நடேஷ் கன்னா, கல்லிடைக் குறிச்சி
செந்தில்பாலாஜி விசாரணையின்போது பா.ஜ.க.வில் சேரும்படி அமலாக்கத்துறை வலியுறுத்தியதாக கபில்சிபல் கூறியிருக்கிறாரே?
அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற ஒன்றிய விசாரணை அமைப்புகள் மீதான இத்தகைய புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டேயிருக்கின்றன. அதற்கேற்ப எதிர்க்கட்சியில் இருக்கும்போது துரத்தித் துரத்தி சோதனைகள் நடத்தி சிறையில் அடைப்பதுவரை வேட்டையாடும் இந்த அமைப்புகள், சம்பந்தப்பட்ட நபர் பா.ஜ.க. விலோ, பா.ஜ.க. கூட்டணியிலோ சேர்ந்துவிட்டால் ஸ்லீப் மோடுக்குப் போய்விடுகின்றன. தி.மு.க.வின் கொங்குவட்டார எழுச்சியின் பின்னால் செந்தில் பாலாஜியின் பெயர் அடிபடும் நிலையில், கோவை பகுதியில் பா.ஜ.க.வின் எழுச்சிக்கு செந்தில்பாலாஜி இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதற்காக வேட்டையாடப்பட்டிருக்கலாம்.
செந்தில்குமார். எம்., சென்னை-78
இன்றைய அரசியலில் இருதலைக் கொள்ளி எறும்பு யார்?
எடப்பாடியும் அ.தி.மு.க.வினரும்தான். ஒரு பக்கம் ஆளுங்கட்சியான தி.மு.க. கொடநாடு வழக்கு முதல் முந்தைய ஆட்சியின் ஊழல்கள் வரை விசாரித்து நெருக்கடி கொடுக்க, கூட்டணிக் கட்சி என்று சொல்லி கழுத்தில் கைபோட்டுக்கொண்டே அ.தி.மு.க.வின் தலைவர்கள் பலரையும் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மோசமாக விமர்சித்து வருகின்றனர். அதற்குத் தக்க பதிலடியும் தரமுடியாமல், ஊமையாகவும் இருக்கவும்முடியாமல் அ.தி.மு.க. வைக்கும் விமர்சனங்களை அதன் தொண்டர்களே பரிதாபமாகப் பார்க்கின்றனர்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
தன் பிறந்த நாளான செப்டம்பர் 17-ல் குலக் கல்வியை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளாரே மோடி..?
அதுசரி, ஒவ்வொரு சமூகமும் தன் குலம் செய்துவந்த தொழிலைத்தான் இன்று செய்து வருகிறதா…? அந்த நால்வகைத் தொழிலைத் தவிர இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்கள் வந்துள்ளனவே அதையெல்லாம் யார் செய்வது? அந்தணர்கள், அவர்கள் வேதம் ஓதும் தொழிலைத் தவிர பிற தொழிலையெல்லாம் விட்டுவிடுவார் களா? பிறப்பு அடிப்படையிலான பேதத்தை, படிநிலையை உயர்த்திப்பிடிக்கும் ஒரு திட்டத்தை பிரதமரே ஊக்குவிக்கலாமா? இத்தகைய கட்சிக்குத்தான் உங்கள் வாக்கா…? இதெல்லாம் மக்கள் யோசிக்கவேண்டிய கேள்விகள்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
2023-ல் நோபல் பரிசுத் தொகையை 8.2 கோடியாக உயர்த்தியுள்ளனரே.. இந்த வருடம் இந்தியாவுக்கு கிடைக்குமா சார்?
பரிசை உயர்த்தியுள்ளது என்பது தனி விஷயம். அந்தப் பரிசு இந்தியாவுக்குக் கிடைக்குமா என்பது தனி விஷயம். பழைய பரிசுத் தொகை ஏழரைக் கோடியாக இருந்த நிலையில் இப்போது 8.2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி என்ற தலைப்பில் வருடந்தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில் தேர்வுக் குழுவினரின் கருத்தை ஈர்க்கும் வகையில் இந்தியர்கள் ஏதாவது ஆய்வு மேற்கொண்டிருந்தாலோ, இலக்கியம் படைத்திருந்தாலோ நோபல் பரிசு கிடைக்கும். அதை முன் யூகிக்க வழியில்லை.
ப.ராஜா, திருவாரூர்.
காலிஸ்தான் தீவிரவாத விவகாரத்தில் இந்தியா வுக்கும்- கனடாவுக்குமான உறவு சீர்கெட்டுள்ளதே?
ஆமாம், காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்தவராக அறியப்படுபவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார். இவர் கனடாவிலுள்ள குருத்வாராவுக்கு வெளியே வைத்து சந்தேகத் துக்கு இட மான நிலையில் கொல்லப்பட் டார். இதில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை உள்ளதாக கனடா சந்தேகிக் கிறது. தவிரவும், கொஞ்சநாட்களுக்கு முன் கனடாவிலுள்ள இந்துக் கோவிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப் பட்டது சர்ச்சையானது. ஆனால், இப்படி எழுதப்பட்டபோது, கோவிலிலுள்ள வீடியோ திட்டமிடப்பட்டு அணைக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் இணைத்து கனடா, இந்தியாவின் மீது ஐயம் கொண்டதுடன் கனடாவுக்கான இந்தியத் தூதரை திருப்பியனுப்பியிருக்கிறது. பதிலுக்கு, இந்தியாவும் இந்தியாவுக்கான கனடா தூதரை திருப்பியனுப்பியிருக்கிறது. கனடாவில் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.
எம். ஸ்வேதா, கரையான்சாவடி
லேட்டஸ்ட் சினிமா செய்தி ஒன்று சொல்ல முடியுமா மாவலியாரே?
தன் படத்தின் தீவிரமான காட்சிகளால் ரசிகர்களை பதறவைப்பவர் இயக்குநர் பாலா. இயக்குநர் பாலாவையே பதற வைத்திருக்கிறார்கள் சிலர். இன்ஸ்டாகிராமில் பாலா பெயரில் கணக்கு தொடங்கி, அதனை தவறாகப் பயன்படுத்துவதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ள அவர், "எனக்கு ட்விட்டர் கணக்கு மட்டுமே உள்ளது. மற்ற சமூக வலைத்தளங்களில் என் பெயருடன் எந்தக் கணக்கு இருந்தாலும் அவையெல்லாம் போலி' என ரசிகர்களையும் பிறரையும் எச்சரித்துள்ளார்.