எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
"2026-ல் நான் யார் என்று காட்டுவேன்' என்கிறாரே சசிகலா..?
எதற்கு 2026-ல்? ஏன் இத்தனை நாள் சசிகலா மௌன மாயிருந்தார்? 2026 தேர்தலில் மட்டும் அவருக்கு எங்கிருந்து அசுர பலம் கிடைக்கும்…? தன் விரலாலே தன் கண்களைக் குத்திக்கொள்வதுபோல, அ.தி.மு.க.வின் பெருந்தலைகளே அ.தி.மு.க.வை பலவீனமாக்கத் துடிப்பது ஏன்? இது இயல்பாக நடக்கிறதா,…இல்லை யாரும் பின்னிருந்து இயக்குகிறார்களா? கொஞ்சம் புத்திக்கூர்மை இருந்தால் இடைவெளிகளை நிரப்பிக்கொள்ளலாம்!
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
"எந்த சின்னம் கொடுத் தாலும் வெல்வோம்' என சீமான் கூறியிருக்கிறாரே?
அந்தத் தன்னம்பிக்கை ஏன் முதலிலேயே வரவில்லை. தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கியுள்ளது. பொருத்தமான சின்னம்தான். எங்கள் சின்னத்தின் துணை இல்லாமல் எந்தக் கட்சியும் பிரச்சாரம், உரை மேற்கொள்ள முடியாது என சீமான் கெத்தாகப் பேசலாம்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா?
மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா சிறைக்குப் போய் ஒரு வருடம் கடந்துவிட்டது. ஆனால், கடந்த சில வாரங் களாகத்தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்புமேல் அழைப்பு அனுப்பிக்கொண்டே இருந்தது. முதலில் தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கவிதா, இப்போது கெஜ்ரிவால். இருவரையும் தேர்தல் நெருக்கத்தில் கைதுசெய்திருக்கிறது. இருவரும் உத்தமர்களா... ஊழல்வாதிகளா… என்பதை நீதிமன்ற பரிசீலனைக்கு விட்டுவிடுவோம். அவர்கள் கைதுசெய்யப் பட்ட நேரத்தைத் தீர்மானித்ததில் அரசியல் ஆதாயமும் காழ்ப்புணர்ச்சியும் இருப்பது தெளிவாகவே புலப்படுகிறது.
பி.காயத்ரி, திருவள்ளூர்
பொன்முடி பதவிப் பிரமாண விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஆளுநரைக் கண்டித்திருப்பது ஆளுநருக்கு இழுக்கா?… பா.ஜ.க.வுக்கு இழுக்கா?
அதிலென்ன சந்தேகம் ஆளுநருக்குத் தான். பொன்முடி வழக்கில் நீதியை நிலைநாட்டுவது ஆளுநரின் வேலையில்லை. உச்சநீதிமன்றமே தண்டனையை நிறுத்திவைப்பதாகச் சொன்னபின்பும், ஆளுநர் டெல்லிக்குப் போய் ஆலோசனை கேட்டு பரிந்துரையை நிராகரித்திருந்தார். அதையடுத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகிய நிலையில், “"ஆளுநர் என்ன செய்கிறார் என தெரிகிறதா?… அவருக்கு சட்டம் தெரியுமா,… தெரியாதா? யாரை அமைச்சரவையில் சேர்ப்பது என்பது முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டது'’ என்று கூறி பதவிப் பிரமாணம் செய்துவைக்க உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், ஆளுநர் வெறும் அம்பு என்பதால் அவரை எய்தவர்களுக்கும் சேர்த்துதான் இந்த இழுக்கு.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
பொன். ராதாகிருஷ்ணன்?
குமரி மாவட்டத்தின் மூத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவர். எட்டு முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 3 முறை வெற்றி களைப் பதிவு செய்திருக்கிறார். இளைஞர் விவகாரங்களுக்கான இணையமைச்சர், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் என உயர் பதவிகளை அலங்கரித்த வர். அவரது நீண்டகால கட்சி சேவைக்காகவும், குமரி மாவட்ட மக்களிடமுள்ள பரிட்சயத் துக்காகவும் மீண்டும் ஒருமுறை பொன்னாருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கியிருக்கிறது பா.ஜ.க. முன் பொரு முறை மோடி விவகாரத்தில் தமிழர்களை நன்றியற்றவர்கள் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன். குமரி மக்கள், எந்தக் கூட்டணி வேட்பாளர்களிடம் நன்றி பாராட்டப்போகிறார்கள் என்பது இப்போதைக்குத் தெளிவாக இல்லை.
இரா.முனியராஜ், புல்லங்குடி
என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்காவிட்டால் அமெ ரிக்கா ரத்தக்களறியாகும் என்ற ட்ரம்பின் அநாகரிகப் பேச்சு?
சிலருக்கு பலமே பலவீன மாகவும் இருக்கும். அத்தகையவர் களில் ட்ரம்பும் ஒருவர். சில சொல் வெல்லும்! சில சொல் கொல்லும்! இப்படியே தொடர்ந்து பேசினால், அவரது போட்டியிடும் வாய்ப்பை நீதிமன்றம் பறித்தாலும் பறிக்கும்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
ஜி.கே.வாசன், டி.டி.வி. தினகரன், சரத்குமார் ஆகியோ ருடனான கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு பலமா… பலவீனமா…?
நதியில் அடித்துச் செல்லப் படுபவனுக்கு துரும்பும் துடுப்புதான். இரு பிரதான கட்சிகளை எதிர்த்துப் போட்டியிடும் நிலையில் ஒவ்வொரு வரும் கொண்டுவரும் அரை சதவிகிதம், ஒரு சதவிகித வாக்குகளும் பல சமயங்களில் டெபாஸிட்டைக் காப்பாற்றலாம். கௌரவமான வாக்கு எண்ணிக்கையை எட்ட உதவலாம். அதேசமயம், கேட்டதற் கும் மேலே அள்ளிக் கொடுக்கப்படும் விஷயங்களால் மனதும் பையும் நிறைந்த திருப்தி அவர்களுக்கும் உண்டு.