மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
உலகம் முழுவதும் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளைவிட இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாமே?
ஆமாம், ஐ.நா. கூட இப்படியொரு புள்ளிவிவரத்தை உறுதிசெய்திருந்தது. இஸ்ரேலைக் கட்டுப்படுத்தவேண்டிய அமெரிக்காவோ, அந்நாட்டுக்கு உறுதுணையாய் இருக்கிறது. ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற பெரிய நாடுகள், "இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லையென்றால் நாங்கள் போர் தொடுப்போம்' என அறிவிக்கவேண்டும். அது நிகழாதபட்சத்தில் பாலஸ்தீனப் பேரழிவு தொடரவே செய்யும்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு 3 ராஜபக்சேக்களும் பொறுப்பு.. என்று இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதே..?
மூன்று ராஜபக்சேக்கள், முன்னாள் மத்திய வங்கி கவர்னர்கள், நிதி அமைச்சக முன்னாள் செயலாளர், முன்னாள் அதிபரின் செயலாளர் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டதன் விளைவே பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணம் என இலங்கை உச்சநீதிமன் றம் தீர்ப்பளித்துள்ளது. சரிதான், இத்தனை இக்கட்டு ஏற்படக் காரணமான இந்த பெருந்தலைகளின் சொத்துக் களை அரசுடைமையாக்கவும், தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்பவும் அந்த நீதிபதிகளுக்குத் துணிவில்லாமல் போய்விட்டதே.
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்
தி.மு.க. நீட் தேர்வுக்கு கையொப்பம் வாங்குவதால் மத்திய அரசோ, நீதிமன்றமோ செவி சாய்த்துவிடுமா?
சந்தேகம்தான். நீர் எப்போதும் முதல் டிகிரியில் கொதித்துவிடுவதில்லை. அதற்காக விட்டுவிடுகிறோமா? அது நூறு டிகிரியை எட்டும்வரை சூடேற்றிக்கொண்டே தானே இருக்கிறோம்? இந்தியை ஆட்சிமொழியாகத் திணித்தபோதும் தமிழகம் மட்டும்தான் எதிர்த்தது. நீட் விவகாரத்திலும் தமிழகம் மட்டும்தான் பிரதானமாக எதிர்க்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வால் 30 பேர் வரை தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தைத் தாண்டி ராஜஸ்தானிலும் நீட் தற்கொலைகள் நிகழத் தொடங்கியுள்ளன. தகுதித் தேர்வே வேண்டாமென்பது தமிழகத்தின் குரலல்ல… ஆனால் லட்சக்கணக்கில் செலவழித்து பயிற்சிபெற்றவர்கள் மட்டுமே தேர்வாகமுடிகிற குறிப்பிட்ட தேர்வைத் தான் தமிழகம் வேண்டாம் என்கிறது. ஆக, இது இந்தியா முழுவதும் பாதிக்கப்படுகிற மருத்துவ மாணவர்களுக்கான குரல்!
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை திருடிய கட்சி பா.ஜ.க. என்று குற்றம்சாட்டுகிறாரே இராகுல்காந்தி?
அது உண்மைதான். மத்தியபிரதேசத்தில் மட்டுமல்ல, கர்நாடகத்திலும் எம்.எல்.ஏ.க்கள் பர்ச்சேஸ் மூலம் காங்கிரஸிடமிருந்து பா.ஜ.க. ஆட்சியைத் திருடியது. ஒருமுறை திருட்டுக்கொடுத்தவர்கள், அடுத்தடுத்து திருடுபோகாதபடி உஷாராகிக்கொள்ளவேண்டும். அதைவிடுத்து திருட்டைப் பற்றியே பேசிக்கொண்டி ருப்பதில் அர்த்தமில்லை.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
இராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி என மோடி கூறியிருக்கிறாரே?
இது இன்னும் அபாயகரமான காம்பினேஷன். தேசபக்தியையும், ஆன்மிகத்தையும் ஒன்றாக இணைத்து ஆதாயம் தேட நினைக்கிறார் மோடி. அதே மோடிதான் அக்னிபாத் திட்டம் கொண்டு இராணுவ வீரர்களின் வேலையை நிலையில்லாததாக ஆக்கினார். இதே அயோத்தியில் ராமர் கோவிலுக்கான இடத்தை பா.ஜ.க.காரர்கள் முன்கூட்டியே வாங்கிப்போட்டு, பின் கோவில் கட்டுவதற்காக விற்று ராமருக்கே நாமம்போட்டார்கள். ராமர், ராணுவ வீரர் எல்லாம் மோடி அன்கோவுக்கு ஒன்றுதான். ராணுவ வீரர்கள் இருக்குமிடமெல்லாம் அயோத்தி, ராணுவ வீரர்கள் எல்லாம் ராம-லட்சுமணர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் சோற்றில் மண் அள்ளி வீசுவதில் அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்.
எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதற்கு, நண்பர்களுக்கு பிரியாணி, மதுவிருந்து கொடுத்து கொண்டாடி யிருக்கிறாராமே?
பாவம், எத்தனை தூரம் பாதிக்கப்பட்டிருந்தாரோ. சுதந்திர உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளிக்காட்டிவிட்டார்போல. உண்மையில் இருவருக்கும் பரஸ்பரம் பிடிக்காமல் இருந்திருந்தால், நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கிக்கொண்டு பிடித்தவர்களுடன் போயிருந்தால், கள்ளக்காதல் என்ற சமூகத்தின் அவப்பேச்சைத் தவிர்த்திருக்கலாம்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாய் காங்கிரஸ், அந்த அமைப்பு பா.ஜ.க.வை வழிநடத்துகிறது என்று ஓவைஸி சாடியிருக்கிறாரே?
காங்கிரஸிலும் இந்துத்துவச் சார்புடையவர்கள் உண்டென்றால் ஏற்றுக்கொள்ளலாம். மற்றபடி இது அபாண்டக் குற்றச்சாட்டு. ஓவைஸியின் செயல்பாட்டைப் பார்த்தால்தான், முஸ்லிம் பெரும்பான்மையுள்ள தொகுதிகளில் ஆட்களை நிறுத்தி பா.ஜ.க.வுக்காக காங்கிரஸ் ஜெயித்துவிடாமல் பார்த்துக்கொள்வதுபோல் தெரிகிறது.