த. சிவாஜி மூக்கையா, சென்னை 44
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் தாக்குப்பிடிப்பாரா?
சினிமாவில் பெரிய இடையீடுகள் செய்யாமல் இயக்குநர் சொல்லியதைச் செய்தால்போதும். ஹிட் படம் உறுதி. அரசியலில் எந்தவொரு நிச்சய ஹிட் வியூகமும் கிடையாது. மாஸ் ஹீரோக்களுக்கு ரசிகர் மன்றங்களின் ஆதரவு என்பது சில சதவிகித வாக்குகளை உத்தரவாதமளிக்கும். கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாவதுபோல, நடிகன் அரசியல்வாதியாக முழுக்க உருமாற் றம் அடையவேண்டும். அது பெரிய வேலை. முதலில் அரசியல் அலையில் கால் நனைக்கட்டும். பிறகு நீந்திக் கரைசேருவாரா என கணிக்கலாம்.
மல்லிகா அன்பழகன், சென்னை. 78.
46 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் மீண்டும் இணைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
இந்திராகாந்தி 1975-ல் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்தபோது, அதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டன. சோசலிச கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் எதிர்க்கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. பா.ஜ.க.வுக்கு முந்தைய பதிப்பான பாரதிய ஜனசங்கமும் அதில் அடக்கம். அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 345 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இன்றைக்கு நெருக்கடி நிலை பிரகடனம் பண்ணப் படவில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்குள்ள எதிர்க்கட்சித் தலை வர்கள் ஒரு வருடமும், அதற்கு அதிகமாகவும் சிறைவைக்கப்பட்டனர். பீமா- கொரேகான் வழக்கில் சமூகச் செயல்பாட்டாளர்கள், கம்யூ னிஸ்ட் சிந்தனையாளர்கள் அர்பன் நக்ஸலைட்டு கள் என்ற பெயரில் பிரதமரைக் கொல்ல முயற்சித்ததாகக் கூறி, உபா சட்டத்தில் ஓராண்டுக்கும் மேல் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பதாகக் கருதித்தான் எதிர்க்கட்சிகள் இப்போது ஒன்றிணைந்திருக்கின்றன. ஜெயப் பிரகாஷ் நாராயணன் சாதித்ததை, இன்றைய கூட்டணி சாதிக்குமா?
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் அளவிற்கு திறமை இல்லை என்கிறாரே ஆர்.என். ரவி?
எல்லோருக்கும் பொதுவான அகராதி யின் அர்த்தங்களும், தமிழக ஆளுநருக்குச் சொந்தமான அகராதியின் அர்த்தங்களும் மாறுபட்டவை. உலகமெங்கிலும் தமிழகத் தில் உயர்கல்வி கற்றுவரும் இளைஞர்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. சுந்தர்பிச்சை போன்றவர்கள் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கிறார்கள். இப்படி நூறு உதாரணங்களைக் காட்டமுடியும். தேசியக் கல்விக் கொள்கைக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்காகப் பேசப்பட்ட பேச்சு என்பதே, ஆளுநரின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்குப் போதுமானதாகும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
அ.தி.மு.க.வால் பா.ஜ.க.வுக்கு லாபமா! அல்லது பா.ஜ.க.வால் அ.தி.மு.க.வுக்கு லாபமா?
அவ்வப்போது ரெய்டுகளைத் தவிர்த்து, கடந்த ஆட்சியின் ஊழல்கள் கண்டுகொள்ளப் படாமல் விடப்படுவது அ.தி.மு.க.வுக்கான லாபம். அ.தி.மு.க.வின் முதுகில் தொற்றிக்கொண்டு பந்தய மைதானத்தை ஓடிக் கடக்காமலேயே நாலைந்து வெற்றிப் பதக்கங்களை கையில் வைத்திருப்பது பா.ஜ.க.வின் லாபம். அரசியலில் கூட்டணியும்... கூட்டணி முறிவும் ஆதாயத்தை மனதில் வைத்தே நடப்பது!
அன்னூரார், பொன்விழி.
மகாகவி பாரதி தொடங்கி என் போன்ற சாதாரண படைப்பாளிகள் வரை வறுமையின் பிடியில் சிக்கித்தான் இருக்கவேண்டுமா?
திருவிளையாடல் படத்தில், தருமி சேர்ந்தே இருப்பது என கேள்வி கேட்க, சிவபெருமானாக வரும் சிவாஜி வறுமையும் புலமையும் என பதிலளித்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சில சர்வதேச பதிப்பகங்கள் பிரபலமான படைப்பாளிகளுக்கு லட்சங்களிலும், கோடியிலும் ராயல்டி தருவது உண்டுதான். அதற்கு உங்கள் படைப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்படவேண்டும். உங்கள் படைப்பின் சிறப்புகள் அந்த பதிப்பகங்களை எட்டியிருக்கவேண்டும். திரில்லர் கதைகள் எழுதும் ஜேம்ஸ் பேட்டர்ஸனுக்கு 2018-ல் கிடைத்த ராயல்டி தொகை 86 மில்லியன் டாலர். இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 705 கோடி.
க.செந்தில், ஸ்ரீவில்லிபுத்தூர்
ஹாலிவுட் நடிகைகள் சோபி டர்னர், ஜென்டயா இருவரில் யாருக்கு மாவலியின் ஓட்டு?
தமிழ், இந்தியத் திரையுலகில் நடிக்கவந்த புது நடிகைகளின் பெயர்களே இன்னும் தடுமாற்றமாய் இருக்கும் போது, ஹாலிவுட்டில் இப்படி இரு நடிகைகள் இருப்பதே கூகுள் தயவில் இப்போதுதான் அறிமுகம். இவர்கள் இருவர் நடித்த படங் களைப் பார்த்துவிட்டு தனியாய் உங்களுக்கு கடிதமெழுதி என் வாக்கைப் பதிவுசெய்கிறேன்.