எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 33 மாதங் களில் கட்டிமுடிக்க வேண்டுமென்ற கட்டளையுடன் கட்டுமான நிறுவனங்களுக்கு டெண்டர் கோரியுள்ளதே மத்திய அரசு..?

எல்லாம் தேர்தல் நேரத்துக் கவலைதான். தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பா.ஜ.க. தன் செல்வாக்கை அதிகரிக்க விரும்புகிறது. மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்ந்து அதற்கு எதிர்மறை விமர்சனமாக அமைந்துவரும் நிலையில், அதெல் லாம் இல்லை, மூன்று வருடங்களில் நாங்கள் கட்டி நிமிர்த்திவிடுவோமாக்கும் என ஒன்றிய அரசு சொல்லவிரும்புகிறது. கட்டுகிறார்களோ… இல்லையோ டெண்டரை பைனல் பண்ணி, ஆயத்தப் பணிகளை மட்டும் செய்துவைத்து விட்டால், தேர்தலை தைரியமாக எதிர் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புதான்.

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

அறிவுரை கொடுப்பவர், அறிவுரை கேட்பவர் வித்தியாசம்?

"பாத்திரம் அறிந்து பிச்சை இடு' என்றொரு பழமொழி உண்டு. அது வெறுமனே பணமோ உணவோ கொடுப்பதற்கு மட்டுமானதல்ல… அறிவுரைக்கும் சேர்த்துதான். தேவையற்றவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் வழங்கப்படும் அறிவுரை வெறுமனே ஒரு காதில் நுழைந்து மறு காதில் வெளியேறும் சொற்கள் மட்டும்தான். கொடுக்கப்படுவது பணமாயிருந்தால், கொடுப்பவர் எத்தனைதான் அலட்சியம் செய்தாலும்கூட பெறுபவர் மகிழ்ச்சியடைவார். அறிவுரையென் றால், கேட்பவர் உங்களை எவ்விதம் பார்ப்பார் என்பதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

Advertisment

ஜார்கண்ட் கவர்னருடன் ரஜினிகாந்த் சந்திப்பு பற்றி?

ரஜினிகாந்தின் "ஜெயிலர்' திரைப்படம் வசூலை வாரிக்குவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ரஜினியைப் பற்றிய தொடர்ச்சியான செய்திகள் ஊடகங்களில் வெளிவருவது படத்தின் வசூலை அதிகரிக்க உதவி செய்யும். அதற்கேற்றாற்போல் படம் வெளியானதும் இமயமலை கிளம்பினார். வரும் வழியில் ஜார்கண்ட் வந்ததும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் ஆளுநராக இருப்பதால் சந்தித்துப் பேசியிருக்கிறார். யோகி ஆதித்யநாத்தோடு "ஜெயிலர்' படம் பார்க்கப் போவதாகத் தகவல். வட இந்தியப் பிரமுகர் களையே சந்தித்து, தமிழ் முகங்களை எதிர்பார்த்துக்கொண்டி ருக்கும் ஜார்க்கண்ட் ஆளுநருக்கு ரஜினி வருகை ஒரு ஆசுவாசம்.

தே.மாதவராஜ், கோயம்புத்தூர்.

டி.எம்.எஸ்.ஸுக்கு மதுரையில் முதல்வர் ஸ்டாலின் சிலை எழுப்பியதுபோல எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கும் சிலைவைப்பாரா?

சிலை வைக்கிற விஷயங்களை முதல்வர்கள் பார்த்துக் கொள்ளட்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புகழ்பெற்ற லண்டனின் மேடம் டுசாட்ஸ் அரங்கில்கூட மெழுகுச் சிலை வைத்து மரியாதை செய்ய எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தகுதியானவர் தான். சுயசரிதையை அவர் எழுதாமல் போய்விட்டதால், அவரது நெருங்கிய நண்பர்களோ பதிப்பகங்களோ விரிவாக அவர் கதையைப் பதிப்பிக்கலாம். முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி மேற்கொள்கிறவர்கள், எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடல்களை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு பல்வேறு தலைப்புகளில் ஆராயலாம்.

mm

அன்னூரார், பொன்விழி.

ஒருவேளை இராபர்ட் கிளைவ் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால்?

கிழக்கிந்திய கம்பெனிக்காக இந்தியா வந்த இராபர்ட் கிளைவ் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க நல்ல மனிதரல்ல. இந்தியாவிலேயே அவர் இருமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். வேலைதந்த கிழக்கிந்திய கம்பெனியிடமே நிறைய ஊழல் செய்து ஒன்றே முக்கால் லட்சம் பவுண்ட் தனக்கென சேர்த்துக்கொண்டார். இறுதியில் போதை மருந்துக்கு அடிமையாகி கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்தார். இராபர்ட் கிளைவ் இந்தியா வராமல் இருந்திருந்தால், ஒருவேளை அவரது வாழ்வு நல்லவிதமாக அமைந்திருக்கலாம். ஆனால் கிழக்கிந்திய கம்பெனி இல்லாவிட்டால் வேறொரு பிரெஞ்சு இந்தியக் கம்பெனி நம்மை அடிமைப்படுத்தியிருக்கும். அன்றைய இந்தியச் சூழல் அதற்கேற்றதாகத்தான் இருந்தது.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

ரஷ்யாவில் லெனின் உடல் தைலமிட்டு பாதுகாக்கப்படுவதுபோல, மகாத்மா காந்தி, நேரு உடல்களை காங்கிரஸார் ஏன் பாதுகாக்கவில்லை?

அன்றைக்கு அமெரிக்காவுக்கு சமமான வல்லரசாக ரஷ்யா இருந் தது. ரஷ்யாவின் பொருளாதாரமும் தொழில்நுட்பமும் வளமாக இருந் தது. லெனினின் உடலை தைலமிட் டுப் பாதுகாத்தார்கள். விடுதலை பெற்றபோது இந்தியாவின் பொரு ளாதாரமும் தொழில்நுட்பமும் தரைமட்டத்தில் கிடந்தன. தவிரவும் பாதுகாக்க வேண்டியது, அரிய மனி தர்களின் உடல்கள் அல்ல... அவர்களது சிந்தனைகளே. காந்தியையும், நேரு வையும் காங்கிரஸார் புறக்கணித்து விடவில்லை. மாறாக, இன்றைக்குத் தான் காந்தி பிறந்த குஜராத்தின் காந்தி வித்யாபீடத்தில் சர்வமத பிரார்த்தனை தடைசெய்யப்படு கிறது. உ.பி.யில் காந்திய சேவா சங்கத்தின் தலைமை கிளையின் உடைமைகளை அரசே தூக்கி வெளியில் எறிகிறது. இன்றைய பிரதமரே, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நேருவை மட்டம் தட்டுகிறார். தவறு எந்தப் பக்கம் இருக்கிறதெனப் புரிந்தால் சரி!