டி.ஜெயசிங், கோவை
வரிச்சியூர் செல்வம், நான் ரவுடி இல்லை, ஆண்டுக்கு 45 லட்சம் வருமானவரி கட்டும் நபர் என்கிறாரே?
நானும் ரவுடிதான் என்று சீன் போடும் காலத்தில், வரிச்சியூர் செல்வம் ஒரு தியாகி. தனது ரவுடித்தன வரலாற்றையே தியாகம் செய்து, வருமான வரி கணக்கு பற்றி பேசுகிறாரே! அதுசரி, கோட்சேதான் இந்த நாட்டின் மகாத்மா என்பவர் கள் ஆளும் போது, வரிச்சியூர் செல்வங் கள் இப்படித்தான் பேசுவார்கள்.
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்-45
அதானி குழும விவகாரத்தால் பாராளுமன்றத்தை முடக்கி அரசுப் பணத்தை வீணாக்குகிறார்களே?
அதானி நிறுவனங்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கொடுத்திருக்கும் கடன் தொகை, 21ஆயிரத்து 375 கோடி ரூபாய். இன்டஸ்இன்ட் வங்கி கொடுத்திருப்பது, 14ஆயிரத்து 500 கோடி ரூபாய். பஞ்சாப் நேஷ னல் வங்கி கொடுத்திருப்பது 7 ஆயிரம் கோடி ரூபாய். அதுமட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி உலகம் சுற்றும் வயோதிகர் என்பது உலகத்துக்கே தெரியும். அந்தப் பிரதமர் பல நாடுகளுக்கும் பயணம் செய்துவிட்டு இந்தியா திரும்பும் போதெல்லாம் அதானி குழுமத்திற்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் மூலம் பயன் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி உற்பத்தி மூலம் 6ஆயிரத்து 200 கோடி, மலேசியாவில் துறை முக விரிவாக்கம் மூலம் 2 லட்சத்து 15ஆயிரம் கோடி, வங்காள தேசத்தில் மின் உற்பத்தி நிலையம் மூலம் 10ஆயிரம் கோடி, ஈரான் துறைமுக ஒப்பந்தம் 4ஆயிரம் கோடி, மியான் மருக்கு மின்சார சப்ளை யில் 3ஆயிரத்து 200 கோடி ரூபாய், ஸ்வீடனுக்கு ஒற்றை இன்ஜின் போர்விமானம் வாயிலாக 60ஆயிரம் கோடி, சீனாவுடனான 36 வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் 14ஆயிரத்து 800 கோடி, இஸ்ரேலுக்கு ஆளில்லா விமானம் மூலம் அதானி நிறுவன ஆட்கள் பெற்ற பலன் ஆயிரத்து ஐநூறு கோடி, பகை நாடு என மோடி அரசு ஓட்டு அரசியல் சித்துவேலைகள் செய்யும் பாகிஸ்தானிடம் கூட அதே மோடி அரசின் தயவால் அதானி குழுமம் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அடைந்த பலன் 25ஆயிரம் கோடி. வெளிநாட்டுப் பயன்களின் மொத்த தொகை 3 லட்சத்து 39ஆயிரத்து 700 கோடி. இந்தியாவின் பொருளாதாரமோ தெருக்கோடி. இந்த உண்மையை நாடாளுமன்றத்தில் பேசுவதால் எவ்வளவு வீணாகி விடப்போகிறது?
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
சிவராத்திரி விழாவின்போது ஈஷா யோக மையத்துக்கு ஜனாதிபதி வருகை பற்றி?
இந்திராகாந்திக்கு தீரேந்திர பிரம்மச்சாரி, நரசிம்மராவுக்கு சந்திரா சாமி, இன்னும் சில பிரதமர்கள், ஜனாதி பதிகளுக்கு காஞ்சி ஜெயேந்திரர், மோடிக்கு பாபா ராம்தேவ், ஜக்கி வாசு தேவ் வகையறாக்கள். ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பரமசிவன்களின் கழுத்தில் சுற்றிய பாம்புகளாக சாமியார் கள் இருப்பதால் சிவராத்திரி என்ன, எல்லா ராத்திரியும் இத்தகைய ஆ-சாமியார்களுக்கு கொண்டாட்டம்தான்.
தூயா, நெய்வேலி
மாவலிக்கு உப்புமா பிடிக்குமா?
பசி அவசரத்திற்கு உப்புமா என்பது சுவையான உணவுதான். ஆனால், அதை நாள்தோறும் சாப்பிட நேர்ந்தால் நாக்கு செத்துவிடும். இந்தியா என்பது ஒரு கல்லூரி ஹாஸ்டல் என்றால், அரசியல் கட்சிகள் எல்லாம் அதில் தங்கியுள்ள மாணவர்கள். அவர்களில் இட்லி, தோசை, பரோட்டா, பூரி ஆகிய உணவுப் பிரியர்கள் இருக்கிறார்கள். உப்புமா சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நாள்தோறும் உப்புமா மட்டுமே ஹாஸ்டல் கேன்டீனில் பரிமாறப்படுகிறது. அதை மாற்ற வேண்டு மென்றால், மெனு தொடர்பான வாக்களிப்பில் மற்ற உணவுகள் வெற்றி பெறவேண்டும். ஆனால், அரசியல் கட்சிகள் எனும் மாணவர்கள் ஒருங்கிணையாமல் தனித்தனியாக இருப்பதால், உப்புமாவே சொற்ப அளவில் வெற்றி பெற்று, அதிகாரம் செலுத்துகிறது என்று 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுடன் பா.ஜ.க.வை உப்புமாவுக்கு ஒப்பிட்டு மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசியது, இதுவரை எந்த உப்புமாவிலும் கிடைக்காத தனிச் சுவை. 2024ல் மெனு மாறும் என்ற நம்பிக்கையை அவர் தந்திருப்பதால், செத்துப்போன நாக்குகளில் சுவை மொட்டுகள் உயிர்பெறத் தொடங்கியுள்ளன.
வாசுதேவன், பெங்களூரு
கிரிக்கெட்டில் டாஸ் போடுவது, கண்ணாமூச்சி ஆடுவதற்கு முன் சாட்..பூட்.த்ரி போடுவது- ஒப்பிடுக.
டாஸ் என்பது நடுவரின் விரல்களால் விளைவது, சாட்..பூட்..த்ரி அவரவர் கைகளால் விளைவது. இரண்டின் முடிவு எப்படி இருந்தாலும், திறமையான ஆட்டக்காரர்கள் வெற்றி பெறுவார்கள்.