மு.சம்பத், வேலாயுதப்பட்டணம்

தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசம் கிடைக்கிறது, ஓட்டுக்குப் பணம் கிடைக்கிறது, சாதி அரசியல் சவகாசம் நடக்கிறது. அப்புறமென்ன, தங்கள் தேவையை நிறைவேற்றும் கட்சிக்கு வாக்களிப்பதுதானே சரி?

ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்து 5 மாதங்கள் ஆன நிலையில், 20 ரூபாய் டோக்கனுக்கான 10ஆயிரம் ரூபாய் எங்கே என உரிமை கோரும் வாக்காளர்களைக் காண்கிறோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று என நேரடியாகவோ-தூண்டிவிடப்பட்டோ போராடும் மக்களிடம், உண்மையான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவர்களின் போராட்டக் குணம் கூர்மையாகும். சட்டரீதியாக தாங்கள் பெறவேண்டிய உரிமைகளுக்காக களமிறங்குவார்கள். அது நடக்காமல் பார்த்துக்கொள்கின்றன ஆட்சியைப் பிடிக்கும் வலிமையுள்ள கட்சிகள்.

alagiri-divakaran

Advertisment

ஜெயசீலன், அயனாவரம், சென்னை

மு.க.அழகிரி-திவாகரன் இருவரையும் "மாவலி' எப்படி ஒப்பிடுகிறார்?

Advertisment

"எனக்கு எந்தக் கட்சிப் பதவியும் வேண்டாம்' எனச் சொல்லி வந்த அழகிரி, மத்திய அமைச்சராக்கப்படும் அளவுக்கு அரசியல் செய்தார். ஒற்றை எம்.பி. இருந்த காலத்தில்கூட நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் குரல் ஓங்கி ஒலித்தது. அமைச்சராக இருந்தும் அழகிரியால் கேள்விக்குக்கூட பதிலளிக்க முடியவில்லை என்பது தி.மு.க தலைமையின் பலவீனத்தையே காட்டியது. சகோதரருடனான அரசியல் போட்டியில் அழகிரி வெற்றிபெற முடியாவிட்டாலும், சொந்தக் கட்சி ஆட்சிக்கு வரமுடியாதபடி கச்சிதமாக களவேலைகளைச் செய்து முடித்தார். திவாகரன் எப்போதுமே பின்னணி அரசியலைக் கையாண்டவர். ஆனால், தனது அக்கா மகன் நேரடி அரசியலில் இறங்கி, தனிக்கட்சி கண்டு, இடைத்தேர்தலில் ஜெ.வின் தொகுதியில் எம்.எல்.ஏ.வானதும், தானும் அரசியலில் நேரடி பங்கு வகிக்க வேண்டும் என ஆசைப்பட்டு, சொந்தங்களுக்கே வேட்டு வைக்கும் வகையில் தனி அமைப்பு கண்டிருக்கிறார். அழகிரி-திவாகரன் இருவராலும் அடுத்தவரின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். அவர்களால் ஓர் இயக்கத்தை வளர்த்தெடுக்க முடியாது.

லட்சுமிகாந்தம், வேலூர் (நாமக்கல்)

எடப்பாடி பழனிச்சாமியை ஏழுமலையான் சாமிக்கு ஒப்பிட்டிருக்கிறார்களே?

மக்கள் வரிப்பணமான அரசாங்கத்தின் கஜானாவிலிருந்து ஆட்சியாளர்கள் தங்கள் பெயருக்கு விளம்பரம் தேடிக்கொள்வது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா என கழக ஆட்சியாளர்கள் அதையே கடைப்பிடித்தார்கள். இப்போது எடப்பாடி பழனிசாமியும் அரசாங்க பணத்தில் சுயவிளம்பரம் தேடி மஞ்சள் குளித்திருக்கிறார். அதுவும் அர்ச்சனை செய்யும் அந்தப் பெண்ணின் உறவினர்கள், "செல்வி பெயருக்கு அர்ச்சனை' என்று சொல்லும்போது செல்வியான அந்தப் பெண்ணே, "இல்லையில்லை.. சாமி பெயருக்கு எனக்கு வேலை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி பெயருக்கு' என்று சொல்வது "செல்வி' என அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட ஜெயலலிதாவை மிஞ்சியவராக எடப்பாடி தன்னைக் காட்டிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அதனால்தான் அந்த விளம்பரம் இனி திரையிடப்படாது என லேட்டாக அரசாணை போட்டிருக்கிறார்களோ!

