அ. யாழினி, வண்டலூர்

பிரான்ஸின் நட்சத்திர வீரர் கிளியான் பாப்பேவை சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு கால்பந்து அணி ரூ.2,716 கோடிக்கு வாங்க முன்வந்துள்ளதே?

mm

கால்பந்து ஒரு குழு விளையாட்டு. எத்தனை திறமையான வீரர் அணியில் இருந் தாலும் மொத்த அணியும் திறமையாக விளையாண்டால்தான் வெல்ல முடியும். கடந்த உலகக் கோப்பையில் திறமையாக விளையாண்ட பத்து வீரர்களை விலை கொடுத்து வாங்கி ஒரு அணியை அமைத்தாலும், அந்த அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ப தற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் மிகுந்த ஊடக கவனம் கிடைக்கும்.

எம். செந்தில்குமார், நெசப்பாக்கம்

நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தி ஆகிவிடமுடியாது என இளங்கோவன் சொல்வதைப் பற்றி?

ராகுலையும் அண்ணாமலையையும் ஒப்பிடமுடி யாதுதான். ஆனால் தேசிய அளவிலான ஒரு நடைபயணத்துக்குப் பின் ராகுலின் செல்வாக்கும் பிரபலமும் தேசிய அளவில் வளர்ச்சிபெற்றது. அதை மனதில் கொண்டுதான் அண்ணாமலை மாநில அளவிலான ஒரு நடைபயணத்துக்குத் திட்டமிட்டிருக் கிறார். ஆனால் அவரது வாய் ஜாண் ஏறச் செய்தால், முழம் வழுக்கிவிடக் காரணமாகக்கூடியது. இந்த நடைபயணத்தில் அண்ணாமலை அறுவடை செய்யப் போவது மக்களின் செல்வாக்கையா, அதிருப்தியையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

தங்கள் சுயநலத்துக்காக காங்கிரஸ் வங்கிகளை சூறையாடி உள்ளது என மோடி கூறியிருக்கிறாரே?

யாராவது, பிரதமரைத் தட்டியெழுப்ப வேண்டும். பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து அதன் நிறைவுப் பகுதியையும் நெருங்கிவிட்டது. இன்னும் நேரு, இந்திரா, ராஜீவ் என முந்தைய ஆட்சியாளர்களையே குற்றம்சாட்டிக்கொண்டிருப்பது ஒரு திறமை யான பிரதமருக்கு அழகல்ல. வங்கிகள், வியாபாரத் துறை பிரபலங்களுக்குக் கொடுத்து திரும்ப வராத கடனில் பாதி காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்டது என்றால், மீதி பா.ஜ.க. ஆட்சியில் கொடுக்கப்பட்டது. வெளிநாட்டுக்கு ஓடிப்போனவர்களில் பாதிப் பேர் மோடியின் ஆட்சிக் காலத்தில் நழுவியவர்கள்தான். நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி தொடங்கி மோடி ஆட்சிக் காலத்தில்தான் கடனை வாங்கிவிட்டு திருப்பிக்கட் டாத 38 வியாபாரப் பெருந்தலைகள் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளனர். கடன் வாங்கியவர்களையும் எஸ்கேப்பாக விட்டுவிட்டு, பொறுப்பிலிருந்தும் எஸ்கேப்பாகப் பார்க்கிறார் மோடி.

வாசுதேவன், பெங்களூரு

அமெரிக்காவில் நம் நாட்டு அரிசிக்குத் தட்டுப்பாடாமே?

Advertisment

mm

அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு கிட் டத்தட்ட 40 சதவிகிதம். இந்தியாவில் கடந்தாண்டு வழக்கத்தைவிடவும் 14 சதவிகிதம் அரிசி உற்பத்தி குறைந்தது. இந்த ஆண்டிலும் 7 மெட்ரிக் டன் வரை அரிசி உற்பத்தி குறையலாம் என ஒரு கணிப்பு நிலவுகிறது. கூடவே ரஷ்ய- உக்ரைன் போரால் கோதுமைத் தட்டுப்பாடு நிலவிவருகிறது. தற்போது வடமாநிலங்களில் பெய்யும் கடும் மழையால் இந்த வருடமும் நெல் உற்பத்தி பாதிப்பு நிச்சயமாகியுள்ளது. இதனால் ஏற்கெனவே அரிசி ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதித்திருந்தது இந்தியா. இப்போது உள்ளூர்த் தேவைக்கு தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என நெல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அரிசிக்கான டிமாண்ட் அதிகரித்திருக் கிறது. நாம் ரேஷன் கடையில் வரிசையில் நின்று அரிசி வாங்குவதுபோல், வெளிநாடுகளிலும் சில இடங்களில் வரிசையில் நின்று அரிசி வாங்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

Advertisment

பி. சுரேஷ், ஈரோடு

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராடுவது சரியா?

மணிப்பூர் கலவர விவகாரம் கடந்த இரண்டரை மாதங்களாகவே நாட்டை உலுக்கிவருகிறது. குக்கி இனப் பெண்கள் மானபங்க வீடியோ வெளியான பிறகுதான் பிரதமர் மௌனத்தையே கலைத்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் எந்த அத்துமீறலும் இல்லை. இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத் தொடரும் நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் 267-வது விதியின்கீழ் முழுமையான விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோருகின்றன. ஆளுங்கட்சியோ ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ விவாதித்துவிட்டு நழுவிவிட விரும்புகிறது.