பிரகதிசுருதி லட்சுமிவைரவன், நவி மும்பை
தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய காலை உணவுத் திட்டம் பற்றிய முழு விளக்கம் தெரியவில்லை?
நீதிக்கட்சி ஆட்சியில் பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார். எம்ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தார். கலைஞர் அதனை முட்டையுடன் வழங்கினார். ஜெயலலிதா ஆட்சியிலும் கலவைச் சோறு திட்டம் கொண்டு வரப்பட்டது. இவை மதிய நேரத்து உணவு. காலை நேரத்தில் குழந்தைகளுக்குப் போதிய சத்துகளுடன் உணவு கிடைக்க வேண்டும் என்பதை மருத்துவத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலை யில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை முதல்கட்டமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
"ஹிந்தி ஒரு நட்பு மொழி' என அமித்ஷா கூறி இருப்பது குறித்து?
நட்பு என்பது தனக்கான தேவையைவிட தன்னைச் சார்ந் திருப்பவர்களின் தேவையை உடனடியாக நிறைவேற்றுவதாகும். இந்தியா என்ற நாட்டைப் பல்வேறு மொழிகள் சார்ந்துள்ளன. ஆனால், இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக உள்ள (தேசிய மொழியாக அல்ல) இந்திக்கு மட்டும் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுத்து "இந்தி திவாஸ்' என்ற பெயரில் அதற்கான கொண்டாட்டத்தை நடத்துவது என்பது நட்பின் அடையாளம் அல்ல. ஆதிக்க அதிகாரத்தின் வெளிப்பாடு. இந்தி மொழியைப் பேசும் மாநிலங்கள் என்று சொல்லப்படும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் போஜ்புரி, மைதிலி, சந்தாலி, ராஜஸ்தானி, அவதி உள்ளிட்ட பல மொழிகள் இந்தி மொழியால் அழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன. பழங்குடி மக்களின் மொழிகள் பலவும் இந்தியால் அழிக்கப் பட்டுவிட்டன. அந்த மொழிகளை மீட்கும் முயற்சியில் மொழி ஆர்வலர்களும் பொதுமக்களும் ஈடுபட்டு வந்துள்ளனர். மொழிவழி மாநிலங்களின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், "ராஜஸ்தானி' என்ற மொழி என்னவானது என்பது கேள்விக் குறி. மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் மராட்டியத்தைப் பின்னுக்குத் தள்ளி இந்தி ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்துக் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. கொல்கத்தாவில் வங்காளத்திற்காகவும், பெங்களூருவில் கன்னடத்திற்காகவும் அந்த மொழி பேசும் மக்கள் பேசுகிறார்கள். மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள இந்தி மொழிப் பெயர்ப் பலகைகளை அடித்து உடைக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம், இந்தி உண்மையான நட்பு மொழியாக இல்லை. நண்பன் போல தோள் மேல் கைபோட்டு, கழுத்தை நெரிக்கும் வேலையைத்தான் செய்து வருகிறது. இந்திக்காக பசப்பும் அமித்ஷா, உண்மையாகவே மாநில மொழிகள் மீது அக்கறை கொண்டிருந்தால் இந்தியாவின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்தியைப் போல ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மாற்றிட வேண்டும். அதற்குப் பெயர்தான் நட்பு. இப்போது சொல்வதெல்லாம் தப்பு.
வாசுதேவன், பெங்களூரு
முதலிடம் பிடித்த வண்டலூர் உயிரியல் பூங்கா.. !
மிருகக்காட்சி சாலை என்று சென்னை கிண்டியில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த காட்டு விலங்குகள், அரிய பறவைகள் ஆகியவற்றை வண்டலூரில் மலைக்காட்டை ஒட்டிய பகுதியில் உயிரியல் பூங்காவாக அமைத்தவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வண்டலூர் உயிரியல் பூங்காவை அறிஞர் அண்ணா பெயரில் அமைத்தார். அதன் பிறகு, தொடர்ச்சியாக பல வசதிகள் கொண்டுவரப்பட்டன. கூண்டுகளில் உள்ள விலங்குகளை மனிதர்கள் பார்க்கும் நிலை மாறி, மனிதர்கள் கூண்டு போன்ற பேட்டரி வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு, பரந்த அளவில் உலவும் சிங்கம் போன்ற விலங்குகளைப் பார்க்கும் நிலை உருவானது. திடீர் திடீரென விலங்குகள் காணாமல் போவது, கவனிப்பின்றி இறந்துபோவது போன்ற நிர்வாகச் சிக்கல்கள் இருந்தாலும் "வண்டலூர் உயிரியல் பூங்கா' என்பது தமிழ்நாட்டுத் தலைநகரின் பெருமைகளில் ஒன்று.
ஐஸ்வர்யா, வேளச்சேரி
நயன்தாரா விட்ட இடத்தை மிஸ் இந்தியா நடிகை காவ்யா ஷெட்டி நிரப்புவாரா?
சரோஜாதேவி இடத்தையே இன்னும் யாரும் நிரப்ப முடிய வில்லை. ஸ்ரீதேவி இடமும் அப்படித்தான். ராதா, குஷ்பு, சிம்ரன் உள்பட யாருடைய இடமும் நிரப்பப்பட வில்லை. நிரப்பப்படவும் முடியாது. அவரவர் இடம் தனித்துவமானது. நயன்தாரா இடம் அவருடையது. அவரைத் தொடர்ந்து வருபவர் கள் ரசிகர்களிடம் பெறுகிற செல்வாக்கைப் பொறுத்து அவர்களுக்குரிய இடத்தைப் பெறுவார்கள்.