நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
"கோவில்களை மாநில அரசு நிர்வகிக்கக்கூடாது' என்ற மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து?
என்ன இருந்தாலும் பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸ். பின்னிருந்து இயக்கும் கட்சிதானே.. அதனால் கோவில்களில் பிராமணர்களைத் தவிர பிற ஜாதியினர் அர்ச்சகராவதைத் தடுப்பது, கோவில் நிர்வாகத்தை மாநில அரசு நிர்வகிக்கக்கூடாது என்ற பெயரில் பின்வழியாக பிராமணர் உள்ளிட்ட சில ஜாதியினரின் நிர்வாகத்துக்குள் கொண்டுவருவதை நடைமுறைப்படுத்துவதை நோக்கித்தான் செயல்படும். மாநில அரசு நிர்வகிக்கும்போதே பல கோவில்களில் சிலைகள், நகை கள், உண்டியல் வசூல்கள் மாயமாகிவிடுகின்றன. பழைய முறை வந்தால் அவ்வளவுதான்.
வாசுதேவன், பெங்களூரு
மழை இன்னும் நிற்கவில்லையே?
இயற்கையின் பிரியம் அப்படியென்றால் நாமென்ன செய்ய! உலகெங்குமே முறை தவறிய பருவநிலைகளும், கொட்டித் தீர்க்கும் மழையும், அதீத வெள்ளங்களும், முன்னெப்போதும் காணாத பனிப்புயல்களும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கின்றன. முடிந்தவரை அரசும் மக்களும் உஷாராக இருந்துகொள்ள வேண்டியதுதுதான்.
என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
பொங்கல் நேரத்தில் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் தேவைதானா..?
வள்ளுவர் ஒரு காரி யத்தை மேற்கொள்ளும்போது உரிய காலமறிந்து செய்வது முக்கியம் என்கிறார். போராட் டக்காரர்களும் அதற்கேற்ப, தங் கள் போராட்டத்துக்கு எந்தக் காலகட்டம் பொருத்தமாக இருக்கும் எனத் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். மக்கள் ஊருக்குப் போவது தடைப்பட் டால், அவர்களின் கோபம் அர சின்மேல் திரும்பும். அதனால் தங்கள் கோரிக்கை நிறைவேற கூடுதல் சாத்தியம் உண்டு என்பது போராட்டக்காரர்களின் கணக்கு. அரசும் போராட்டத்தைச் சமாளிக்க ஒரு கணக்கு வைத்திருக்கும்
கே.சங்கர், தென்காசி
"ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு நிகரல்ல' எனும் கார்த்தி சிதம்பரத்தின் கருத்து காங்கிரஸில் சர்ச்சையாகியிருக்கிறதே..?
யாரும் யாருக்கும் நிகரல்ல. குஜராத் கலவரம், மணிப்பூர் அமைதியின்மை, குடியுரிமை திருத்த மசோதாக்கு எதிரான போராட்டங்களில் ஒடுக்குமுறை இதிலெல்லாம் யார் மோடிக்கு நிகராக வந்துவிடமுடியும்? முதலில் தன் தந்தை சிதம்பரத்துக்கு இணையான சாதனைகளை கார்த்தி சிதம்பரம் மேற்கொள்ளட்டும். அதன்பிறகு ராகுலை விமர்சிக்க கிளம்பட்டும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
வங்கதேசத்தில் 5-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமரானது பற்றி?
5-வது முறையாக வெற்றி. ஆனால் ஆளும்கட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஒடுக்குமுறையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தேர்தலிலே போட்டியிடவில்லை. குறைந்த வாக்குப் பதிவு, எதிர்க்கட்சியான நேஷனலிஸ்ட் கட்சி தேர்தலைப் புறக்கணித்தது, தேர்தல் நடைமுறைகளில் ஆளுங்கட்சியின் மிதமிஞ்சிய செல்வாக்கு ஆகியவற்றை அமெரிக்கா கண்டித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்பட்ட நாட்டில் மறைமுகமாக மக்களும் ஒடுக்கப்படுவார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
அ. ஸாதியா அம்ரீன், குடியாத்தம்
"இஸ்லாமியப் பெண் மறுமணம் செய்தாலும், முதல் கணவரிடம் மெஹர் பெற உரிமை உண்டு...' என்ற மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு?
எந்த மதமாக இருந்தாலும், காலகாலமாக ஆணை அண்டியே பெண்கள் வாழ்ந்துவந்துள்ளனர். இதனால் ஒரு ஆண், பெண்ணைக் கைவிடும்போதோ, விவாகரத்துச் செய்யும்போதோ பெண் கதியற்றவளாகிறாள். இன்றைக்கு இந்த நிலை மாறிவருகிறது. பெண்களும் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் நிலையை எட்டிவருகின்றனர். அதேசமயம், சுயகாலில் நிற்க முடியாதவர்களுக்கும், நியாயமாகச் செய்யவேண்டிய கடமைகளை ஆண்கள் செய்யத் தவறும்போதும் நீதிமன்றங்களின் இடையீடு தேவைதான்
செந்தில்குமார்.எம், சென்னை
எதை நினைத்து நீங்கள் அதிகம் கவலையடைந்தீர்கள்?
ஒடிஸா மாநிலத்தில் ஒரு தாய். அவளுக்கு இரு மகன்கள். கணவன் இறந்ததால் மூத்த மகனோடு வாழ்ந்துவந்திருக்கிறார். அவனும் நோய்வாய்ப்பட்டு இறந்தநிலையில் இளைய மகன் தாயைக் கண்டுகொள்ளவே இல்லை. பசி பொறுக்காமல், இளைய மகன் தோட் டத்தில் காலிஃப்ளவர் ஒன்றைப் பறித்துச் சமைத்துச் சாப்பிட்டதற்காக, தன் வீட்டருகே உள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்திருக்கிறான். இதை யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டதில் வைரலாகிவிட்டது. பெற்று வளர்த்தவளுக்கு ஒரு காய்கறியைக் கூட தர மனமில்லாத மகன்களை நினைத்துதான் பெரிதும் கவலையடைந்தேன்.