நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை தேர்தல் ஸ்டண்ட் என எடுத்துக்கொள்ளலாமா?
அரசியலைப் பொறுத்தவரை ஒவ்வொரு நடவடிக்கையும் ஸ்டண்ட்தான். ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரையை கிண்டலும் கேலியும் செய்தவர்கள் பா.ஜ.கவினர். ஒன்றிய அரசின் அமைச்சர்கள் வரை நக்கலடித்தார்கள். இப்போது, தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை வளர வைக்க முடியுமா என்பதற்காக மாநிலத் தலைவர் பாதயாத்திரை போகிறார்.
தே.மாதவன், கோயமுத்தூர்
"தமிழகம்' பற்றி ஆளுநர் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறாரே?
முதலமைச்சரில் தொடங்கி அத்தனை கட்சித் தலைவர்களும் போட்ட போடு அப்படி. குப்புற விழுந் தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல, காசி தமிழ்ச் சங்கமம் பற்றிக் குறிப்பிடும் போதுதான், தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், பழைய காசியுடனான பண்பாட்டு உறவின்போது தமிழகம் என்ற பெயர் இல்லாததால் அப்படிச் சொன்னதாகவும் சப்பைக் கட்டு அறிக்கை வெளியாகியிருக்கிறது. பரிபாடல், சிலப்பதிகாரம் உள்பட பலவற்றிலும் தமிழ்நாடு, தமிழ் நன்னாடு என்ற வார்த்தைகள் உள்ளன. அதெல் லாம் பீகாரைச் சேர்ந்த ஆளுநருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டமன்றத்தில் ஆற்ற வேண்டிய மாநில அரசின் கொள்கை சார்ந்த உரையில் Tamilnadu Government என்றிருந்ததை This Government என்று திரும்பத் திரும்ப அவர் மாற்றிப் படித்தது ஏன் என்பதற்கு பதில் இல்லை. அதுபோலவே, ஆளுநர் மாளிகையின் பொங்கல் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு என்பதைத் தவிர்த்து, தமிழக அரசு என அச்சிட்டது ஏன்? பொங்கல் விழா என்ன பீகாரிலும் உத்தரபிரதேசத்திலுமா நடக்கிறது? வட மாநிலங்களில் உள்ளது போன்ற நிலைமை தமிழ்நாட்டில் இருப்பதாக நினைத்து, எதைச் சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவார் கள் என்ற மமதையில் ஆளுநர் எதை எதையோ பேசினார். அரசியல் சாசனத்தின் பெயரால் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசி னார். தமிழ்நாடு அமைதி யாக இருந்தது. ஆனால், தமிழ்நாடு என்பதைத் தவிர்க்க வேண்டும் என்றதும் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்தது. அது டெல்லி−வரை அதிர வைத்தது. ஆளுநர் மாளிகை தன்னிலை விளக் கம் அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக் கப்படும் நிலையில், நீதியரசர் சந்துரு அவர்கள் தெரிவித்திருப் பதுபோல, இந்த ஆளுநர் மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு ஒவ்வொரு மாநிலமும் தள்ளப்படும் காலம் உருவாகும்.
வாசுதேவன், பெங்களூரு
பதவி விலக முடிவு செய்துள்ள நியூஸிலாந்து பிரதமர் கூறியுள்ள காரணம்..!
37 வயதில் பிரதமராகி உலகத்தின் பார்வையை ஈர்த்தவர், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நியூசிலாந்து பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். பிரதமரான பிறகுதான் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையுடன் அவர் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்றதும், தாய்மையுடன் குழந்தையைப் பராமரித்த தும் உலகத்தின் பார்வையை ஈர்த்தது. அதே தாய்மை யுடன் கொரோனா காலத்தில் தனது நாட்டையும் பாதுகாத்தார். கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் நியூசிலாந்து முன்னிலை பெற்றது. கொரோனா காலம் முடிவடைந்துவிட்டது, மாஸ்க் தேவையில்லை, வெளிநாட்டுப் பயணிகள் வரலாம் என்றும் நியூசிலாந்து அறிவித்தது. அந்த அளவுக்கு பேரிடர் நிலைமையைக் கையாண்டார் ஜெசிந்தா ஆர்டெர்ன். ஜனநாயக வரலாற்றில் இத்தகைய திறமைகளுக்குப் பிறகு வெற்றி நிலைக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை எதிர்கொள்வதிலும் வீழ்த்துவதிலும் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் உறுதியாக இருந்தார், சாதித்தார். ஆனால், அடுத்து வந்த தேர்தலி−ல் அவரது கட்சியால் ஆட்சி யைத் தக்கவைக்க முடியவில்லை. நியூசிலாந்து அரசியலின் தற்போதைய நிலைமையும் அதுதான். தொழிலாளர் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ளது. பிரதமர் ஜெசிந்தா நினைத்த திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. இது தனது நாட்டுக்கு, தான் செய்யும் அவமதிப்பு என அவர் நினைத்தார். மாற்று வழியை யோசித்தார். அதற்காக நேரம் எடுத்துக் கொண்டார். ஆக்கப்பூர்வமான வழி எதுவும் அவருக்குத் தெரியவில்லை. அதனால், பதவி யிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். மேற்சொன்ன அத்தனையும் நியூசிலாந்து பிரதமரின் தனிப்பட்ட முடிவு. நீங்கள் உடனே இந்தியப் பிரதமரைத் திரும்பிப் பார்க்கக் கூடாது.
தே.அண்ணாதுரை, கம்பம் புதுப்பட்டி -தேனி
ராமர் பாலம் எப்போது, யாரால் கட்டப்பட்டது?
தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் அதனை உறுதி செய்ய முடியவில்லை என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. நீதிமன்றத்திலோ, ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க ஆலோசிப்பதாகத் தெரிவித்துள்ளது. அறிஞர் அண்ணா எழுதிய நீதிதேவன் மயக்கம் நாடகம் போல, ராமரே கூண்டில் ஏறி உண்மையைச் சொன்னால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்க லாம். ப்