நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
அதானி பங்குச் சந்தை மோசடி குறித்து பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை வேண் டும் என ராகுல் கூறியிருக் கிறாரே?
நெருப்பில்லாமல் புகையாது என்பது பழமொழி. ஹிண்டன்பர்க் அறிக்கை, அதானி குழுமம் முறை கேடாக பங்குகளின் விலையை உயர்த்தியதாகக் கூறி, அது நடந்தவிதத்தையும் விளக்கியது, தற்போது ஓ.சி.சி.ஆர்.பி. அமைப்பு, அதானி குழுமத்தினரே தங்களது பங்குகளை மொரீஷியஸைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் மூலம் வாங்கி விற்றிருக்கின்றனர். இத்தகைய முறைகேடான நட வடிக்கைக்காக இந்தியாவிலிருந்து 85 ஆயிரம் கோடி வெளியே போய், மறுபடி அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்கிறது. இந்தப் பணம் யாருடையது என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் கூட்டுக்குழு விசாரணை தேவை என்கிறார். இத்தகைய புகார்களைத் தொடர்ந்து அலட்சியம் செய்வது, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை நம்பிக்கையிழக்கச் செய்யும்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
"ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாமே..?
ஒரு சிறப்புக் குழுவை ஒன்றிய அரசே அமைக்கும்போது, தங்களுக்குச் சாதகமான கருத்துக்களை கூறக்கூடியவர்களைத் தான் அதில் இடம்பெறச்செய்யும். எனவே அது பொருட்படுத்தத்தக்கதல்ல. வெவ்வேறு காலகட்டத்தில் தேர்தல் நடக்கும்போது, அந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காகவாவது மத்திய, மாநில அரசுகள் பயந்து நடக்கும். விலைவாசியை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கும். ஒரே தேர்தல் என்றால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எந்தக் கவலையும் இல்லையென்று ஆகிவிடும். "ஒரே நாடு ஒரே கட்சி,… ஒரே நாடு ஒரே பிரதமர்,… ஒரே நாடு ஒரே மதம்' என்பது போன்ற கூக்குரல்கள் எல்லாம் வண்ணம்பூசி அலங்கரிக்கப்பட்ட எதேச்சதிகாரம் என்பதைத் தவிர வேறில்லை!
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்
பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று பயந்து கேஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாயைக் குறைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே?
பயந்துள்ளார்களோ… இல்லையோ அதை தூரத்தள்ளுங்கள். சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் குறைந்துள்ளதா? இல்லையெனில் இப்போது மட்டும் எப்படி விலையைக் குறைக்கமுடிந்தது? ஆக, அரசு பல மாதங்களாகவே நம் பாக்கெட்டில் கைவைத்திருப்பது அம்பலமாகிறதுதானே! இப்போதாவது குறைத்தார்களே என நினைத்தும் உங்கள் வாக்கைச் செலுத்தலாம்… அல்லது இவ்வளவுநாள் ஏய்த்துவிட்டார்களே என சிந்தித்தும் உங்கள் வாக்கைச் செலுத்தலாம். அது உங்கள் சுதந்திரம்.
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி.
மறைந்த ஜெயலலிதாவின் சொத்து வழக்கில் அபராதம் செலுத்த அவருடைய 30 கிலோ தங்க நகைகளை ஏலம்விடுமாறு கர்நாடக அரசுக்கு பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?
வழக்கு முடிவுக்கு வந்ததும் தமிழக அரசே, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்குச் செலவு, அபராதத்தைக் கட்டிவிட்டு, ஜெயலலிதாவின் சொத்துக்களை விற்று தமிழக கஜானாவுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கலாம். நீதிமன்றம் உத்தரவிடும்வரை ஏன் தாமதித் தார்கள் எனத் தெரியவில்லை. சரி, அன்றைக்கு அ.தி.மு.க. அரசு இருந்தது. இப்போ திருக்கும் அரசாவது சுறுசுறுப்பாக நடந்து கொள்கிறதா பார்க்கலாம்!
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.
"ஜனாதிபதியாக ஒரு பெண் இருக்கும்போது, பாலியல் வன்கொடுமைகள் நடப்பதை நினைத்து நாம் தலைகுனியவேண்டும்'’ என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா கூறியுள்ளது குறித்து?
இந்தியாவின் பிரதமராக இந்திரா இருந்தபோதும் பாலியல் வன்கொடுமைகள் நடந்தது. இந்தியாவில் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா, மெகபூபா முப்தி வரை 10 பெண்கள் முதல்வர்களாக இருந்துள்ளனர். அப்போதும் பாலியல் வன்கொடுமை கள் நடக்கத்தான் செய்தது. இப்போது ஜனாதிபதியாக முர்மு இருக்கும்போதும் நடக்கத்தான் செய்கிறது. ஏன்… பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்பி லுள்ளவர்கள் பலர் இந்தியாவில் இருக்கிறார் கள். ஒருபக்கம் பாலியல் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எந்த சலுகையும் தராமல் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மறுபக்கம் ஒவ்வொரு தனிநபரும் எந்த ஒரு தருணத்திலும் தங்கள் வாழ்வில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடாமல் நடந்துகொண்டு, தங்களது வாரிசுகளுக்கும் அந்தச் சிந்தனை யைக் கடத்தவேண்டும். அதுவொன்றே தீர்வு.