நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை தி.மு.க. கொடுக்காது என குஷ்பூ கூறியிருப்பது குறித்து?
சரி, நாளைக்கு பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைகிறது என வைத்துக்கொள் வோம். அதில் இருக்கும் கட்சிகள் கேட்கும் தொகுதிகளை எல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கு பா.ஜ.க. விட்டுக் கொடுத்துவிடுமா? தேர்தலில் எத்தனை சீட்டு, எந்தத் தொகுதி என்பது எல்லாமே பேரம்தான். எட்டு கேட்டால் நான்கு கிடைக்கும். நான்கில் கேட்ட தொகுதிகள் 2 இருக்கும். கேட்காத தொகுதிகள் 2 இருக்கும். எந்தக் கட்சி வலுவுடன் இருக்கிறதோ, அது தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும். இது அரசியல் பாலபாடம்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா கடன் வலையில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஐ.எம்.எஃப். அறிக்கையைச் சுட்டிக்காட்டி பொருளா தார ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்திருப்பது?
தாராளவாதப் பாதையில் நடையிட்டது முதலே இந்தியா கடன் சுமையுடன்தான் இருக்கிறது. 2014-ல் பா.ஜ.க. அரியணை ஏறும்போது இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் தொகை 55 லட்சம் கோடி. தற்போதைய கடன் தொகை 160 லட்சம் கோடியையும் தாண்டிவிட்டது. இத்தனை பெரிய தொகைக்கு நாம் மாதந்தோறும் வட்டி கட்டியாக வேண்டும். பட்ஜெட்டில் வருடா வருடம் விழும் துண்டுகளைத் தாண்டி அதிக வருவாய் வருமளவுக்கு நம் பொருளாதாரம் உயரவேண்டும். அதனால் ஐ.எம்.எஃப். சொல்லியிருப்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ராமர் கோவில் கட்டுமானம் உள்ளிட்ட பிற செலவுகளுடன் சேர்த்து 18,000 கோடி செலவு. கோவிலுக்கு ஏற்றவாறு சுற்றியுள்ள கடைகளை இடித்து, சாலைகளை அகலப்படுத்தத் திட்டமிட்டிருக் கிறார்கள். இது இன்னும் சில ஆயிரம் கோடிகளை கூடுதலாக்கும். தேர்தல் ஆதாயமிருப்பதால், ராமர் கோவில் திறப்புவிழாவை பெரும் செலவுகளுடன் உ.பி. அரசு திட்டமிட்டிருக்கும். படேல் சிலை முதல் இதுபோன்ற திரும்ப வருமானம் அளிக்காத கௌரவச் செலவுகளில் அரசுகள் செலவிடும்போது இந்தியா கடன் வலையில் சிக்க வில்லையென்றால்தான் ஆச்சரியம்.
மஞ்சுவாசுதேவன், பெங்களூரு
இவ்வளவு முன்னேறியும் இயற்கைச் சீற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே?
இயற்கையை எத்தனையோ விஷயங்களில் மனிதன் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறான். ஆனால் தற்போதுவரை இறுதியாக இயற்கைதான் மனிதனை வென்று வந்திருக்கிறது. புவியில் ஒரு சமநிலை பேணப்பட்டு வருகிறது. அதைத் தொந்தரவு செய்யாமல் இயற்கையின் கொடைகளை அனுபவிக்கும்வரை மனிதனுக்குத் தொந்தரவில்லை.
என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சைக்கு முடிவுகட்டாமல் பா.ஜ.க.வின் வெற்றியைத் தடுக்கமுடியாது என்று சாம் பிட்ரோடா கூறுகிறாரே?
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வந்ததுமுதலே சர்ச்சையும் இருந்து வந்திருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவில் சந்தேகத்தை எழுப்புவது மட்டும் போதாது. என்ன குழறுபடி, எப்படி செய்யப்படுகிறது என்பதையும் ஆதாரத்துடன் நிறுவவேண்டும். வெறும் குற்றச்சாட்டு வேலைக்காகாது.
பா.ஜெயப்பிரகாஷ், தேனீ
"2080-ல் வல்லரசுகளான- சீனா, அமெரிக்காவையே இந்தியா மிஞ்சும்' என்று பொருளாதார வணிக ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது பற்றி?
15, 16-ஆம் நூற்றாண்டு களில் உலகப் பொருளா தாரத்தில் கணிசமான பகுதி இந்தியாவையும், சீனாவையும் சார்ந்தே இருந்தது. அன்றைக்கு அமெரிக்கா பொருட்படுத் தும் சக்தியே கிடையாது. தொழிற்புரட்சி, அறிவியல் புரட்சி, காலனி ஆதிக்கம் இவற்றின் துணையுடன்தான் உலகம் கவனிக்கும் கண்டமாக ஐரோப்பா மாறியது. அதனால் 2080-ல் இந்தியா பொருளாதார வல்லரசானால் நல்லதுதான். ஆனால், வெறும் ஜோதிடம் வேலைக்காகாது. ஆட்சியில் இருப்பவர்களும், தொழி லதிபர்களும், மக்களும் ஒன்றுசேர்ந்து அதனைச் சாதிக்கவேண்டும்.
ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு
கடவுள் இல்லை என்று சொல்பவர்களைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளாரே?
வேத காலத்திலே கடவுள் மறுப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர் களை கடவுள் எதுவும் செய்துவிடவில்லை. கடவுள் மறுப்பாளர்களுக்கு ஆபத்து எப்போது வந்தாலும் கடவுள் நம்பிக்கையாளர்களாலேயே வந்துள்ளது. ரஜினிகாந்த் அழவோ, சிரிக்கவோ செய் யாமல் கடவுளின் கையில் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நடிப் பில் கவனம் செலுத்தினால் போதும்.