மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.

கச்சத்தீவை பா.ஜ.க. மீட்கும் என்கிறாரே அண்ணாமலை?

mm

Advertisment

இலங்கையை வைத்து அரசியல் செய்யும் காலம் முடிந்துவிட்டதாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நினைப்பதால், கச்சத்தீவு அரசியலைக் கையில் எடுக்கிறார்கள். இந்த அரசியலை 1991ஆம் ஆண்டில் தொடங்கியவர் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. ராஜீவ்காந்தி படுகொலையை அரசியலாக்கி, வெற்றி பெற்று, ஈழத்தமிழர்களை எதிரிகளாக்கி, தமிழீழம் பற்றி பேசுபவர்களைத் தடாவில் தள்ளி, தமிழறிஞர்களை ஒடுக்கி வைத்துவிட்டு, கச்சத்தீவு அரசிய லைக் கையில் எடுத்தார். தி.மு.க ஆட்சியில்தான் அது இலங் கைக்குத் தாரை வார்க்கப்பட் டது என்பது அவரது வாதம். ஒரு நாட்டிற்கு சொந்தமான பகுதியை மாநில அரசால் தாரை வார்க்க முடியாது என்ப தைக்கூட அறியாத ண்ழ்ர்ய் ப்ஹக்ஹ் அல்ல அவர். இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது கச்சத்தீவு தாரை வார்க் கப்பட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவித்தது கலைஞர் தலைமை யிலான மாநில தி.மு.க அரசு. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட தற்கு ஆதரவாக சட்டமன்றத் தில் செயல்பட்டது எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. என்பது வரலாறு. ஆனாலும், அரசியலுக்கு அதெல்லாம் அவசியமில்லையே! 1991 ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் முதன்முறையாகக் கொடியேற்றினார் ஜெயலலிதா. அப்போது கச்சத்தீவை மீட்பேன் என்றார். 2016 ஆகஸ்ட் 15ல் கடைசி முறையாகக் கொடியேற்றி னார். அப்போதும் கச்சத்தீவை மீட்பேன் என்றார். சொல் மாற வில்லை. செயல் ஏதுமில்லை. மாநில அரசால் கொடுக்கவும் முடியாது. மீட்கவும் முடியாது. ஒன்றிய அரசை ஆளும் கட்சி யின் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை, தமிழ் நாட்டு அரசியலில் புதிய ஜெய லலிதாவாக மாற நினைத்திருக்க லாம். கச்சத்தீவு அவரிடம் இப்போது சிக்கியுள்ளது.

திலகர் ஈஸ்வரன், தேவூர் -மேட்டுக்கடை

2024 பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மோடி எதிர்ப்பு ஒன்றே எதிர்க்கட்சி களுக்குப் போதுமானதா?

போதும்.. அந்த எதிர்ப்புடன், மோடி அரசின் மோசமான திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்பு களை உணர்ந்திருக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் எதிர்க்கட்சியினரிடம் ஒத்து ழைப்பு வேண்டும்.

பி.ஓம்பிரகாஷ், சென்னை-118

நவீன வசதிகள் கொண்ட செல்போன், கல்விக்கு உதவுவ துடன்... தற்கொலைப் பாடங் களையும் கற்றுத் தருகிறதே?

ரயில் என்பது மக்களின் பயணத்தை எளிதாக்குவதற்காக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் தண்டவாளத் தில் தற்கொலை செய்து கொள்ள முடியும் என்பதை விரக்தி அடைந்த மனிதர்கள் கண்டு பிடித்தார்கள். மின்சாரம் என்பது இரவைப் பகலாக்கும் விஞ் ஞானக் கண்டுபிடிப்பு. அதில் ஷாக் அடித்து செத்துப் போகும் ஆபத்தும் உள்ளது. யானை என்பது காடு முழுவதையும் வாழவைக்கும் பெரிய விலங்கு. அதை நாட்டுக்குள் கொண்டு வந்து பிச்சை எடுக்க வைப்பவர் களும் இருக்கிறார்கள். எல்லா வற்றிலும் நன்மையும் தீமையும் உண்டு. செல்போன் என்பது அறிவியல் தொழில்நுட்பத்தின் அற்புதக் கண்டுபிடிப்பு. உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்த சாதனைச் சாதனம். ஆனால், அது காட்டு யானை நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பிச்சை எடுக்கப் பழக்கிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறது.

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

டாஸ்மாக் போல வருமானம் கொட்டுவதாக இருந்தால்தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பு வது சரிதானா?

கேள்வியிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விடை, வனத்துறை என்பது முக்கியமான துறை, வனப் பாதுகாப்பு என்பது இன்றைய நிலையில் இயற்கையின் சமச்சீர்த் தன்மைக்கு இன்றியமையா தது, காடுகளின் பரப்பளவு குறைந்துகொண்டே வருவது பூமிக்கு நல்லதல்ல என்கிற சிந்தனைதான். மற்றபடி, இதே டாஸ்மாக்கை மூட வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்குகளில், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடி யாது என்ற உத்தரவுகள் வழங்கப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வினோத், வாசுதேவநல்லூர்

மாவலியார் சமீபத்தில் ரசித்த திரைப்படம் எது?

படம் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதுதான் உலக அரங்கில் சிறந்த நடிகரான அவருக்கு முதல் படம். அப்படியா என்று கேட்பதுபோல அசாத்தியமான நடிப்பு. அனல் தெறிக்கும் வசனங்கள். பளிச் பளிச் பஞ்ச் டயலாக்குகள். இப்படி இன்றும் எவர்க்ரீனாக இருக்கும் "பராசக்தி' படத்தை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. "நீ மெட்ராசுக்கு மேயரா வரும்போது சரி பண்ணு' என்றொரு வசனம் படத்தில் வரும். வசனகர்த்தா, கலைஞர் மு.கருணாநிதி. தி.மு.க. வசம் சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடும் வந்தபிறகு, பராசக்தி படத்தின் பல வசனங்கள் சாதனைத் திட்டங்களாக மாறியிருப்பதை இப்போது உணர முடிகிறது. கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டது, பிச்சைக்காரர் மறுவாழ்வு மையம், பெண்களுக்கு சொத்துரிமை, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊக்கத்தொகை இப்படிப் பலவற்றைப் பராசக்தி எதிரொலித்துள்ளது.

ஆர்.கௌரி, சேலம்

அரசியல்வாதிகளைப் போல் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது முறையானதா?

அரசாங்கத்தையே இயக்குபவருக்கு இம்புட்டு பாதுகாப்புகூட இல்லைன்னா எப்படிங்க?