மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
70 பண்டிதர்களால் இந்து சமூகங்களுக்கான நடத்தை விதிமுறைகளை வகுத்து, அதை உ.பி. பிரக்யாராஜ் மகா கும்பமேளாவில் வெளியிடப் போகிறார்களாமே…?
ஏற்கெனவே மனுதர்மம், அது இதுவென நடத்தை விதிமுறைகள் ஆயிரமாயிரம் இருக் கின்றன. அவை காலத்துக்கேற்றவாறு இல்லையென்றுதான் பலவற்றை யும் தவிர்த்துவிட்டு புதிய நடைமுறைகளைப் பின் பற்றுகிறோம். இனியும் கணவனை இழந்தவர்கள் நெருப்பில் எரியவேண்டும் என்றோ, தெருவில் எதிர்ப் படாமல் ஒடுங்கி வாழ வேண்டுமென்றோ நடை முறை கொண்டுவந்தால் காலத்துக்குப் பொருத்தமாக இருக்குமா? அயல்நாட்டுக்கு பயணப்பட்டால் சமூக விலக்கு செய்யவேண்டும் என்பதும் இந்து சமூக நடைமுறைகளில் ஒன்றுதான். அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகளில் பிழைப்புக்காகப் போனவர்களை இந்த சாமியார்கள் இந்துக்கள் இல்லையென்று விடுவார்களா? நாட்டின் மீதும், சமூகத்தின் மீதும் சாமியார்கள் ஆதிக்கம் செலுத்தினால் என்னவாகும் என்பதை ஐரோப்பிய நாடுகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே அனுபவப்பூர்வ மாக பார்த்துவிட்டுத் தான், அரசியலிலிருந்து மதத்தை விலக்கி வைத்தன. அதை மீண் டும் கொண்டுவந்தால் இந்தியா இருபத்தொன் றாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுக்குப் போய் சீரழியும்!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு புத்தகத்தைப் பார்த்து தேர் வெழுதும் புதிய நடைமுறை குறித்து சி.பி.எஸ்.சி. பரிசீலிக்கிறதாமே?
சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திலுள்ள புத்தகங் களைப் பார்த்திருக்கிறீர்களா! பார்த்து தேர்வெழுத அனுமதித்தாலும், அதனை முழுவதுமாக, நன்கு படித்தவர்களால் மட்டுமே, விடையளிக்கவேண்டிய பதில் எங்கிருக்கிறது என பார்த்து எழுதமுடியும். தேர்வன்றைக்கு புத்தகத்தைப் புரட்டுபவர்களால் சரிவர எழுத முடியாது. மற்றபடி புதிய நடைமுறையின் பொருத்தப்பாடு குறித்து கல்வியாளர்கள் பதிலளிப்பதுதான் பொருத்த மானதாக இருக்கும்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
அரசியலமைப்புச் சட்டமே நமது பேராயுதம். அதை ஒழிக்க நினைக்கும் சக்திகளிடமிருந்து பாதுகாப்போம் என்கிறாரே நீதிபதி சந்துரு?
நமது மனதில் காலாகாலமாக இங்கே ஜனநாயகம் நிலவிவருவதாக ஒரு மனப்பதிவு உள்ளது. கி.பி.- கி.மு. என இரண்டாக வரலாற்றைப் பிரித்தால் கி.மு.வுக்குப் பின்பான இரண்டாயிரம் ஆண்டுகளுக்கே முழுமையாக நம்மிடம் வரலாறு இல்லை. இருக்கும் வரலாற்றிலும் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாகத்தான் ஜனநாயகம் நிலவுகிறது. அதற்குமுன்பு காலனிய ஆதிக்கம், அந்நிய ஆட்சி, அரசர்கள் ஆட்சி, குறு மன்னர்கள் ஆட்சி, இனக்குழு ஆட்சி என பல்வேறு ஆட்சிமுறைகளுக்கு உட்பட்டிருந் திருக்கிறோம். ஜனநாயகத்தை நாம் பாதுகாக்காவிட்டால் சர்வாதி காரிகள் ஆட்சிக்கு வரவே செய்வார்கள். அரசியலமைப்புச் சட்டத்தை தொடர்ச்சியாக சிதைக்க நினைக்கும் சக்திகளைப் பார்த்து கவலைகொண்டே நீதிபதி சந்துரு அந்த வார்த்தைகளைப் பேசியுள்ளார்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனீ
தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சின்னம் அச்சிடப்பட்ட ஆணுறைப் பாக்கெட்டுகளை வெளியிட்டு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியிருக்கிறார்களே?
முதன்முதலில் சானிட்டரி நாப்கின், ஆணுறை போன்றவை வந்தபோது அதை கடைகளில் சென்று கேட்டுப் பெற தயக்கம் நிலவியது. அரசாங்கமே மக்களின் மனத்தடையைத் தகர்க்க விளம்பரங்கள் எல்லாம் செய்தது. இது நடந்து கால் நூற்றாண்டு ஆகியிருக்கும் நிலையில் ஆந்திரதேச கட்சிகள் ஆணுறை பாக்கெட்டில் தங்கள் கட்சி விளம்பரங்களை மேற்கொண்டால் என்ன தப்பு. ஆணுறைகளை யார் வாங்கப் போகிறார்கள்? ஒன்று, குடும்பக் கட்டுப்பாடு நோக்கிலிருக்கும் ஆண்கள் அல்லது விலைமகளிரிடம் இன்பம் துய்க்கும் ஆண்கள். இந்த இரண்டு தரப்பினரும் ஆணுறைகளைப் பயன்படுத்துவது ஆரோக் கியத்துக்கும் மக்கள்தொகை கட்டுப்பாடுக்கும் நன்மைதானே.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
வாக்குப்பதிவு எந்திரத்தை நமக்கு தயாரித்துத் தரும் ஜப்பான் நாட்டிலேயே அந்த எந்திரத்தை பயன்படுத்துவதில்லை என்று சீமான் சொல்கிறாரே?
அடிப்படையே தவறு. பெங்களூரி லுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஹைதராபாத்திலுள்ள எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் இரண்டும்தான் இந்திய வாக்குப்பதிவு எந்தி ரங்களைத் தயாரிக்கின்றன. ஜப்பானுக்கும் நமக்கும் மக்கள் தொகை வித்தியாசம் இருக்கிறது. இந்த எந்திரங்களைத் தயாரித்து தரும் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் நான்கு பா.ஜ.க.வினர் இருப்பதும், எந்தக் கட்சிக்கு நாம் ஓட்டுப் போட்டோம் என்பதை அறிவிக்கும் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு இரண்டும் சமமாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்யவேண்டும் என்பதும்தான் தற்போது பிரதான பிரச்சினைகள்.