நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
தேர்தல் ஆணையர் நியமனக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கி மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து?
ஏற்கெனவே இருக்கும் தலைமை ஆணையர்களே ஒன்றிய அரசின் கைப்பாவை போலதான் இருக்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையரை நியமிக்கும் தேர்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் நீக்கிவிட்டு, "சொல்லுங்க எஜமான்'’என கைகட்டி ஏவலுக்குக் காத்திருக்கும் ஒரு தேர்தல் ஆணையரை நியமிக்க ஒன்றிய அரசு விரும்புகிறதுபோல. இதற்குமுன் நடந்த பல சட்டமன்றத் தேர்தல் களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஒன்றிய அரசுக்கு வசதியாக தேர்தல் தேதியை தள்ளிவைத்த நிகழ்வுகள் விமர் சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. விதிமுறைகளை மீறிப் பேசும் போது, எதிர்க்கட்சிகளைத் தண்டித்த தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியை கண்டு கொள்ளாமல் விட்டது சர்ச்சையாகியிருக்கிறது. சொன்னால் தலையாட்டுகிற, ஒரு அசல் பொம்மையை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குத் தலைவராக நியமிப்பதை நோக்கிய அடுத்தகட்ட நகர்வுக்குத் தயாராகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தைப் பலவீனமாக்குதல், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் இந்திய அமைப்புகளை வலுவிழக்கச் செய்தல் என்ற பாதையில் ஒன்றிய அரசு நகர்வதாக வலுவான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வாசுதேவன், பெங்களூரு
சண்டை சச்சரவு என்கிறார்களே சச்சரவு என்றால்?
தகராறு, வாதம், கலகம் என்பது அகராதிப் பொருள். சண்டை சச்சரவு எனும்போது கூறியது கூறல். காப்பிகீப்பி குடிச்சாச்சா எனும்போது எதுகை நயத்துக்காக பொருளேயில்லாத கீப்பியையும் சேர்த்துச் சொல்வதில்லையா அதுபோலத்தான்.
பா.ஜெயப்பிரகாஷ், தேனி.
ராஜஸ்தானில் என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய 28 பேருக்கு நெய்வேலி என்.எல்.சி. யில் வேலை வழங்கியது நியாயமா?
தமிழகத்தில் செயல்படும் என்.எல்.சி. நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட இருபத்தையாயிரம் குடும்பங்கள் நிலம் கொடுத்துள்ளன. அப்படி இடம் கொடுத்தவர்களில் 1,800 பேர் வரை மட்டுமே வேலைபெற்றுள்ளனர். மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து என்.எல்.சி. எந்த உத்தரவாதமும் தரவில்லை. இதில் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்களுக்கு இங்கே வேலை என்பது, தமிழர்களின் காதில் பூச்சுற்றும் வேலைதான்.
அன்னூரார், பொன்விழி
இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து கூட்டணி மீண்டும் மலருமா?
ஏற்கெனவே இளைய ராஜா- வைரமுத்து கூட்டணி பிரிந்து தசாப்தங்கள் கடந்து விட்டன. பாரதிராஜா முதுமை காரணமான தளர்வில் முந்தைய உற்சாகத்துடன் இல்லை. அதனால் இந்தக் கூட்டணி முன்பு இயக்கிய படங்களை யூடியூபிலோ அல்லது ஓ.டி.டியிலோ மீண்டும் பார்த்து ரசிப்பது தான் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய ஒரே வழி!
ப. முத்துக்குமார், புதுக்கோட்டை
ஒரு பொலிட்டிகல் ஜோக் சொல்லுங் களேன்?
அரசியலில் நடப்பதெல்லாமே ஜோக்தானே. இதில் தனியாக வேறு சொல்லவேண்டுமா? அதிலும் பல ஜோக்குகள் இயக்குநர் நெல்சன் படங்களில் இடம்பெறும் ஜோக் போல, டார்க் ஹ்யூமர் வகையறா ஜோக்குகளாக இருக்கின்றன. மணிப்பூர் விவகாரத்துக்கு பதில் சொல்லச் சொன்னால், எதிர்க்கட்சிக் கூட்டணிகளை விளாசும் பிரதமரின் பதிலைவிட பெரிய நகைச்சுவை இருக்கிறதா என்ன?
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் படிக்கவிடவில்லை என்று வருத்தப்பட்டுள்ளாரே.. நிர்மலா சீதாராமன்?
முதலில் தமிழர்களோ, மற்றவர்களோ எதற்கு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் படிக்கவேண்டும்? இன்றுவரை இந்தி நமது தேசிய மொழி கிடையாது. கிட்டத்தட்ட மாநிலத்துக்கு ஒரு மொழி பேசும் இந்தியாவில், இந்திக்கு மட்டும் சலுகை அல்லது முன்னுரிமை யார் கொடுத்தது? இவ்விரண்டு மொழிகளையும் பள்ளிகளில் கட்டாயப்படுத்தாவிட்டாலும், பிரச்சார சபாக்களிலோ, அல்லது தனிப்பட்ட முறையிலோ கற்றுத்தருவதை தமிழகம் தடைசெய்கிறதா? அடுத்து சுதந்திரத்துக்குப் பின்பான எழுபதாண்டுகள் வரை இருந்த அரசுகள் சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்வதைப் பற்றி பேசியதே இல்லை. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், தனிப்பட்ட தேவைக்கான எலைட் மொழியாகத்தானே இருந்தது. தேவமொழி என கிரீடத்தைச் சூடிக்கொண்டு பாமர மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, புழக்கத்திலிருந்தே ஒழிந்த மொழியை இவர்கள் திடீரென வந்து திணிக்கத் துடிப்பது ஏன்? யோசியுங்கள். தவிரவும் நிர்மலா சீதாராமன் படித்த சாவித்ரி வித்யாலயா பள்ளியில், அப்போது சமஸ்கிருதம் கற்றுத்தரப்பட்டிருக்கிறது. சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியில் ஹிந்தி ஸ்காலர்ஷிப்புடன் கற்றுத்தரப்பட்டிருக்கிறது. பிறகெதற்கு இந்தப் பொய்கள்?