அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

மூன்று என்ஜின்களோடு மகாராஷ்டிரா அரசு எனும் ரயில் இயங்குவதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியது பற்றி?

ஆதாயம் இருக்கும்போது ஆயிரம் பேசுவார்கள். வழக்கமாக மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சியின் அரசு இருப்பதை இரட்டை என்ஜின் அரசு என்றார்கள். இப்போது மூன்றாவது என்ஜின்… முன்னால் ஒன்று… பின்னால் ஒன்று… மூன்றாவதை எங்கே கொண்டு மாட்டுவார்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம். குற்றங்களை வெளுப்பதற்கு பா.ஜ.க. பிரத்யேக வாஷிங் மெஷினை வைத்திருப்பதாகவும், பா.ஜ.க.வில் இணைந்தவுடன் கறையேயின்றி குற்றங்களை வெளுத்துவிடுவதாகவும் எதிர்க் கட்சிகள் நையாண்டிசெய்கின்றன. அப்படி மல்லிகைப் பூவாக வெளுத்தடுக்கிய ஆளுமைகளின் பட்டியல் இது. நாராயண் ரானே, சுவேந்து அதிகாரி, ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா, பாவ்னா காலி,… இந்தப் பட்டியலில் அஜித் பவாரும் அவரது ஆதரவாளர்களும் தற்போது இணைந்திருக்கின்றனர். பா.ஜ.க.வின் சலவை நுட்பத்தைப் பார்த்து, ஜாம்பவான் டிடர்ஜெண்ட் கம்பெனிகளே அசந்து போய் நிற்கின்றன.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

Advertisment

குஜராத் தொடர்பான கலவர வழக்கில் சமூகச் செயல்பாட்டாளர் 'தீஸ்தா செடால்வாட்' ஒன்றிய அரசால் பந்தாடப் படுகிறாரே?

dd

தீஸ்தா செடால்வாட் குடிமை உரிமைச் செயற்பாட்டாளர். பத்திரிகை யாளரும்கூட. சொந்த மாநிலம் குஜராத் என்றாலும், மும்பையில் பணியாற்றி வந்தார். தலித், முஸ்லிம்கள், பெண்கள் எனச் சிறுபான்மையினர் நலனுக்கு முன்னுரிமை தந்து செயல்பட்டுவந்தவர். குஜராத் கலவரத் துக்குப் பின், கலவரத்தின் பின்னணியை வெளிப்படுத்தியதாலும், முஸ்லிம்களுக்கு சட்ட உதவி வழங்கியதாலும் குறிவைக்கப்பட்டவர். குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியை வேண்டுமென்றே குறிவைத்து, போலி சாட்சி யளித்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு, கைது உத்தரவு வரை வந்து நிற்கிறது. தற் காலிக ஆதரவாக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது. தற்போதைய சூழலில் தீஸ்தா செடால்வாட்தான், குஜராத் கலவரத்துக்குக் காரணம் எனத் தீர்ப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

"பா.ஜ.க. நம்புவது சனாதனம்; தி.மு.க. நம்புவது அறிவியல்.. இதனால்தான் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டி' என்ற ஸ்டாலினின் பேச்சு?

வெறும் வழிகாட்டுதல் மட்டும் போதாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான கூட்டணியை அமைத்து தேசிய அளவிலான வெற்றியை ஸ்டாலினும் எதிர்க்கட்சிக் கூட்டணியும் பெற்றுத் தராவிட்டால் புஷ்பக விமான அறிவியலும், மாட்டு மூத்திர சனா தன அறிவியலும்தான் இந்தியாவில் கோலோச் சும்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

கர்நாடக அரசு பசுவதை தடைச் சட்டத்தை ரத்து செய்துள்ளதே?

உண்மையில் பசுவதை என்ற போர்வை யில் சிறுபான்மையினர், முக்கியமாக முஸ்லிம் கள்தான் வதைசெய்யப்படுகின்றனர். பசுவதை, மாட்டிறைச்சி என்று சொல்லி முகமது அஹ்லக், பேலு கான், ஜூனைத், திரிபுராவில் மூவர் எனக் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் நீள்கிறது. தாக்கப்பட்டவர்களுக்கு கணக்கே இல்லை. ராஜஸ்தானில் பா.ஜ.க. தலைவர் கியான்தேவ் அஜூகாவே, பசுப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஐந்து பேரைக் கொன்றதாக பேசிய வீடியோ வெளியானது. பின் சர்ச்சையானதும் தாக்கியதாகத்தான் சொன்னேன் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது எனச் சமாளித்தார். இந்தியா முழுவதும் இப்போதைக்குத் தேவை இந்துத்துவக் குண்டர்களின் வதையிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் அவசரச் சட்டம்தான்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45

தக்காளி விலை விஷம்போல் ஏறுகிறதே?

வருடத்துக்கு இரண்டொரு முறை ஏறும் விஷம்தான். தவிரவும், விலை ஏறும்போது கூப்பாடு போடும் நாம், அளவுக்கதிகமாக விளைந்து கிலோ 1 ரூபாய்க்கு இறங்கி செடிகளிலே பறிக்காமல் அழுக விட்டுவிட்டு விவசாயி அழுதுகொண்டு நிற்கும்போது என்ன செய்கிறோம்? இதற்காகத்தான் தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டுப் போராடினார்கள் விவசாயிகள். அவர்களை டெல்லியிலிருந்து விரட்டுவதில் காட்டிய அக்கறை, அவர்களுக்குத் தீர்வு சொல்வதில் இல்லையே!

ப.செல்லையா, நாகப்பட்டினம்

ஹாட்டான ஒரு நியூஸ் சொல்லுங்களேன்?

உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்த வருட கடும் வெயிலுக்கு 93 பேர் பலியாகியிருக்கின்றனர். வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் இந்த மூன்று மாதங்களில் வெயிலுக்கு 112 பேர் பலியாகியுள்ளனர். 1,550 பேர் வெயில் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் கடும் வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கையும், வெயில் கடுமையாக அடிப்பதால் பஞ்சம் வரும் எனக் காட்டும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.