பூ.மாறன், மணலி

"நான் தவறு செய்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன், பயந்து ஓடமாட்டேன்' என்கிறாரே குஷ்பூ....?

kushboo

இப்போது தி.மு.க. வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று குஷ்பு சொல்கிறார். அதேபோன்ற உரிமைத் தொகை களை மேற்கு வங்கம், ஹரியானாவில் வழங்க உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. தேர்தல் நடந்து முடிந்த மத்தியப்பிரதேசத்தில் ஏற்கெனவே உரிமைத்தொகை வழங்க ஆரம்பித்துவிட்டது. அதுவும் பிச்சைதானா?… மகளிர் தினத்தன்று சமையல் எரிவாயுவுக்கு பிரதமர் மோடி விலை குறைத்தது, பெண்களின் ஓட்டுக்களை பிச்சையெடுக்க, தாய்க்குலத்துக்கு இடப்பட்ட பிச்சையெனச் சொல்லலாமா? இதற்கும் சேர்த்து குஷ்பு கருத்து சொன்னால் நன்றாக இருக்கும். தவிரவும், பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு போன்று, ஆட்சியிலிருக்கும் தேசியக் கட்சியில் இருந்துகொண்டு ஓடமாட்டேன் என வீரவசனம் பேசுவது எளிது.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

பத்தாண்டு ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான் என்கிறாரே மோடி..?

ஆசை தீர காதல் செய்தவனுமில்லை. அழுக்குப் போக குளித்தவனுமில்லை என்பது சொலவடை. அதிகாரத்தின் மீதான ஆசைகூட அத்தகையதுதான். இன்னும் பத்தாண்டுகள் போனால்கூட அவரால் ட்ரெய்லரை ஓட்டி முடிக்க முடியாது. ட்ரெய்லரே போதுமா, முழுநீளப் படமா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்!

ம.பாலு, கொளத்தூர்

தமிழகத்திலே மிகப்பெரிய கட்சி "நாம் தமிழர்' கட்சிதான் என்கிறாரே சீமான்?

எந்த வரையறையில் சொல்கிறார் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலா வென்ற தொகுதிகள் அடிப் படையிலா, வாங்கிய வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையிலா, எதன் அடிப்படையில் இதைச் சொல்கிறார் என்பது புரியவில்லை. தொடர்ந்து பல தேர்தல்களாக நாம் தமிழர் கட்சி கூட்டணியின்றியே போட்டியிடுகிறது. பெரிய கட்சிகள் உள்பட மற்ற கட்சிகள் கூட்டணியமைத்தே போட்டியிடுகின்றன. அதன் அடிப்படையில் அவர் சொல்லக்கூடும். ஆனால் சீமானுக்கு இழக்க ஒன்றுமில்லை, பெரிய கட்சிகளுக்கு 1 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் கூட ஆட்சியமைக்கும் வாய்ப்பு போய்விடுகிற அபாயம் இருக்கிறது அல்லவா! அதனால், அவசியமென்றால் மன்சூர் அலிகானைக்கூட அவர்கள் பொருட்படுத்தித்தான் ஆகவேண்டும்!

வாசுதேவன், பெங்களூரு

அந்தக் காலத்தில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்ததற்கும், இந்தக் காலத்தில் ஓ.டி.டி.யில் சினிமா காண்பதற்கும் இடையிலான சினிமா துறையின் வளர்ச்சி?

முந்தைய காலகட்டத்தில் நம் தாத்தாக்கள் வண்டி கட்டிப் போய் நாடகம் பார்த்திருப்பார் கள். நம் முப்பாட்டன், கோவில் திருவிழாவில் ஏற்பாடு செய்யப்படும் வில்லுப்பாட்டு, ஆன்மீக சொற்பொழிவு, நாட்டுப்புறக் கலைகளை கண்டு, கேட்டு மகிழ்ந்திருப்பார். அப்பாமார்கள் காலத் தில் திரையரங்கம் கோலோச்சியது. அப்போதே தொலைக்காட்சியும் ஆட்டத்தில் இறங்கிவிட் டது. நாமும் நம் பிள்ளைகளும் ஓ.டி.டி. காலத் தவர்கள். நம் பேரன் காலத்தில் என்ன வருமோ! காலத்தில் வெகுவாகப் பின்னோக்கிப் போனால், ஆதி வேட்டை சமூகம் வேட்டையாடி எஞ்சிய நேரத்தில், தனது அனுபவத்தை குகைச் சுவர்களில் கூரான கற்கள் கொண்டு வரைந்து வந்த ஓவியங்களில் வந்து நிற்போம்.

வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி

வட கொரிய அதிபரைக்கூட நம்பலாம், ஆனால் போலி ஜனநாயகவாதிகளான இந்திய அரசியல்வாதிகளைத்தான் நம்பக்கூடாது என்கிறான் தென்கொரியாவில் பணிபுரியும் என் நண்பன், சரியா?

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் என்ற தும் அவரைப் பற்றி ஒரு சித்திரம் வந்துவிடு கிறது. அங்கு நிலவுவது சர்வாதிகார அரசு. நாட் டின் கொள்கைகளை அரசுதான் தீர்மானிக்கும். அதற்கேற்ப மக்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடு கிறார்கள். மாறாக, இந்தியாவை ஜனநாயகக் குடியரசாக நம்புகிறோம். ஆனால், அரசியல் வாதிகள் அதனை மெல்ல மெல்ல தேர்தல் ஜனநாயகத்தை நோக்கி இழுத்துச் செல்வதாக கருத்துகள் எழுகின்றன. நாம் ஜனநாயகக் குடியரசின் மக்களாக நடந்துகொள்ள வேண்டுமா… இல்லை தேர்தல் ஜனநாயக அரசின் மக்களாக நடந்துகொள்ள வேண்டுமா என்ற தடுமாற்றம் வருகிறது இல்லையா! ஆனால் இந்த மாற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் பெரும்பான்மை மக்கள் இருக்கும்வரை எதுவும் செய்வதற்கில்லை.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

நாட்டின் வளர்ச்சிக்காக பா.ஜ.க.வில் இணை கிறேன் என சரத்குமார் கூறியிருக்கிறாரே?

இத்தனை நாட்களாக நாட்டின் வளர்ச்சி யை சரத்குமார் தடுத்துவந்தார் என்பதில்தான் மாவலிக்கு சின்ன வருத்தம்.

Advertisment