ஜ.க. தங்கள் கட்சியில் சேர்ந்ததும் வேட்பாளராகவும், நிர்வாகப் பொறுப்பு தந்தும் காப்பாற்றியிருக்கிறது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ஊழல் குற்றமில்லை, எந்தக் கட்சியிலிருந்து ஊழல் செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை!

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

அ.தி.மு.க., தி.மு.க. தமிழகத்தில் காலாவதி யான கட்சிகள் என்று அன்புமணி பேசியிருக் கிறாரே..?

இந்த இரு கட்சிகளின் தேவை தீர்ந்தது என்கிறாரா?… மக்கள், தொண்டர்கள் ஆதரவு இல்லையென்கிறாரா?… இந்த இரு கட்சிகளைவிட எந்தவிதத்தில் பா.ம.க., பா.ஜ.க.வின் தேவை அத்தியாவசியம்? அனைத்தையும் விளக்கிக் கூறினால் மக்கள் முடிவுசெய்துகொள்ள வசதியாக இருக்கும். காலாவதி என்றால் எந்த அடிப்படையில்? மருந்துப் பொருட்களுக்கு குறிப்பிட்ட நாட்கள்தான் பயன்பாடு இருக்கும். அதன்பின் அதனைப் பயன்படுத்தமுடியாது. காலாவதியாகிவிடும். கட்சிகளின் காலாவதி தேதியை முடிவுசெய்ய அன்புமணி ஏதும் சூத்திரம் கண்டுபிடித்திருக்கிறாரா?

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

இஸ்ரேல் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற சம்பவம் எதைக்காட்டுகிறது?

நெடுங்காலமாக இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார் பெஞ்சமின் நெதன்யாகு. அரசிடம் முற்றதிகாரம் இருக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர். சில வருடங்களாக உச்சநீதி மன்றத்தின் அதிகாரங்களைக் குறைப்பதற்காக சட்டம் இயற்றமுயன்று அதற்கெதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. சமீபத்திய பாலஸ்தீன தாக்குதல், இஸ்ரேலியர்கள் நூற்றுக்கணக்கான பேரை பாலஸ்தீனர்கள் பணயக் கைதிகளாகக் கொண்டுபோனது, காஸா மீது இரக்கமின்றி நடத்தப்படும் போர் இஸ்ரேல் மக்களிடம் எதிர்ப்பை விளைவித்துள்ளது. அதனால் பெஞ்சமின் பதவி விலகவும், தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் கூறி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. கூட்டத்தைக் கலைக்க துர்நாற்றம் கலந்த நீரைப் பீய்ச்சியது விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கிறது.