சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

ஆலயத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அறிவாலயம் என்று பெயர் வைத்துள்ளனர் என்கிறாரே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை?

அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். பீடத்தில் எதை வைத்து வழிபடுவது என்று வரும்போது புராண நாயகர்களையும், புரட்டுகளையும் வழிபடுவதற்குப் பதில் அறிவை வைத்து வழிபடுவது என்பது அவர்களது தேர்வு. மக்களை படிநிலை வரிசைப்படி வைத்து அடுக்கி, சாதிகளையும் பேதங்களையும் ஏற்படுத்தி, அதற்கு கடவுளையும் காரணமாகக் காட்டி ஏய்க்கும் நடைமுறைக்குப் பதில், சமத்துவத்தை முன்வைத்து பேதங்களைக் களையும் பகுத்தறிவை வணங்குவது என்பது அவர்களது தேர்வு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆலயம், கோவில், வழிபாடு என்றிருந்த சமூகத்தில், மக்களுக்கு நெருக்கமான சொற்கள் வேண்டுமெனக் கருதி அறிவாலயம் என வைத்திருக்கலாம். அறிவுக் கோட்டம், அறிவுச் சதுக்கம் என்றாலும் எதுவும் கெட்டுவிடப் போவதில்லை.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

Advertisment

முறைகேடு வழக்கில் கைதான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கவர்னர் போய் நேரில் சந்தித்தது சரியா?

உபதேசமெல்லாம் ஊருக்குத் தான். தனக்கென்று வரும்போது எந்தக் கட்சிக்காரர்களும் தங்கள் கட்சியில் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டில் அகப்பட்டவர் களைத் துரத்தி விட்டுவிடுவ தில்லை. ஆனால் சமீபமாக கட்சிக்கு அப்பாற்பட்டு இருந்த ஆளுநர்களும் கட்சிக்காரர்களைப் போல் மாறுவதும், அரசியல்வாதிகளைப்போல் நடந்துகொள்வதும் கொஞ்சம் வருத்தமான விஷயம்தான். அடுத்த கட்சியிலிருந்து வந்தவர்களையே பா.ஜ.க.வின் ஊழல் மெஷின் வெளுத்தெடுக்கும்போது, தங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களை அத்தனை எளிதில் கைவிட்டுவிடுமா?

mm

Advertisment

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

பாலுக்கும் காவலனாக.. பூனைக்கும் தோழனாக இருக்க ஆசைப்படுகிறாரே... எடப்பாடி பழனிசாமி?

தங்களது அரசியல் மைலேஜுக்காக பா.ஜ.க. ராமர் கோவிலை பயன்படுத்தும்போது, பிற அனைத்துக் கட்சிகளும் தங்களால் ஆன மட்டும் அதைத் தடுக்கவும் புறக்கணிக்கவும் நினைக்கும். அதற்கான சாக்கு ஆளாளுக்கு வேறுபடும். சிறுபான்மையினர் ஓட்டும் வேண்டும், பெரும்பான்மை மக்கள் மனதும் புண்பட்டுவிடக்கூடாது. பா.ஜ.க.வுக்கு கோபமும் வந்துவிடக்கூடாது. எத்தனை விஷயங்களைப் பார்க்கவேண்டியிருக்கிறது எடப்பாடி. அவர் தனக்குத் தோதான கருத்துகளைச் சொல்லிவிட்டு, அதில் கலந்துகொள்ளாதிருக்க கால் வலி என சமாளித்திருக்கிறார். 22-ஆம் தேதிவரை கால்வலி நீடித்தால் சரிதான்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

கோர்ட் வழக்குகள் எல்லாம் எனக்கு ஜுஜுபி என செல்லூர் ராஜு கூறியிருக்கிறாரே?

அது எல்லா அரசியல்வாதிகளும் கூறுவதுதான். வழக்கும் வசமானதாக இருந்து, விசாரணை அமைப்புகளின் பிடியும் உடும்புப் பிடியாக இருந்தால் அப்போது வெளிப்படும் டயலாக் வேறுவிதமாக இருக்கும். பின் நெஞ்சுவலி, சர்க்கரைத் தொந்தரவு, இரத்த அழுத்தம் என சிறையைத் தவிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் தானாகக் கிளம்பிவரும்.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

"நான் அ.தி.மு.க.வில்தான் இருக்கிறேன். நான் எதற்கு புதுக்கட்சி துவங்கவேண்டும்' என்கிறாரே ஓ.பி.எஸ்?

ஓ.பி.எஸ். மட்டும்தான் அப்படி சொல்லிக் கொள்கிறார். எடப்பாடி அதை அங்கீகரிக்க மறுக்கிறார். ஒவ்வொரு முறை விசாரணைக்குப் பின்பான தீர்ப்பும் அதை ஒப்புக்கொள்வதாய் இல்லை. இரட்டை இலையில் ஒற்றை இலைகூட ஓ.பி.எஸ். வசம் சிக்கப்போவதாய்த் தெரியவில்லை. மிச்சமிருக்கும் ஒரேவழி புதுக்கட்சி. அல்லது வெட்கத்தை விட்டு எடப்பாடியிடம் போய் சமாதானம் பேசுவதுதான்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

பா.ஜ.க.வின் மத்திய இடைக்கால பட்ஜெட் எப்படி இருக்கும்?

நிச்சயம் கடுமையாக இருக்காது. சலுகைகளுக்கான வாய்ப்புகள் கூடுதல். புதிய வரிகள் மிகக்குறைவாக இருக்கும் அல்லது இருக்காது. நிதியமைச்சருக்கு மத்திய, அடித்தட்டு வர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பது ஞாபகத்துக்கு வந்த பட்ஜெட்டாய் இருக்கும்.

ஆர். மீனாட்சி, திண்டிவனம்

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் குடியரசுக் கட்சி சார்பில் கலந்துகொண்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அயோவாவில் படுதோல்வி அடைந்துள்ளாரே?

இன்னொரு நாட்டுத் தேர்தலில் அதிபர் போன்ற தலைமைப் பதவிக்குப் போட்டியிடும்போது, வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பொதுவாகவே வாய்ப்புகள் குறைவுதான். அபூர்வமாக சில சமயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். ரிஷி சுனக்கும், கமலா ஹாரிஸுக்கும் உயர்ந்த பொறுப்புகளுக்கு வந்தபோது மகிழ்ந்தோம். இப்போது ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.