என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
இனி தே.மு.தி.க. என்னவாகும்..?
நடந்துமுடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. ஒரு இடத்தைக்கூட வெல்லாததுடன், ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்கு களையே பெற்றிருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு சதவிகிதம் 2.19. கட்சி தொடங்கிய வேகத்தில் 8.4 சதவிகித வாக்குகளைக் குவித்து ஆச்சரியப்படுத்திய கட்சி, சமீபத்தில் அடுத்தடுத்து சரிவையே சந்தித்து வருகிறது. அந்தக் கட்சியின் பிரதான மக்கள் ஈர்ப்பு சக்தியான விஜயகாந்தின் மரணத்துக்குப் பின், அதனைத் தூக்கிநிறுத்த பிரம்மபிரயத்தனம் செய்யவேண்டும். அதனை தற்போதைய தலைவர்களால் செயல்படுத்த முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
குஜராத் மாநிலம் பூரண மதுவிலக்கு விஷயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிவருகிறதாமே?
தேசத்தந்தை காந்தியை கௌரவிக்கும் விதமாக, குஜராத்தில் மதுவிலக்கு அனுஷ்டிக்கப்படுகிறது. குஜராத்திகள் சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் மது அருந்தாமல்தான் இருப்பதாக நினைக்கிறீர்களா? குஜராத்தின் தலைநகரான காந்தி நகரில் இந்தியாவின் முதல் நிதிச் சேவை மையமான குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்சிட் கட்டப்பட்டு வருகிறது. அல்ட்ரா மாடர்ன் இடமான இங்கு வருபவர்களுக்கு மட்டும் பெர்மிட் வழங்கப்பட்டு குடிக்க அனுமதியுண்டு என செய்தி. ஆனால், சாதாரண மக்களுக்கும் கூட பே ஆன் டெலிவரி மாடலில், ஆர்டர் செய்தால் மது தாராளமாகக் கிடைக்கும் என்கிறார்கள். வெளித்தோற்றத்துக்கு மதுவிலக்கு. உண்மையில் மதுப்புழக்கம். இத்தகைய போலி மரியாதையை காந்தியே விரும்பமாட்டார். அதற்குப் பதில் தேசத்தந்தையை மதிப்பவர்கள் குடிக்காமல் இருந்து கொள்ளட்டும் என விட்டுவிட்டு, மற்றவர்கள் தேவைக்கு மதுவை அனுமதிக்கலாம்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் மத்திய பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளதே?
கூத்து முடிந்தால் வேஷத்தைக் கலைத்துத்தானே ஆகவேண்டும். தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் 500 ரூபாய்க்கு சிலிண்டர் தருவதாகச் சொன்னது. பா.ஜ.க. இன்னும் கொஞ்சம் இறங்கி 450 ரூபாய்க்கு சிலிண்டர் தருவ தாகச் சொன்னது. மக்கள் பா.ஜ.க.வை அரியணையில் அமர்த்தி விட்டார்கள். ஆனால், மாநிலம் முழுவதுமிருந்து சிலிண்ட ருக்கான மானியம் என் கணக்குக்கு வரவில்லை எனும் கூக்குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. மானியத்தை நிறுத்தும் எண்ணமில்லை என்கிறது பா.ஜ.க. ஆனால் மானியமாக வரவேண்டிய 460 ரூபாயோ பலருக்கும் வரவில்லை. அதுசரி, உங்கள் சிலிண்டருக்கு தற்போது எவ்வளவு மானியம் வருகிறது. 20 ரூபாயா?… 25 ரூபாயா?…ஆரம்பத்தில் எவ்வளவு மானியம் வந்தது என்பது நினைவிருக்கிறதா!
வாசுதேவன், பெங்களூரு
ஒரு காலத்தில் காய்கறிகள் வாங்கினால் இலவசமாகக் கிடைத்த கறிவேப்பிலை, கொத்துமல்லிக்கு இப்ப காசு தரவேண்டியிருக்கிறதே?
ஒரு காலத்தில் நம் வீட்டிலேயே கறிவேப்பிலைச் செடி நின்றுகொண்டி ருந்தது பறித்துக்கொண்டிருந்தோம். பிறகு சந்தை, சாலையோரங்களில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தோம். உரிமையாகக் கொத்துமல்லி, கறிவேப்பிலை வாங்கிச் சென்றோம். இப்போது ஏக்கர் கணக்கில் விரிந்திருக்கும் மால்களிலும், பிக் பாஸ்கெட், க்ரோப்ளேஸ், டன்சோ, அமேசான் மாதிரியான செயலிகளிலும் காய்கறி வாங்குகிறீர்கள். வீடுவரை கொண்டுவந்து கொடுப்பதற்கான கட்டணம் ப்ளஸ் ஜி.எஸ்.டி.யுடன் காய்கறி வாங்கும்போது கறிவேப் பிலை, கொத்துமல்லி இலவசம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
மாற்றுத் திறனாளிகளை அவமதிக் கும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுரை கூறியிருப்பது குறித்து?
அதிலெல்லாம் தேர்தல் கமிஷன் கெட்டிதான். வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால் பா.ஜ.க.வினர் எதிர்க் கட்சிகளை அவமதிக்கும் விஷயங் களைக் கண்டிக்கும் விவகாரத்தில் மட்டும் தேர்தல் கமிஷன் அதிகாரி களுக்கு கொஞ்சம் நடுக்கம் உண்டு.