எம். நிர்மலா, வாணரப்பேட்டை, புதுச்சேரி

இந்தியா 2047-ல் பொருளா தாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும் என்று நிர்மலா சீதா ராமன் கூறியிருக் கிறாரே...?

1947ல் இந்தியா சுதந்திரமடைந்ததி லிருந்து மெல்ல மெல்ல முன்னேறிதான் வந்து கொண்டிருக் கிறது. உலக அரங்கில் இந்தியாவுக்கென முக்கியத்துவமும் இருந்து வருகிறது. ஆனால், இந்திய மக்கள் தனிப்பட்ட முறையில் எந்தளவு முன்னேறினார்கள் என்பதுதான் கவனத்திற்குரியது. பெட்ரோல், டீசல், கேஸ், விலை உயர்வு, பலவிதமான வரிகள் என இப்போதுபோல இந்திய மக்கள் கடும் அழுத்தத்தை சந்தித்தது இல்லை. தனி மனித வாழ்வை உயர்த்தாமல், இந்திய சுதந்திர நூற்றாண்டான 2047ல் பொருளாதாரத்தில் என்னதான் உயர்ந்தாலும் அது வெறும் விளம்பரமாகத்தான் இருக்கும்.

திலகர் ஈஸ்வரன், தேவூர், -மேட்டுக்கடை

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும் என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?

அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பிற மாநிலத்தவர்கள் குறிப்பாக வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் குடிமக்கள் எந்த மாநிலத்திலும் வேலை பார்க்க முடியும் என்றாலும், தங்கள் மாநிலத்தில் போதிய வேலைவாய்ப்பு வசதிகள் இல்லாமல் தமிழ்நாட்டை நோக்கி வரும்போது, இங்கே உள்ள தகுதியானவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தினரே அதிகளவில் அரசுப் பணி களில் இருந்த நிலையை மாற்றி, தமிழ்நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற் காகத் தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கமான நீதிக்கட்சி. அதன் தொடர்ச்சிதான் தி.மு.க. இன்று முன்னெடுக்கும் சமூக நீதி. டாக்டர் ராமதாஸ் சொல்வதை இந்தக் கோணத்தில் அணுகினால், சமூகநீதி யின் அடுத்த கட்டமாக தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை இயற்றுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

dd

Advertisment

கிருத்திகா கோவிந்த், ஹைதராபாத்

தமிழ் சினிமாவில் நன்கு நடனம் ஆடக்கூடிய ஹீரோயின்களை சமீப காலமாக பார்க்க முடியவில்லையே?

சொந்தக் குரலில் நடிகர்-நடிகையர் பாடிய காலத்தில், நடனக் காட்சிகளுக்கு லலிதா-பத்மினி-ராகினி போன்றவர்களைப் பயன்படுத்தினார்கள். பிறகு ஜோதி லட்சுமி, ஜெயமாலினி, சில்க், அனுராதா, டிஸ்கோ சாந்தி போன்ற நடிகைகளுக்காக தனிப் பாடல் காட்சிகள் வைக் கப்பட்டன. அதுபோன்ற பாடல் காட்சிகளுக்கும் நாங்களே இருக்கிறோம் என ஹீரோயின்களே ரெடியானபிறகு தனியாக நடன நடிகைகள் தேவைப்படவில்லை. தற்போது ஒரு சில படங்களில்தான் முழுமையான பாடல் காட்சிகள் இடம்பெறுகின்றன. திரைப்படங்கள் ஓ.டி.டி தளத்தில் ரீலீசாகி வீட்டிலேயே படம் பார்க்கின்ற சூழல் வந்தபிறகு, பாடல் காட்சிகளை ஃபார்வேர்டு செய்யும் பழக்கம் அதிகமாகிவிட்டது. அதனால் டான்ஸ் காட்சிகள் குறைந்து விட்டன. காட்சிகளே இல்லாதபோது நன்கு ஆடக்கூடிய ஹீரோயின்களை முன்பு போல எப்படி பார்க்க முடியும்?

பி.மணி, வெள்ளக்கோவில் -திருப்பூர்

கமலின் மக்கள் நீதி மையம் கட்சி துவங்கியபோது இருந்த எழுச்சி தற்போது இல்லாமல் போய்விட்டது ஏன்?

தேர்தல் களத்தில் வெற்றி பெறாமல் ஒரு கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியாது. மக்களின் செல்வாக்கைப் பெறாமலேயே ஒரு கட்சி திரும்பத் திரும்பத் தேர்தல் களத்தில் நிற்குமானால் அதன் செலவுக்கு வேறு எங்கிருந்தோ பணம் வருகிறது என்று அர்த்தம். சிவாஜி யின் தமிழக முன்னேற்ற முன்னணி, பாக்யராஜின் எம்.ஜி. ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் உண்மை நிலையைப் புரிந்து அரசியலைவிட்டு ஒதுங்கி விட்டன. சரத்குமார், சீமான் போன்றவர்கள் தங்கள் அளவிலான செல்வாக்கைப் பயன்படுத்தி தாக்குப் பிடிக் கிறார்கள். கமலின் அரசியல் தொடக்கம் பிக் பாஸ் போல பிரம்மாண்டமாக இருந் தது. ஆனால், தேர்தல் களத்தில் அது விஸ்வரூபம் இரண்டாம் பாகம் போல ஆகிவிட்டது. மக்கள் நீதி மய்யம் சமாளித்து எழுமா, டி.ராஜேந்தரின் லட்சிய தி.மு.க. போல செயல்படாத கட்சி என அறிவிக்கப்படுமா என்பது அடுத்து வரும் களங்களில் தெரிந்துவிடும்.

தே.மாதவராஜ், திருவள்ளுவர் நகர் -கோயமுத்தூர்

"திராவிட மாடல்' திருமணங்கள் எப்படி இருக்கும்?

புரோகிதர் இல்லாமல், சமஸ்கிருத மந்திரம் இல்லாமல், யாகம் வளர்க்காமல் குடும்பத்தினரும் நண்பர்களும் இயக்கத்தினரும் ஒன்று கூடி, தமிழில் வாழ்த்துச் சொல்லி நடைபெறும் திருமணம்தான் திராவிட மாடல் திருமணமான சுயமரியாதை திருமணம். இதை மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் என்று சொல்லி அப்படியே நடத்தி வைத்தார் பெரியார். அண்ணா அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்தார். "பராசக்தி' படத்தில் "இரண்டு மாலை -ஒரு சொற்பொழிவாளர்'’ என்று திராவிட மாடல் திருமணத்திற்கு இலக்கணமாக வசனம் எழுதியிருப்பார் கலைஞர். ஆனால், இன்று செல்வாக்கான திராவிடக் கட்சிக்காரர்கள் நடத்தும் திராவிட மாடல் திருமணங்கள் அரச குடும்பத்து திருமணங்கள் போல அரண்மனை செட்டிங்குகளில் நடைபெறுகின்றன.