பி.ராஜா, நாமக்கல்
குஜராத் வெள்ளத்துக்கு மோடிதான் காரண மென ஜிக்னேஷ் மேவானி குற்றம்சாட்டுகிறாரே?
2015 சென்னை வெள்ளம் ஞாபகமிருக்கிறதா...? அதே கதைதான். அன்று ஏரியிலிருந்து நீரைத் திறந்துவிட ஜெ.வின் உத்தரவுக்குக் காத்திருந்து சென்னையை வெள்ளத்தில் மூழ்கவிட்டனர். குஜராத் தில் நர்மதா அணை அதன் முழுக்கொள்ளளவுக்கு நெருக்கமாக இருந்த நிலையில் அந்த அணையிலிருந்து பயன்பெறும் சௌராஷ்டிரா, வடக்கு குஜராத், கட்ச் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விவசாயத்துக்காக நீர் திறந்துவிடச் சொல்லி ஒரு மாதகாலமாக கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று தண்ணீர் திறந்து விளம்பரம் தேடுவதற்காக இந்தக் கோரிக் கைகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் கனமழை குஜராத்தைப் போட்டுத் தாக்க, அணை நிரம்பிய நிலையில் ஒரேயடியாக அனைத்து மதகு களும் திறக்கப்பட்டு, 18 லட்சம் கனஅடி நீர் பாய்ந்திருக்கிறது. இதில் நர்மதா, பரூச், வதோதரா என பல மாவட்டங்களில் கடும் வெள்ள பாதிப்பு. மோடியின் பிறந்தநாள் பரிசு என்று சொல்லி மக்களை வெள்ளத்துக்குள் தள்ளியிருப்பதாக ஜிக்னேஷ் மேவானி குற்றம்சாட்டியிருக்கிறார். நிவாரணம் போதுமானதாக இல்லையென்றும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
நகர்ப்புற நக்சல்கள்தான் காங்கிரஸை வழி நடத்துவதாக மோடி கூறியிருக்கிறாரே?
பீமா கொரோகான் வன்முறை வழக்கு, மெல்ல உருமாறி பிரதமர் மோடியைக் கொலை செய்ய முயற்சித்ததாக் கூறி கம்யூனிச சிந்தனை பின்னணி யுடையவர்களை கைது செய்வதில் சென்றுமுடிந்தது. வரவரராவ், சுரேந்திர காட்லிங், ரோனாவில்சன், சுதா பரத்வாஜ் என 14-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கம்யூனிச சிந்தனைப் பின்னணி யுடையவர்களை இழிவுபடுத்துவதற்காக பா.ஜ.க.வின ரால் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைதான் நகர்ப்புற நக்சல்கள். விட்டால், காவியுடை கலவர கும்பல்கள் லெனின், மார்க்ஸையே நகர்ப்புற நக்ஸல்கள் என்று அழைப்பார்கள். ஒட்டுமொத்தத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணி மோடியை கலவரமடைய வைத்திருக்கிறது என்பதே இந்தக் குற்றச்சாட்டின் பொருள்.
க.அண்ணாமலை, புரசைவாக்கம்
காங்கிரஸ் பொதுச்செயலாளரான ஜெய்ராம் ரமேஷ், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பார்லிமென்ட்டை மீண்டும் பழைய கட்டடத்துக்கு மாற்றுவோம்' என கூறியிருக்கிறாரே?
இதுதான் ஏட்டிக்குப் போட்டி அரசியல். இப்படியொரு ஈகோவால்தான் தமிழக தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாறியது. முடிந்தால் போராடி புதிய பாராளுமன்றக் கட்டடம் கட்டுவதைத் தடுத்திருக்கவேண்டும். இப்போது கட்டிமுடித்த நிலையில் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏதாவது வசதிக் குறைவுகள் இருந்தால் திருத்தங்கள் மேற் கொள்ளலாம். மற்றபடி பாராளுமன்றக் கட்டடத்தில், முகமதுபின் துக்ளக் விளையாட்டு மேற்கொள்வ தெல்லாம் நல்ல யோசனையல்ல.
தா.விநாயகம், ராணிப்பேட்டை.
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியிருக்கிறதே?
தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக் கிறது. நாம் ஏன் உணர்ச்சிவசப்பட வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுகிறதா? இல்லை கூட்டணியாகப் போட்டியிடுகிறதா? என்பதை பார்த் துக்கொள்ளலாம். அதுவரைக்கும் இரு தரப்பிலும் பேசப் படும் வீர வசனங்களைப் பொருட்படுத்தக் கூடாது.
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி
பீகார் மாநிலத்தில் வெறும் ரூ.1500 கடனுக்காக பட்டியலின பெண் நிர்வாண சித்ரவதை செய்யப்பட்டது குறித்து..?
பீகார் மாநிலம் மோசிம்பூர் கிராமத்தில் வாங் கிய கடனையும் வட்டியையும் அடைத்த நிலையிலும், தலித் ஒருவரை கூடுதல் வட்டி கேட்டு துன்புறுத்தி யிருக்கிறார்கள் கடன் கொடுத்தவர்கள். அவரும் அவரது மனைவியும் தரமறுத்துள்ளனர். இந்தநிலை யில் நீர் பிடிக்கச்சென்ற கடன் பெற்றவரின் மனைவியை, கடன் கொடுத்தவரும் அவரது மகனும் நிர்வாணமாக்கி மோசமாகத் தாக்கியதுடன், அவர் மேல் சிறுநீரும் கழித்து இழிவுபடுத்தியுள்ளனர். இத்தகைய வழக்குகளில் குற்றவாளிகள் எளிதில் தப்ப முடியாதபடி அரசும் நீதிமன்றங்களும் கடுமை யான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். நீதிமன்றங் களுக்கு வெளியே பட்டியலின சமூகத்தினர் மிரட் டப்பட்டு வழக்கை வாபஸ் வாங்க வைக்கப்படுவது தான் பல சமயங்களில் நடக்கிறது.