எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
2 ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது பற்றி…?
இந்திய ரிசர்வ் வங்கி 2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் செல்லும் என அறிவித்திருக்கிறது. எனவே, அவற்றைத் தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் 2 ரூபாய் அச்சிடுவதை 1995-லேயே இந்திய அரசு நிறுத்திவிட்டது. அபூர்வமாகவே இந்த நோட்டுகள் கிடைக்கும். அதனால் உங்களிடம் 2 ரூபாய், 1 ரூபாய் நோட்டுகள் நல்ல நிலையில் இருந்தால், பழைய நாணயங்கள், நோட்டுகள் சேகரிப்பவர்கள் அதன் உண்மையான விலையைவிட சற்று கூடுதல் விலை கொடுத்தே வாங்கிக் கொள்வார்கள். முக்கியமாக செல்லாமல் போய்விட்ட 5 பைசா, 25 பைசா, 50 பைசா வைத்திருப் பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். புதிதாக பிரியாணிக் கடை திறப்பவர்கள், அறிமுகச் சலுகையாக இந்த நாணயங் களைக் கொடுத்து பிரியாணி வாங்கிக்கொள்ளலாம் என்றுதான் அறிவிக்கிறார்கள்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
பொதுநலனுக்காகவும் நாம் தேர்ந்தெடுத்த பாதைகளுக்காகவும் சிறை செல்கிறோம் என்கிறாரே அரவிந்த் கெஜ்ரிவால்?
எந்தத் தலைவராக இருந்தாலும் நாம் செய்த ஊழல்களுக்காகவும் மோசடிகளுக்காகவும் சிறை செல்கிறோம் என்றா சொல்வார்? ஆனால் இன் னொருபுறம் இந்தியாவின் தலைநகரமாகத் திகழும் டெல்லியை பத்தாண்டுகளுக்கும் மேலாகவே ஆம் ஆத்மி யிடமிருந்து கைப் பற்ற முடியவில் லையே என்ற கோபம் பா.ஜ.க.வுக்கு இருக்கிறது. எந்த ஒரு மாநிலத்தைவிடவும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ.க.வினரிடமிருந்து கூடுதல் நெருக்கடிகளுக்கு உள்ளாகிவருகின்றனர். அந்த வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவது பொருத்தமானதும்தான்.
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
வயது, திறமை, பதவி -இவற்றில் எதற்கு மரியாதை கொடுக்கவேண்டும்?
மூன்றுக்குமே மரியாதை தரவேண்டியதுதான். வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை தருவது இந்தியப் பண்பாடுகளில் ஒன்று. திறமையை நாம் எப்போதும் மதித்தாகவேண்டும். பதவியிலிருப்பவரை நாம் அவமரியாதை செய்தாலோ, உரிய மதிப்பைத் தராது போனாலோ அதற்கான எதிர்வினையைச் சந்திக்கவேண்டி யிருக்கும். இதில் எதுவொன்றைக் கூடுதலாக மதிப்பீர்கள் என்பது உங்களது சொந்தத் தேர்வு.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
ஆந்திராவில் மீண்டும் காங்கிரஸ் கை ஓங்குமா?
ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா வரவு காங்கிரஸுக்குப் பலம் சேர்க்கும்தான். ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்த நிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. இவர்கள் இருவரையும் தாண்டி கட்சியை வளர்த்தெடுக்க காங்கிரஸ் பிரம்மபிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும். முதல்வரின் தங்கை காங்கிரஸுக்கு மாறுவது தொண்டர்களுக்கும் கட்சிக்கும் பூஸ்ட் கொடுக்கும்தான். ஆனால் “"கை'’ ஓங்குவதற்கு அதுமட்டுமே போதாது.
இரா.கமல்ப்ரியன், ஈரோடு
"தமிழ்நாட்டில் தீண்டாமை அதிகம்' என்கிறார் ஆர்.என்.ரவி.… "அவருக்கு மாலைக்கண் போல் தெரிகிறது' என்கிறார் கே.எஸ். அழகிரி.… மாவலி என்ன சொல்கிறார்?
2021-ல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், மாநில வாரியாக அட்டவணை ஜாதியினர், பழங்குடிகளுக்கு எதிராகப் பதிவாகும் வழக்குகள், குற்றங்களின் அடிப்படையில் ஒரு பட்டியல் வெளியிட்டது. அதில் முதலிடத்தில் இருப்பது உத்தரப் பிரதேசம். அடுத்த இடத்தில் ராஜஸ்தான், மூன்றா வது, நான்காவது, ஐந்தாவது இடத்தில் மத்தியப் பிரதேசம், பீஹார், ஒடிஸா. இதில் தமிழகத்தின் பெயர் எங்காவது இடம் பெற்றிருக்கிறதா?…ஆனால் ஆணவக் கொலை விவகாரங்கள், தண்ணீர்த் தொட்டியில் மலம் கலப்பது போன்ற விவகாரங் களை தமிழக அரசு கூர்ந்து கவனித்து தீவிர நட வடிக்கைகள் எடுக்காதபட்சத்தில் எதிர்காலத்தில் பட்டியலில் முன்னணிக்குப் போகும் வாய்ப்பு இருக்கிறது தான். ஆளுநர் ரவி, தமிழகத்தின் எதிர்மறையான விவகாரங்களுக்கு மட்டும் கண், காது, வாயைத் திறந்துவைத்துவிட்டு, நல்ல விஷயங்களுக்கு அவற்றை மூடிக்கொள்கிறார். வேறென்ன சொல்ல?
ரா.ராஜ்மோகன், முட்டியூர்
பா.ஜ.க. தலைவர் அண்ணா மலையின் முதல்வர் கனவு "இலவு காத்த கிளி' கதை போன்றது. 2026-க்குப் பின் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மட்டுமே என்கிறாரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
அ.தி.மு.க.வினருக்கு தற்காலிகத்தின் மேல் நம்பிக்கையே கிடையாதுபோல. முன்பு நிரந்தர பொதுச்செயலாளர்,…தற்போது நிரந்தர முதல்வர். பகல் கனவு இந்தியாவில் தடை செய்யப்பட வில்லை. காண் பவர்கள் கண்டு மகிழட்டுமே!