நடூர் மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்
வங்கிகளில் பெரிய நிறுவனங்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, வசூலிப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே?
நிதியமைச்சரின் விளக்கங்கள் என்று நிர்மலா சீதாராமனின் பொன்மொழிகளைத் தொகுப்பாக வெளியிட்டால் புத்தகக் காட்சியில் அதுதான் டாப்பாக இருக்கும்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
மணல் கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட திட்டம்தான் சேது சமுத்திர திட்டம் என அண்ணாமலை கூறி இருக்கிறாரே?
பிரிட்டிஷ் ஆட்சியில் முன் னெடுக்கப்பட்ட திட்டம் இது. நேரு காலத்தில் ஆய்வு செய்யப்பட்டது. எனினும், இதற்கான வேகத்தை அதிகப்படுத்தியவர் பா.ஜ.க. ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாய்தான். அதன்பின் மன் மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, தடைபோட காரணமாக இருந்தவர்கள் அத்வானி, சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா ஆகியோர். இப்போது, ஒன்றிய பா.ஜ.க அரசே அந்தப் பகுதியில் உள்ள மணல் திட்டுகள் ராமர் பாலமா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என ஆய்வு அடிப் படையில் அறிவித்துவிட்டது. அதாவது, பிரதமர் மோடி அரசு இப்படி அறிவித்துள்ள நிலையில், மணல் கொள்ளைக்காக தீட்டப்பட்ட திட்டம்தான் சேது சமுத்திர திட்டம் என அண்ணாமலை சொல்வது, யாரைக் குறி வைத்து?
டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
விமானப் பயணத்தில் சக பெண் பயணி மீது மூர்க்கன் ஒருவன் சிறுநீர் கழித்து இம்சைபடுத்தி யுள்ளானே?
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அந்த நபர், அளவுக் கதிகமான போதையில், கழிவறைக் குள் செல்லாமலேயே சிறுநீர் கழித்திருக்கிறார். அதுவும் சக பெண் பயணி மீது. அதன்பிறகும், அந்தப் பெண் பயணி, அதே ஈர இருக்கையில் உட்கார்ந்திருக்க வேண்டிய நிலையும் நீடித்திருக்கிறது. விமானப் பயணம் என்பது பணக்காரர்களுக்கானது, அதில் பயணிப்பவர்கள் பண்போடு நடந்துகொள்வார்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதற்கு மாறாக, போதை பார்ட்டிகளின் பயண வாகனமாக விமானங்கள் மாறியிருக்கின்றன. போதையில் நடந்த அந்த மோசமான நிகழ்வுக்குப் பிறகு, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, எவ்வளவு வேகமாக எடுக்கப்பட்டது என்பதில் ஒட்டுமொத்த நிர்வாகமும் மமதை போதையில் இருப்பது அம்பலமாகியுள்ளது.
தே.அண்ணாதுரை, கம்பம் புதுப்பட்டி -தேனி
அ.தி.மு.க.வுக்கு சாலைப்பணியாளர்கள், தி.மு.க.வுக்கு செவிலியர்களா?
இரண்டிலும் பாதிப்பின் அளவு ஒரே தன்மை கொண்டதுதான். சாலைப் பணியாளர் கள் என்ற பணியையே ரத்து செய்தது அ.தி.மு.க. அரசு. ஒப்பந்த செவிலியர் களின் பணியை நீடிக்க முடியாது என்கிறது தி.மு.க அரசு. முந்தைய ஆட்சியாளர்களால் தற்காலிகப் பணி என கையெழுத்து வாங்கப்பட்டு, இன்று போராடும் செவிலியர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிறார் அமைச்சர். அரசுப் பணி யிடங்கள் என்பவை குறைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர், மருத்துவர், செவிலியர், மின்வாரியப் பணியாளர் கள் என எல்லா இடங்களிலும் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள். இந்திய ராணுவத்துக்கே ஏறத்தாழ அந்த நிலைமைதான்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி யின்போது அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தங்கிய அறையை அருங்காட்சியகமாக மாற்ற கத்தார் பல்கலைக்கழகம் முடிவு செய் திருப்பது பற்றி?
பல எதிர்ப்புகள், குற்றச்சாட்டு களுக்கிடையே உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது கத்தார் அரசாங்கம். அதன் நினைவாக ஏதேனும் ஓர் அருங்காட்சியகம் அமைக்க முடிவெடுத்திருக்கலாம். மெஸ்ஸி தங்கிய அறையை, ஒட்டுமொத்த கத்தார் கால்பந்து வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஊக்கம் தரும் வகையிலான அருங்காட்சியமாக அமைத்தால் நன்றாக இருக்கும்.
திலகர் ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
மது, லஞ்சம் எது சமூகப் பேரழிவு?
இரண்டு பேரழிவையும் எதிர் கொள்ளும் பேரிடர் மேலாண்மை யைக் கற்றிருக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். அதற்கேற்ப பழகியிருக்கிறார்கள் இந்திய மக்கள்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
"குளிர் விட்டுப் போயிடுச்சு'... வாசகம், தற்போது யாருக்குப் பொருத்தமாக இருக்கும்?
நடு இரவில், நடுங்கும் குளிரில், பொங்கலையொட்டி ரிலீசான இரண்டு படங்களுக்காகத் திரண்ட இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களுக்கு.
மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி
வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் கூட்டல், கழித்தல் கணக்கு சரியாய் அமையுமா?
அது எதிர்த்தரப்பின் கூட்டணி ஒற்றுமைப் பெருக்கலையும், தேர்தல் வியூகங்களை வகுத்தலையும் பொறுத்தது.