ம.தமிழரசி, வெள்ளக்கோவில்

கவிஞர் கண்ணதாசன், வாலி இவர்களில் யார் அதிகம் மக்களை கவர்ந்தவர்?

dd

Advertisment

கண்ணதாசனும் வாலியும் ஒரே நேரத்தில் புகழின் உச்சியில் இருந்த காலத்தில், திரைப்படங்களைப் பார்த்த -பாடல்களைக் கேட்ட ரசிகர்களுக்கு அது கண்ணதாசன் பாட்டு, வாலி பாட்டு என்பதைவிட எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு, எஸ்.எஸ்.ஆர். பாட்டு, ஜெமினி பாட்டு என்றுதான் நினைத்தார்கள். எழுதியவர்களைப்போலவே பாடிய டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராசன், பி.பி.சீனிவாஸ், ஏ.எம்.ராஜா போன்ற வர்களையும் தாண்டி ஹீரோக்களின் பாட்டுகளாகவே மனதில் பதிய வைத்துக்கொண்டனர். அதன்பிறகு, பாடல்களைத் தொடர்ந்து கேட்கத் தொடங்கியதும், நல்ல பாட்டு எல்லாமுமே கண்ணதாசன் பாட்டுக்களாக ரசிகர்கள் மனதில் பதிந்தன. காரணம், கண்ணதாசன் பின்பற்றிய பாடல் எழுதும் முறையை வாலியும் பின்பற்றி சிறப்பாக எழுதினார். இவர்கள் இருவர் மட்டுமல்ல, மருதகாசி, தஞ்சை ராமய்யாதாஸ், கவி கா.மு. ஷெரீப், கு.மா.பாலசுப்ரமணியம், புலமைப்பித்தன் உள்ளிட்ட பலரும் அப்போது மிகச் சிறந்த பாடல்களைத் தந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் தனித்துவ மானவை. ஆனாலும், திரை இசை என்றால் கண்ணதாசன், வாலி, அப்புறம் வைரமுத்து என்கிற அளவில் ரசிகர்கள் மன தில் பதிந்துவிட்டது. திரையில் பார்ப்பதை மட்டுமே அவர்கள் மனதில் கொள்கிறார்கள். திரைக்குப் பின்னே நடப்பது தெரிவ தில்லை. சினிமாவிலும், அரசியலிலும், வாழ்க்கையிலும்.

தே.மாதவராஜ் , திருவள்ளுவர் நகர் -கோயமுத்தூர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஜெயலலிதா மரணம், கொடநாடு வழக்கு, ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கு அனைத்தும் ஊத்திக்கிடும் போல இருக்கே?

நேரு காலத்தில் அம்பலமான முந்த்ரா ஊழல் தொடங்கி, மோடி காலத்து ரஃபேல் வரை எல்லாம் என்ன ஆனதோ, அது போலத்தான் நீங்கள் குறிப்பிடுவதும். அதில் ஒன்றிரண்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியா மல் வசமாக சிக்கிக் கொள்ளும். ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு போல. அந்த நம்பிக்கையுடன், உங்கள் லிஸ்ட்டில் எத்தனை சிக்குகிறது என்று காத்திருந்து பார்க்கலாம்.

மல்லிகா கணேசன், பரவை -மதுரை

தமிழ் மொழி வளர்ச்சியில் திராவிடச் சிந்தனையாளர்களுக்கு பங்குண்டா?

ஆரியத்தின் தாக்கத்திற்கு எதிராகவும் சமஸ்கிருதத் திணிப்பிற்கு எதிராகவும் தமிழ்நாட்டில் எழுந்த சிந்தனைகள் பலவும் திராவிடச் சிந்தனைகள்தான். அதனால்தான், சைவசமயத் திருமுறைகளை வழங்கியவரான திருஞானசம்பந்தரை திராவிட சிசு என்று ஏகடியம் பேசினார் ஆதிசங்கரர். வைணவத் திருமுறையான நாலாயிரத் திவ்ய பிரபந்தம், திராவிட வேதம் எனப்பட்டது. சித்தர்கள் பலரின் பாடல்களும் பகுத்தறிவு ஒளிரும் திராவிடச் சிந்தனைதான். அதன்பிறகு, ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தபிறகு வீரமாமுனிவர், கால்டுவெல், எல்லீஸ், ஜி.யு.போப் உள்ளிட்ட பலரும் தமிழ்மொழி மீது பற்று கொண்டு, அதனை ஆராய்ச்சி செய்து, தமிழ் தனித்தியங்கும் மொழி என்பதையும், சமஸ்கிருதம் போல அல்லாமல், தமிழும் அதிலிருந்து உருவான மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதையும் ஆதாரங்களுடன் முன்வைத்தனர். சூரிய நாராயண சாஸ்திரி என்கிற தன் பெயரை பரிதிமாற்கலைஞர் எனத் தூய தமிழில் மாற்றிக்கொண்டவர், தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என 100 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியவர். இந்திய அரசால் தமிழ், செம்மொழி என அறிவிக்கப்பட்டதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றளவிலும் நடைமுறையில் உள்ள, "நீராருங் கடலுடத்த' பாடலை எழுதிய மனோன்மணீயம் சுந்தரனார், சிகாகோ சென்று திரும்பிய சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தின் பெருமையைப் பற்றி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பேசியபோது, நாங்கள் இந்துக்கள் அல்ல, திராவிடர்கள் என்று முழங்கியவர். திராவிடச் சிந்தனை யாளர்களால்தான், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

ஜம்மு காஷ்மீரில் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிக்கை குறித்து?

நீண்ட காலமாக தடை விதிக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரில் எப்படி இத்தனை லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்? அதுதான் பா.ஜ.க.வின் திருவிளை யாடல். ஜம்மு காஷ்மீருக்கு நேரு காலத்திலிருந்து அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலம் என்கிற அந்தஸ்தையும் பறித்து, யூனியன் பிரதேசமாக்கியது. மோடி-அமித்ஷா அரசு. அப்படி செய்தது சரிதான் என்று மற்ற மாநிலங்களுக்கு காட்ட வேண்டு மென்றால், காஷ்மீர் அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு, வெளி மாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, தேர்தலில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணியும் ஜெயித்தாக வேண்டும். தில்லாலங்கடித்தனத்திற்குப் பெயர் ஜனநாயகம்.

வாசுதேவன், பெங்களூரு

ராகுல்காந்தியின் பாத யாத்திரை..?

இனிமேலாவது காங்கிரஸ் எழுந்து நடக்கிறதா என்று பார்க்க வேண்டும்.