எஸ். கதிரேசன், பேர்ணாம்பட்டு
சுய உதவிக்குழு பொருட் களைத்தான் பயன்படுத்து கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுவது பற்றி...?
பாலிவுட் நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள் விளம்பரங்களில் குறிப்பிடும் சோப்பையோ, ஊட்டச்சத்து பானத்தையோ நீங்கள் வாங்குவதில்லையா! அதுபோல அமைச்சர் உதயநிதி சுய உதவிக் குழு பொருட்களுக்கு விளம்பரம் செய்கிறார்போல. சம்பந்தப்பட்ட பாலிவுட் நடிகை களோ, ஆட்டக் காரரோ அந்தக் குறிப்பிட்ட சோப்பையோ, ஊட்டச்சத்து பானத்தையோ பயன்படுத்துகிறாரா என நம்மால் உறுதிப்படுத்த முடியாது. அமைச்சரும் சுய உதவிக்குழு பொருட்களைத்தான் பயன்படுத்து கிறாரா என நிச்சயமாக நமக்குத் தெரியாது. நோக்கம் நல்லதாக இருக்கும்போது, அதை நாமும் ஆதரிக்கவேண்டியதுதான்.
இரா.முனியராஜ், புல்லங்குடி
140 கோடி மக்களும் என் குடும்பம் என்கிறாரே மோடி?
அந்த உரிமையில்தான் நடுத்தர உணவகத்தில் குடிக்கும் காபி, டீக்குக் கூட ஜி.எஸ்.டி. போடுகிறார். அரிசி, கோதுமைக்கும் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி. இந்தியாவின் கடன் தொகையை 200 லட்சம் கோடிக்குப் பக்கத்தில் கொண்டுவந்து வைத்திருக்கிறார். எல்லாம் நம்ம புள்ளைங்கதான்.… அப்படி இப்படி முதுகை நெளிச்சாலும், பாரத்தைச் சுமந்துடும்கிற நம்பிக்கைதான். ஆனால் பாருங்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரத்தின் மூலம் வாங்கும் கோடிகளுக்கு வருமான வரி கிடையாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியில் டிஸ்கவுண்ட். இதைவைத்து யாரை, தன் குடும்பம்போல் நினைக்கிறார் என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.
எம். கல்யாணசுந்தரம், கும்பகோணம்
தேர்தல் ஆணையம் நேர்மையாக, நடுநிலை யோடு செயல்படுகிறதா?
தேர்தல் ஆணையத்தின் ஆணையர், துணை ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்ததை நீக்கி, அந்த இடத்தில் ஒரு புதிய கேபினெட் அமைச்சரை இடம்பெறச் செய்தால் போதும் என ஒரு மசோதா கொண்டுவந்திருக்கிறது பா.ஜ.க. கடந்த வருடம் டிசம்பரில், பா.ஜ.க.வுக்கு எதிராக பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராடி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவசர கோலமாக அந்த மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. நடுநிலைமை யோடு, நேர்மையாகச் செயல்படும் ஆணையர்களைக் கொண்டுவருவதற்கா பா.ஜ.க. இத்தனை சிரமப்பட்டிருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?
த.சத்தியநாராயணன், அயன்புரம்
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டோடு கமல் திருப்திபட்டுக்கொண்டாரே?
கிடைக்கப்போகும் பலாக்காயைவிட கையி லுள்ள களாக்காயே பெரிது என்பது பழமொழி. அதாவது, நாளைக்கு பலா கிடைக்கும்னு நம்பி, இன்னைக்குக் கையிலுள்ள களாக்காயை இழந்துடக் கூடாது. தேர்தலில் ஜெயித்தால்தான் மக்கள் நீதி மையத்துக்கான எம்.பி. ஆனால், இப்போதைய நிலையில் அடுத்த வருடம் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளில் ஒன்று இப்போதே நிச்சயமாகியிருக்கிறது. ஆதாயம்தான்... ஆனால் இந்த ஆதாயம் போதுமா… போதாதா… என்பதை அவரும் அவரது தொண்டர்களும்தான் முடிவுபண்ண வேண்டும்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
காமராஜர் ஆட்சி அமைய பா.ஜ.க.வுடன் இணைந்தேன் என் கிறாரே சரத்குமார்?
காமராஜருக்கும், மோடிக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்குமா வென்றால் அது இருவரும் பிரம்மச் சாரிகள் என்பதுதான். மற்ற அனைத்திலும் காமராஜர் தென்துருவம் என்றால் மோடி வடதுருவம். ஒப்பிடவே முடியாது. கிராமப் புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கேப்பையில நெய் வடியுதுன்னா கேட் கிறவனுக்கு எங்கே புத்தி போச்சுன்னு. அரசியல்வாதிகள் பேச்சைக் கேட்கும்போது, அந்தப் பழமொழியை நினைவில் கொள்ள வேண்டும்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
ரஷிய அதிபர் புதினின் தொடர்வெற்றி குறித்து?
சீனா, ரஷ்யாவில் எல்லாம் அதிபர் தேர்தல் வெற்றிகள் குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை. சீன அதிபர் ஜின்பிங், தன் காலகட்டம் வரை தான் மட்டுமே நிரந்தர அதிபர் என்பதுபோல் சட்ட வரையறை செய்துகொண்டார். ரஷ்யாவில், புதினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி வெளிநாட்டில் நூதனமாக விஷம்வைத்து கொலைமுயற்சிக்கு உள்ளாக்கப்பட்டார். அதில் தப்பித்துப் பிழைத்து, யார் விஷம் வைத்தார்கள் என்பதை விசாரித்துவிட்டு, பிறகும் துணிந்து ரஷ்யாவில் நுழைந்த நவல்னி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு முறையான அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தக்கூட அனுமதிக்கப்படவில்லை. மீறி அஞ்சலி செலுத்தியவர்கள் உளவுத் துறையினரால் குறிப்பு எடுக்கப்படுகின்றனர். இப்படி இருக்கையில் ரஷ்ய தேர்தலில் புதினை எதிர்த்து யார் நிற்கப்போகிறார்?… நின்றாலும்தான் அவர் வென்றுவிட முடியுமா?