.மணி, குப்பம் -ஆந்திரா
தீண்டாமைக் கொடுமை இன்னும் நிகழ்வது குறித்து?
இடுப்புக்கு கீழே துணியில் லாதவன், தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு பெருமை பீற்றிக் கொண்டானாம். இந்தியாவில் சாதிப் படிநிலை அப்படித்தான் மனிதர்களை மாற்றியிருக்கிறது. தன்னுடைய உரிமைகளையும் சுயமரியாதையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகப் பறித்து வைத்திருக்கும் சாதிய சமூத்தில், தனக்கு கீழே சிலர் இருக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனநிலை ஒவ்வொரு தரப்பினரிடமும் இருக்கிறது. காசு கொடுத்தாலும் மிட்டாய் தர மாட்டேன் என்ற தென்காசி மாவட்ட பெட்டிக் கடைக்காரரின் மனநிலையும் அவருக்கு அந்தக் கட்டளையை இட்டவர்களின் போக்கும் இடுப்பு வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் முண்டாசை இறுகக்கட்டி மீசை முறுக்கும் மனோபாவம்தான்.
இரா.அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை -புதுச்சேரி
“தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். ஸ்டாலின், அவரின் மகன், மனைவி, மருமகன் ஆகியோர் ஆட்சி செய்துகொண்டி ருக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது பற்றி?
அ.தி.மு.க.வுக்கு இது பொன்விழா ஆண்டு நிறைவு. அதாவது, 50 ஆண்டுகள் முடிவடைகிறது. 1972, அக்டோபர் 17-ஆம் நாள் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, கலைஞர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும்தான் குற்றம்சாட்டினார். “"மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்'’என்று கலைஞர், தன் பிள்ளைகள் குடும்பத்தினர் நலனில்தான் அக்கறை செலுத்துகிறார் என்று எம்.ஜி.ஆர். தனது படத்தில் வாயசைத்த பாட்டு வரிகூட உண்டு. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா வந்தார். அவரும் கலை ஞரையும், கலைஞர் குடும்பத்தையும்தான் விமர்சித்தார். தீயசக்தி கருணாநிதி என்றார். கனிமொழிவரை ஜெ. கொச்சைப்படுத்திப் பேசினார். இப்போது எம்.ஜி.ஆர். இல்லை, ஜெயலலிதா இல்லை. எம்.ஜி.ஆர் சார்பிலும் ஜெயலலிதா சார்பிலும் யாரும் அரசியலிலும் இல்லை. அதே நேரத்தில் கலைஞரும் இல்லை. ஆனால், அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். மக்களின் ஓட்டு களை வாங்கி முதல்வரான மு.க.ஸ்டாலினை, சசிகலாவின் காலில் விழுந்து முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அதே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாணியில் குடும்ப அரசியல் என்று விமர்சிக்கிறார். 50 ஆண்டு களாக அ.தி.மு.க உயிர்ப்புடன் இருப்பதற்காக, கலைஞர் குடும்பத்திற்கு அந்தக் கட்சி நன்றி சொல்ல வேண்டும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"அரசியல்வாதிகளின் யாருடைய நடைப்பயணம் நயம்பயப்பதாக இருந்தது; நகைப்புக்குரியதாக மாறியது..?!
இந்திய வரலாற்றில் அதிக கவனம் ஈர்த்த முதல் நடைப்பயணம் என்றால் அது காந்தி மேற்கொண்ட தண்டி யாத்திரைதான். உப்பு சத்தியா கிரகம் என்ற பெயரில் அவர் மேற்கொண்ட நடைப்பயணம் கிராமம், நகரம், வயல், ஒற்றையடிப் பாதை எனப் பல இடங்கள் வழியாகவும் சென்றது. ஒவ்வொரு நாளும் ஒரு திட்டத்துடன் அவர் அந்த நடைப்பயணத்தை வடிவமைத்து, கடைசியாக தண்டியில் உப்பை அள்ளி பிரிட்டிஷ் அரசுக்கு சவால் விடுத்தார். அதே காலகட்டத் தில், திருச்சியிலிருந்து வேதா ரண்யம் நோக்கி ராஜாஜி தலைமையில் தமிழ்நாடு காங்கிரசார் உப்பு சத்தியாகிரக யாத்திரை நடத்தினர். சுதந்திரத் திற்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரசார் பல யாத்திரைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். எனினும், அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது, எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் அறங்காவல் அதிகாரி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு மதுரை முதல் திருச்செந்தூர் வரை கலைஞர் மேற்கொண்ட நடைப்பயணம்தான். அதன்பிறகு, தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க. பிரிந்தபிறகு வைகோ இரண்டு முறை நடைப்பயணம் மேற் கொண்டிருக்கிறார். அன்றைய ஊடகங் களிடம் மிகுந்த கவனிப்பைப் பெற்ற நடைப்பயணங்கள் அவை. குமரி அனந்தன், சிவாஜி கணேசன் என பலரும் நடைப்பயணம் மேற்கொண் டுள்ளனர். ஒவ்வொருவரின் பயணமும் அவர்கள் அரசியலுக்கு நயம்பயத்தது. அரசியல் எதிரிகளுக்கு நகைப்புக் குரியதாக இருந்தது.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் தி.மு.க.வுக்கு பின்னடைவா?
தி.மு.க.விலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலர் விலகியிருக் கிறார்கள். சிலர் விலக்கப்பட்டிருக் கிறார்கள். சுப்புலட்சுமி ஜெகதீசனைப் பொறுத்தவரை அவர் மாநில துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தாலும் உள்ளூர் அரசியலில் தற்போது செல்வாக்கு நிரம்பியவர் களால் அவர் விலக்கப்பட் டார். அதனால், ஒட்டு மொத்தமாக தி.மு.க.விலிருந்து விலகி, அரசியலி-ருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். மேற்கு மண்டலத்தில் இந்துத்வா சக்திகள் வலிமையடைந் துள்ள நிலையில், சீனியர் களை இழப்பது பற்றி தி.மு.க. யோசிக்க வேண்டிய நேரம்.
தே.மாதவராஜ், திருவள்ளு வர் நகர் -கோயமுத்தூர்
ஆ.ராசாவின் பேச்சுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளாரே?
அரசியல் களத்தில் எதிரெதிராக இருந்தாலும் இருவரும் மனுஸ்மிருதியைப் படித்திருக்கிறார்கள். அதன் அர்த்தத்தை உணர்ந்திருக் கிறார்கள்.