ச.ஸ்வேதா, கும்பகோணம்

எட்டையபுரம் அருகேயுள்ள உசிலம்பட்டி அரசுப் பள்ளியில், பட்டியலினப் பெண் சமைத்த உணவு என்பதால் குழந்தைகளைச் சாப்பிட அனுமதிக்கமாட்டோம் என பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே?

இது ஒன்றும் புதிய நிகழ்வல்ல. ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கல்யாண விருந்துகள், ஹோட்டல் உணவுகள் இதையெல்லாம் யார் சமைக்கிறார்கள் எனத் தெரிந்துதான் மக்கள் சாப்பிடுகிறார்களா? நம் எல்லோருடைய பையிலும் பணம் இருக்கிறது. அது எல்லா சமூகத்தினரும் புழங்கிய பணம்தான். அதற்காக அதைத் தூக்கி வீசிவிடுவார்களா? இதில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கவிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், இத்தகைய விஷயங்களில் சமையல் செய்பவரை மாற்றுவது போன்ற முடிவுகளை எடுக்குமளவுக்கு அரசு இறங்கிவரக்கூடாது என்பதுதான் மாவலியின் விருப்பம்.

mm

Advertisment

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

சந்திரபாபு நாயுடுவை கைது செய்து சிறையில் அடைத்ததற்கு ரோஜா வெடிவெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடியிருக்கிறாரே?

ரோஜா, சந்திரபாபு நாயுடுவின் கட்சியில் இணைந்துதான் சட்டமன்ற உறுப்பினரானார். அங்கிருந்துதான் தற்போதிருக்கும் ஒய்.ஆர்.எஸ். கட்சிக்குத் தாவி அமைச்சரானார். இருக்கும் கட்சிக்கு விசுவாசத்தைக் காட்டுவது தேவை யானதுதான். அதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்ளத் தேவையில்லை. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை... பகைவரும் இல்லை என்பது பாலபாடம். அதனையே ரோஜா சரிவர கற்கவில்லை.

mm

வாசுதேவன், பெங்களூரு

"வாரிசு', "அடுத்த வாரிசு' ஒப்பிடுக?

"வாரிசு' இளைய தளபதி விஜய் நடித்த ஹிட் படம். "அடுத்த வாரிசு' சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் படம். வாரிசின் தயாரிப்பாளர் தில்ராஜு. இயக்குநர் வம்சி பைடிபள்ளி. அடுத்த வாரிசு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் துவாரகீஷ் தயாரித்த படம். இந்தப் படத்தின் மூலக்கதை ஹிந்தியில் வெளியான "ராஜா ஜானி'. அந்தப் படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல்தான்.

செந்தில்குமார். எம், சென்னை - 78

ஆயிரம் கும்பாபிஷேகம் நடத்திவிட்டதாக தி.மு.க. சொல்வது குறித்து?

வெகுஜன மக்கள் குறித்த பயம்தான். என்னதான் திராவிடக் கட்சியென்று தி.மு.க. குறிப்பிட்டுக்கொண்டாலும் வெகுஜன மக்கள் மதம் சார்ந்தே இருப்பதால் நாங்கள் ஒன்றும் மதத்துக்கு எதிரியில்லை என்று காட்டிக்கொள்ளவும் தேவையிருக்கிறது. இத்தனை வருடங்களாக இல்லாத அளவுக்கு பா.ஜ.க.வின் அசுரப் பிரச்சாரம் ஓடிக்கொண்டிருப்பதால், ஒருபக்கம் சமூக நீதித் தேடல், மறுபக்கம் மத நடவடிக்கை களுக்கு மயிலிறகு வருடல் என்று பேலன்ஸ் பண்ணித்தான் வண்டியை ஓட்டவேண்டிய தேவையிருக்கிறது.

மல்லிகா அன்பழகன், கே.கே.நகர் கிழக்கு

நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்க கோடியில் சம்பாதிக்கும் நடிகர் -நடிகைகள் நிதி வழங்காமல் கலைநிகழ்ச்சி, வங்கிக் கடன் என போவது ஏன்?

பல வருடங்களாகவே நடிகர் சங்க கட்டடம் பற்றியும் அதைக் கட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது பற்றியும் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது நடிகர் சங்க கடனை அடைக்க கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினார். அதன்பிறகு விஷால், நாசர் வரைக்கும் வந்தாகிவிட்டது. நடிகர் சங்க கட்டடமும் வந்தபாடில்லை. கலைநிகழ்ச்சி பற்றிய பேச்சும் நின்றபாடில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு. நடிகர்களுக்கு தங்களுக்கென ஒரு சங்கம் வேண்டுமென்ற தீர்க்கமான எண்ணமில்லையோ… என்னவோ!…

த.சத்தியநாராயணன், அயன்புரம்

தீவிரவாதிகளை பா.ஜ.க.வின் சாமியார்கள் மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறதே?

காந்தியின் உருவத்துக்குப் பின்னால் ஆட்டை நிறுத்திச் சுட்டு, காந்தி படுகொலையை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். ஒரு மாநில அமைச்சரின் தலைக்கு பத்வா கொடுக்கிறார்கள். ஒருவேளை பா.ஜ.க. அரசில் சாமியார்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறார் களோ…என்னவோ?