த.சத்தியநாராயணன், அயன்புரம்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதை உணர்த்துகின்றன?

இந்தியா கூட்டணி, உண்மையிலே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற விரும்பினால் அவை ஒருங்கிணைந்து செயல்படுவதோடு வலுவான வியூகம், கடுமையான களவேலை, புதிய திட்டங்களுடன் சுறுசுறுப்பாக ஆயத்தமாகவேண்டும். மற்றபடி தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோவில் அடித்துக்கொண்டிருந்தால், காங்கிரஸோடு எல்லா மாநிலக் கட்சிகளையும் பா.ஜ.க. பெரிய குழிதோண்டிப் புதைத்துப் போய்விடும் என்பதை.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்.

Advertisment

ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளை காலனி என்று குறிப்பிடுவதை தவிர்த்து, சான்றோர் பகுதி என்று குறிப்பிட மத்திய, மாநில அரசுகள் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்கிறாரே வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன்?

சுதந்திரத்துக்கு முன்பு இந்தியா பிரிட்டிஷ் காலனி நாடுகளுள் ஒன்று. அதாவது இங்கிலாந்தின் அடிமை நாடு. அதுபோல ஆதிதிராவிடர் காலனி என்பதற்கு, ஆதிக்க சாதிகளின் அடிமை என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க சான்றோர் பகுதி எனக் குறிப்பிடவேண்டும் என்கிறார் சிந்தனைச் செல்வன். ஊனமுற்றோர் என்பதைவிட மாற்றுத்திறனாளி என்ற சொற்பிரயோகம் நேர்மறைப் பொருள் தருவதைப் போல காலனி என்பதையும் மாற்றி நேர்மறைப் பொருளில் அழைக்கலாம், தவறில்லை. மத்திய -மாநில அரசுகள் இந்த கோரிக்கையைப் பரிசீலிக்கவேண்டும்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

Advertisment

நான் இறந்தால் என்னை தெலுங்கானாவில் அடக்கம் செய்யவேண்டும் என மோடி கூறியிருப்பது பற்றி?

சிலர் எல்லா பெண்களிடமும் ஒரே காதல் வாசகத்தை கூறுவார்கள். சிலர் ஒவ்வொருத்தருக்கும் ஒரு காதல் வாசகம் சொல்வார்கள். மோடி அத்தகையவர்களில் ஒருவர். தமிழ்நாட்டுக்கு வள்ளுவர், பாரதி. தெலுங்கானாவுக்கு இங்கேதான் என்னை அடக்கம் செய்யவேண்டும். உத்தரப்பிரதேசத்துக்கு ஒன்று... குஜராத்துக்கு ஒன்று என வெரைட்டியாய் அடித்துவிடுவார். அது தேர்தலுக்காக காதில் செருகப்பட்ட பூ. தேர்தல் முடிந்துவிட்டது, அதை ஓரமாய் எடுத்துப் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பாருங்கள்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் தாமதப்படுத்தும் நோக்கில்தானே ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்...?

அதை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டிவிட்டது. இன்னும் சில மாதங்களுக்கு தமிழகம் மசோதாக்களைப் பற்றி கேள்வி கேட்கமுடியாது. அதற்குள் ஒன்றிய அரசின் காலமே முடிந்துவிடும். மாநில அரசுகள், வெறும் கறிவேப்பிலையைப் போல் இருந்தால் போதுமென மத்திய அரசு நினைக்கிறது.

mm

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ ஃபைடனுக்கு வாக்களிக்கமாட் டேன் என்று எலான் மஸ்க் கூறியுள்ளது பற்றி..?

அது அவரது சுதந்திரம். ஒரு நாட்டில் அத்தகைய சுதந்திரம் இருக்கவேண்டும். தனி ஒரு மனிதன் குறிப்பிட்ட அதிபருக்கு வாக்களிப்பேன்- மாட்டேன் எனச் சொல்வது சுலபம். ஆனால் எலான் மஸ்க் போன்ற கார்ப்பரேட் முதலைகள் சொன்னால், நேரடியாக பைடன் எதுவும் செய்துவிடமாட்டார்தான். ஆனால், அடுத்த தேர்தலில் பைடனோ, அல்லது அவரது கட்சியினரோ ஜெயித்துவரும்போது மஸ்க் குறிவைக்கப்பட்டால், அவருக்கான சலுகைகள் பறிபோகும். புதிய கடன்கள் மறுக்கப்படலாம். பழைய கடன்களைக் கட்டச்சொல்லி நெருக்கப்படலாம். வழக்குகள் எதாவது இருந்தால் தூசுதட்டப்படலாம். மாறாக, மஸ்கின் வார்த்தைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு, அவருக்கு சலுகைகளும் அளித்து அவரை தங்கள் ஆதரவாளராக பைடன் மாற்றிக்கொள்வாரானால் அவர் ராஜதந்திரி.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

ரஷ்யாவில் ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளாரே?

வல்லரசு நாட்டின் அதிபர் என்பதற்காக அவர் புத்திசாலியாக இருந்தாக வேண்டுமென்பதில்லை. ரஷ்ய -உக்ரைன் போரில் லட்சக்கணக்கில் செத்துவிழும் போர்வீரர்களின் உயிரிழப்பு அவரை அப்படி பேச வைத் திருக்கலாம். இன்றைய தேதியில் எட்டுக் குழந்தைகள் பெற்றுக்கொண்டால், எந்த நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் ஏதாவது ஒரு பிரசவத்தில் உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம். உயிரிழக்கா விட்டாலும், அவளது ஆரோக்கியம் கெடும். அந்தக் குடும்பம் பொருளாதாரரீதியாக வளமாக இருக்க வாய்ப் பில்லை.