பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"மெட்ராஸ் ஐகோர்ட்' என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றக்கோரி பாராளு மன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து?
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், அதனை முழுமையாக ஆதரித்துப் பேசினார். சட்டமன்றத் தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்து 6ஆம் ஆண்டு நினைவஞ்சலியையும் அவரது கட்சியினர் நடத்திவிட்டனர். ஆனால், மெட்ராஸ் ஐகோர்ட் இன்னும் பெயர் மாறவில்லை. அதைத்தான் தற்போது தமிழ்நாட்டின் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். பெயர் மாற்றம் நம் மாநிலத்தின் அடையாளம். அதைவிடவும் முக்கியமானது, உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்பது. அதனை கலைஞர் ஆட்சியிலேயே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பினார்கள். ஆனால், இன்னமும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அடிக்கடி அது பற்றிய விவாதம் என்கிற பெயரில் கொர்.. கொர்.. குறட்டை சத்தம் மட்டும் கேட்கும்.
தே.அண்ணாதுரை, கம்பம் -தேனி மாவட்டம்
சூடான் நாட்டில் முத்தமிட்டதற்கு மரண தண்டனை, இந்தியாவில் ஆறுபேரை கொன்று, கற்பழித்துவிட்டு, நீதி கேட்ட பில்கிஸ் பானுவின் மனு தள்ளுபடியா?
ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு சட்டங்கள் இருப்பது இயல்பு. உடனடி தண்டனை, தீர விசாரித்து தண்டனை, மேல்முறையீட்டு வாய்ப்பு எனப் பல வகைகளில் சட்டம் நடைமுறைப் படுத்தப்படும். அந்தந்த நாட்டு சட்டங் களின்படி, பாதிக்கப்பட்ட குடிமக்களின் கோரிக்கைகள் சரியாக நிலைநாட் டப்படுகிறதா என்பதில்தான் நீதித் தராசின் நடுநிலை உள்ளது. சூடானைவிட சூடான விவாதங்களை எழுப்பிய வழக்கு, பில்கிஸ் பானுவை பாலியல் தாக்குத லுக்குள்ளாக்கிய 6 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம். கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போயிருக்கிறார் பில்கிஸ் பானு.
வாசுதேவன், பெங்களூரு
கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழப்பவர்கள்..!
இந்தியாவில் பல ஆறுகள் இருக்கலாம். வற்றாத ஆறு, சாராய ஆறு. கள்ளச்சாராயம் எனத் தனியாகக் குறிப்பிடப்படுவதால் மற்றவையெல்லாம் நல்ல சாராயம் என்பதில்லை. அதனதன் தன்மைக்கேற்ப பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனாலும், அதைத் தொடுவதும் விடுவதும் குடிமக்களின் கைகளில்தான் உள்ளது. குடிப்பழக்கம் என்பது தொன்மையானது. சங்கப் பாடல்களில் அது பெருமையாகப் பேசப்பட்டுள்ளது. வேதங்களில் இடம் பெற்றுள்ளது. அரசியல் வாக்குறுதிக்காக மதுவிலக்கு கொண்டு வரப்படுவதும், பிறகு வருமானத்திற்காகத் தளர்த்தப்படுவதும் சகஜமாகிவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு இருந்த காலமும் உண்டு. தளர்ந்த காலத்தையும் காண்கிறோம். காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் மட்டும் கட்டாயமாக மதுவிலக்குக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், அண்மையில் அங்கு நடந்த சட்டமன்றத் தேர்த லின் போது வாக்காளர்களுக்கு பாக்கெட் சாராயம் மலிவு விலையில் வழங்கப்பட்டது அப்பட்டமாக வெளிப்பட்டது. மற்ற நாட்களில் உயர்ந்த சரக்குகள் டோர் டெலிவரி செய்யப்படுவது வழக்கம். பீகார் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக மதுவிலக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால், குடிப்பழக்கம் கொண்டவர்கள் கள்ளச்சாராயத்தை நாடினார்கள். உயிரைப் பறிகொடுத்திருக்கிறார்கள். பீகார் முதல்வர் நிதீஷ்குமாரோ, "குடித்தால் சாகத்தான் வேண்டும்... நிவாரணமெல்லாம் கிடையாது' என்கிறார். கடையைத் திறந்திருந்தால் ஏன் உடனடியாக சாகடிக்கும் சாராயத்தைக் குடிக்கப் போகிறார்கள் என்று கேட்கின்றன எதிர்க்கட்சிகள். இந்தியாவில் மதுக் கொள்கை என்பது மது குடித்தவனை விட அதிகமாகத் தள்ளாடுகிறது.
கே.கே. வெங்கடேசன், செங்கல்பட்டு
நம் நாட்டில் கால்பந்தாட்டம் ஏன் கிரிக்கெட் போல் பிரபலம் அடையவில்லை?
பொதுவாக பிரிட்டிஷ் அரசால் அடிமையாக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் கிரிக்கெட்டில் வலிமையாக இருக்கும். பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் கிரிக்கெட் ஆடியவர்கள் அந்தந்த மண்ணின் அதிகார வர்க்கத்தினர். அது அப்படியே பாரம்பரியமாகத் தொடர்கிறது. அரசு நிர்வாகம், சாதிப் படிநிலை, அரசியல் தாக்கம், சூதாட்டம் உள்ளிட்ட பலவும் கிரிக்கெட் மோகத்தை வளர்த்து வருகிறது. மற்றபடி, கால்பந்தாட்டம் எப்படி பரபரப்பான விளையாட்டோ, அதுபோல கிரிக்கெட் ஒரு நேர்த்தியான ஆட்டம்தான்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
"வரும் லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும்' என பொன்னார் கூறி இருப்பது குறித்து
கனவு காணுங்கள் என்றார் பாரத ரத்னா ஏ.பி.ஜே.அப்துல்கலாம். பாரதத்திற்கே தாங்கள்தான் குத்தகைதாரர் என நினைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் சீனியர் தலைவர் பொன்னார் நன்றாகக் கனவு காண்கிறார்.