ஜி.ராமச்சந்திரன், கரட்டாங்காடு, ஈரோடு

எந்தத் தொலைக்காட்சியைத் திறந்தாலும் "குடிப்பழக்கம் உயிரைக் கொல்லும், புகைப்பிடித்தல் உயிருக்கு கேடு' என்கிறது அரசு அறிவுறுத்தியுள்ள விளம்பரம். ஆனாலும் சாராயக்கடை வியாபாரம் குறையவில்லை. அறிவுரை மட்டும்தான் அரசு வேலையா?

உபதேசம் என்பது அடுத்தவருக்கு மட்டும்தான்.

----------------

ஆன்மிக அரசியல்

நித்திலா, தேவதானப்பட்டி

vallalar"வள்ளலார் வழியைப் பின்பற்றுபவர்கள், தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறார்களே, அவர்கள் இந்து மதத்தினர் இல்லையா?

"இந்து' என்ற சொல் எப்போது எப்படி வந்தது என்பது ஆய்வுக்குரியது. வேதங்கள், ஸ்மிருதிகள் எதிலுமே இந்து என்ற வார்த்தை இல்லை. சிந்து நதி ஓடும் பகுதியில் வாழும் மக்கள் என்ற அடையாளத்தின் அடிப்படையில் பிற்காலத்தில் இந்து என்ற சொல் உருவாகியிருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பிரிட்டிஷார் ஆட்சியில் இந்தியாவின் பூர்வீக சமயங்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் இந்து என்ற ஒற்றைச் சொல்லுக்குள் கொண்டு வந்துவிட்டனர். பௌத்தம், சமணம் தொடங்கி சீக்கிய மதம்கூட இந்து என்றுதான் குறிக்கப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆசீவகம் தொடங்கி ஏராளமான சமய நம்பிக்கைகள் உள்ளன. வள்ளலார் ராமலிங்கர் ஆரம்பத்தில் உருவ வழிபாட்டினைக் கடைப்பிடித்தவர். முருகக் கடவுளைப் போற்றிப் பாடியவர். பின்னர் இந்து மதத்தின் சாதி-வருணப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார். சாஸ்திரங்களை மறுத்தார். ஒளி (ஜோதி) வழிபாட்டை முன்னிறுத்தினார். அனைத்து சமயங்களிலும் கடவுள் ஒன்றே என்ற தத்துவத்தின் அடிப்படையில் சமரச சுத்த சன்மார்க்க நெறியை வலியுறுத்தினார். அதற்காக கடலூர் மாவட்டம் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சபையை நிறுவி, ஏழைகளுக்கு உணவு வழங்கினார். அவர் பற்ற வைத்த அடுப்பு, இன்றுவரை அணையாமல் எரிந்து வறியவர்களின் பசியாற்றுகிறது என்கிறார்கள் வள்ளலார் வழியைப் பின்பற்றுபவர்கள். ஆரிய சமஸ்கிருத வேதங்களை மறுக்கும் தங்களை தனி மதமாக அறிவிக்கவேண்டும் என்கிறார்கள் வள்ளலார் பக்தர்கள். ஓட்டு அரசியலுக்கு உதவும் என்றால், கர்நாடக லிங்காயத்துகள் போல வள்ளலார் வழியில் உள்ளோரையும் தனி மதமாக அறிவிப்பார்கள் ஆட்சியாளர்கள்.