வாசு, பெங்களூரு
2024 லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்த சதித்திட்டம் நடப்பதாக பா.ஜ.க. கூறியிருப்பது பற்றி?
தேர்தல் களத் தில் ஒரு கட்சியை வீழ்த்துவதற்குப் பெயர் சதித்திட்டம் அல்ல, ஜனநாயக வழி. தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த தெலங்கானா மாநில சந்திரசேகரராவ் அரசைக் கவிழ்ப் பதற்காக தெலங் கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்குப் பேரம் பேசுவதற்குப் பெயர்தான் சதி.
வாசுதேவன், பெங்களூரு
மீண்டும் கமல், மணிரத்னம் கூட்டணி...?
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோ-ஹீரோயின் போல, வெற்றிகரமான ஹீரோ-டைரக்டர் களும் உண்டு. சிவாஜி-பீம்சிங், எம்.ஜி.ஆர்.-ப.நீலகண்டன் போன்ற காம்போக்களை உதாரணமாகச் சொல்லலாம். கமல்ஹாசனைப் பொறுத்தவரை, அவரது டீன் ஏஜ் பருவத்திலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு கேரக்டர்களில் வாய்ப்பளித்து, ஒரு நடிகராக அவரை திரையில் பதிய வைத்தவர் கே.பாலசந்தர். கமலுக்காக வே ஒரு கேரக்டரை வைத்தது போல அப் பட்டமாகத் தெரியும் பாலசந்தர் படங்கள் உண்டு. தெலுங்கில் "மரோசரித்ரா', இந்தியில் "ஏக் துஜே கேலியே' என கமலை, பல மொழி களுக்கும் கொண்டுசென் றார் பாலசந்தர். தமிழின் சிறந்த நடிகர்கள் வரிசையில் கமலுக்கு இடம் கிடைத்து, தேசிய விருதும் கிடைத்த நிலை யில், கமலுடன் கைகோத்தவர் மணிரத்னம். தமிழில் "பகல் நிலவு', "இதய கோயில்', "மௌன ராகம்' ஆகிய படங்களை எடுத்து தன்னை ஒரு டைரக்டராக அடையாளப்படுத்திக்கொண்ட மணிரத்னத்தின் இயக்கத்தில் முதன்முதலில் பரவலான கவனத்தை ஈர்த்த படம், கமல் நடித்த "நாயகன்.' பாலசந்தர், கமலுக்காக கேரக்டர்களை உருவாக்கினார் என்றால், மணிரத்னம் தன்னுடைய கற் பனையில் உருவான கேரக்டர் களில் கமலை வெளிப்படுத்து வதில் வெற்றி பெற்றார். 1987 தீபாவளிக்கு வெளியான "நாயகன்' திரைப்படம், ஹாலிவுட் படமான "தி காட்ஃபாதர்' படத்தின் சாயலைக் கொண்டது. மும்பையில் பிரபலமான தமிழரான வரதராஜ முதலியாரின் வாழ்க்கை நிகழ்வுகளை பிரதிபலிக்கக்கூடியது. எனினும், தமிழில் அதுவரை ஒரு ஹீரோவை சிறுவயதிலிருந்து, வயதாகி இறப்பதுவரை ஃப்ரேம் பை ஃப்ரேமாகக் காட்டும் படம் "நாயகன்' போல வெளியானதில்லை. "பொன்னியின் செல்வன்' எனும் பெருமுயற்சியை வெளிக்கொண்ட இன்றைய மணிரத்னத்தை அன்றே தனித்துவமான இயக்குநராக முதலில் வெளிக்காட்டியது "நாயகன்'தான். அதுபோல, "காதல் இளவரசன்' என்ற அளவில் ரொமான்டிக் ஹீரோவாகக் கையாளப்பட்ட கமல், நாயகனுக்குப் பிறகே ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கெட் டப்பில் தன்னை வெளிப்படுத்தும் கேரக்டர்களை முயற்சித்தார். கமல்-மணிரத்னம் இருவர் திரைப்பயணத்திலும் "நாயகன்' தனித்துவமானது. இருவரும் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். படைப்பின் தன்மை அதன் வெற்றியை நிரூபிக்கும்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
கட்சிகளால் கவர்னரை பதவிப் பறிப்பு செய்ய முடியாதுதானே?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு முதல்வரையோ, பிரதமரையோ நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவிப் பறிப்பு செய்யலாம். குடியரசுத் தலைவரைக் இம்பீச் மெண்ட் முறை மூலம் நீக்கலாம். ஆனால், ஆளுநர் பதவியில் இருப்பவரை ஜனநாயக முறை யிலோ, நீதிமன்றம் வழியாகவோ நீக்கமுடியாது. அவரை நியமித்த ஜனாதிபதி மூலமாகத்தான் நீக்கமுடியும். மக்களாலோ, மக்கள் பிரதிநிதிகளா லோ தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பதவிக்கு இத்தகைய அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பது கூட்டாட்சி முறைக்கும் மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்பது தான் ஜனநாயக அமைப்புகளின் தொடர்ச்சியான குரல்.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
மனுஸ்மிருதி நூலை வெளியிட்டு என்ன பிரயோஜனம் திருமாவுக்கு ?
பொதுவாழ்வில் இருப்பவர்கள் தனக்கு என்ன பிரயோஜனம் என்று மட்டும் பார்ப்பதில்லை. ஆயிரம் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் பொதுநலன் கருதி, தன் கொள்கையைத் துணிந்து எடுத்துரைப்பவரே இலட்சியவாதி. மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தும் சனாதன முறையை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கும் விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவனின் மற்றொரு இலட்சியகரமான செயல்பாடுதான், பெண்களையும் சூத்திரர்களையும் இழிவுபடுத்தும் மனுஸ்மிருதியின் பகுதிகளை அச்சிட்டு வழங்கிய அவரது துணிச்சலான பணி.
தே.அண்ணாதுரை, புதுப்பட்டி -தேனி.
கடந்த நாடளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் படுதோல்வி அடைந்தும் அ.தி.மு.க. உடையவில்லை, மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது என்கிறாரே எடப்பாடி பழனிச்சாமி?
அ.தி.மு.க. பலத்துடன் களத்தில் இருப்பது தான் தி.மு.க.வின் அரசியலுக்கு சரியாக இருக்கும். அ.தி.மு.க. உடையவேண்டும் என்பதும், தேர்தல் நேரத்தில் அதை ஒன்றாக்கும் முயற்சியை மேற் கொண்டு, தோளில் ஏறி கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வுக்கு சரியாக இருக்கும். அந்த அரசியல்தான் இப்போது நடக்கிறது.
பி.மணி, குப்பம் -ஆந்திரா
தி.மு.க.வில் உள்ள கூட்டணிக் கட்சிகள் பத்து சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதே?
கூட்டணியில் உள்ள தேசியக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மாறுபட்ட பார்வை இருப்பதும், கூட்டணியில் இல்லாத பா.ம.க., ம.நீ.ம., நா.த.க. போன்ற மாநிலக் கட்சிகளுக்கு உள்ள பார்வையும் தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கையின் வெளிப்பாடு.