நித்திலா, தேவதானப்பட்டி
சுதந்திரம் வாங்கித் தந்ததாகச் சொல்லும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கூட இந்தளவுக்கு சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறவில்லையே... பா.ஜ.க. ஆட்சியில்தானே நாடெங்கும் தேசியக் கொடி ஏற்றிக் கொண்டாடியிருக்கிறார்கள்?
இப்போது கொண்டாடப்பட்டது சுதந்திரத் தின் 75-வது ஆண்டு விழா. அதாவது, பவழ விழா. 1972-ல் சுதந்திரத்தின் 25-வது ஆண்டு விழா கொண் டாடப்பட்டது. அது வெள்ளி விழா. அப்போது இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். பங்களாதேஷ் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா போர்புரிந்து பெரும் வெற்றி பெற்றிருந்த நேரம். அதனால், இந்திய மக்களிடம் இயல்பாகவே ஒரு பெருமிதம் இருந்தது. அதனால், சுதந்திர வெள்ளிவிழா இயற்கையாகவே சிறப்பாக அமைந்தது. 1997-ல் இந்திய சுதந்திரத்தின் 50-வது ஆண்டு. அதாவது, பொன்விழா. அப்போது, காங்கிரஸ் ஆதரவில் ஐக்கிய முன்னணி கூட்டணியின் பிரதமராக ஐ.கே.குஜ்ரால் இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பம் வெளியிடப்பட்டு, ஒரு தலைமுறையையே தேசியக் கொடியுடன் தெருக்களி லும், மைதானங்களிலும், மேடைகளிலும் தன்னியல் பாகத் தோன்ற வைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், தேசத்தைப் போலவே தேசியக் கொடியும் விற்பனைப் பண்டமாக்கப்பட்டு, கட்டாய தேசபக்தியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது.
சங்கர சுப்பிரமணியன், பாளையங்கோட்டை -நெல்லை
வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை ஏற்றலாமா?
சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற நாட்களில் தேசியக் கொடியை ஏற்றலாம். கொடி என்பது 3 பங்கு நீளம், 2 பங்கு அகலம் கொண்டதாக இருக்கவேண்டும். அந்தக் கொடியில் காவி, வெள்ளை, பச்சை மூன்று வண்ணங்களும் சமமான அளவில் இடம்பெற்றிருக்க வேண்டும். வெள்ளைப் பகுதியில் நடுநாயகமாக நீல நிற அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அளவுகளை மாற்றியோ, தலைகீழாகவோ கொடியை ஏற்றவே கூடாது. அதனால் காதிபவன் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாகவே கொடி தயாரித்து விற்கப்படும். ஆனால், இந்த முறை எப்படி வேண்டுமானாலும் கொடி இருக்கட்டும், தனக்கு வேண்டியவர்களுக்கு விற்பனை ஆனால் போதும் என மோடி அரசு முடிவு செய்து, கதர்த் துணிக்குப் பதில் அம்பானி நிறுவனத்தின் பாலியஸ்டர் கொடிகள் பரபரப்பாக விற்கப்பட்டன. தாறுமாறான அளவுகளில் கொடிகள் உருவாக்கப்பட்டன. சில கொடிகளில் காவி நிறத்திற்கு மட்டும் கூடுதல் இடம் ஒதுக்கப்பட்டது. தர்மச் சக்கரம் தர்மத் திற்கு இடம் பெற்றது. தலைகீழாக கொடி பறந்த செய்திகளும் வெளியாயின.
சு.வெங்கடேஷ், கோட்டயம்
1947ல் காந்தி வாங்கித் தந்த சுதந்திரம், 2022-ல் கோட்சே ஆதரவாளர்கள் கொடியேற்றிக் கொண்டாடிய சுதந்திரம். மாவலியின் பார்வை என்ன?
காந்தி மட்டுமல்ல, காந்திக்கு முன்பாக வும் காந்தியின் சமகாலத்திலும் பாடுபட்ட பலரின் உழைப்பும் இந்திய விடுதலைக்கு அடித்தளமாக இருந்தது. அதில், காந்தியின் வியூகமும் செயல்பாடுகளும் முக்கியமானவை. இந்திய விடுதலையின்போது பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதால், எல்லைப் பகுதிகளில் மதக்கலவரம் வெடித்தது. அப்போது கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட இன்றைய வங்காள தேசத்தின் எல்லையில் இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்ட நிலையில், கல்கத்தாவுக்கு சென்றிருந்தார் காந்தி. அங்கே ஹைதிரி மன்ஸில் என்ற முஸ்லிம் இடத்தில் தங்கி, இருதரப்பு அமைதிக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டார். 1947, ஆகஸ்ட் 15 நள்ளிரவில் டெல்லியில் கொடியேற்றி நேரு, பட்டேல், ராஜேந்திரபிரசாத் போன்றவர்கள் விடிய விடிய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இருந்தனர். காந்தியோ கல்கத்தாவில் எந்தவிதக் கொண்டாட்டமும் இல்லாமல் உண்ணாநோன்பு, தியானம், ராட்டை நூற்றல் எனத் தன் தொண்டர்களுடன் பொழுதைக் கழித்தார். மதக்கலவரம் அடங்கி அமைதி திரும்பு கிறதா என்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். அன்றைய நாளில் அவர் தங்கியிருந்த இடத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. 2022-ல் கோட்சே ஆதரவாளர்கள் திடீர் தேசபக்தர்களாகி, கொடியேற்றிக்கொண்டிருந்தபோதும், மழை மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக, கல்கத்தாவில் காந்தி தங்கியிருந்த இடத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் இந்த ஆண்டும் குறித்த நேரத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற முடியவில்லை. காந்தி தேசம், கோட்சேக்களிடம் சிக்கியிருக்கிறது.
தூயா, நெய்வேலி
செங்கோட்டை கொடியேற்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொடியேற்றம் என்ன வித்தியாசம்?
1947 முதலே செங்கோட்டையில் பிரதமர்தான் சுதந்திர தினத்தில் கொடியேற்றுகிறார். ஆனால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆகஸ்ட் 15-ல் ஆளுநர்கள்தான் கொடியேற்றி வந்தனர். மாநில முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று 1969, 1972 எனத் தொடர்ச்சியாக அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்தி வந்தார். அதன் விளைவாகத்தான் 1974 முதல் அந்தந்த மாநில முதல்வர்களும் தலைமைச் செயலகத்தில் கொடியேற்றலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது. கலைஞர் பெற்றுத் தந்த உரிமையில், பா.ஜ.க. முதல்வர்கள் உள்பட எல்லா மாநில முதல்வர் களும் கொடியேற்றிய நாளில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி அந்த உரிமையை நினைவுபடுத்திப் பேசினார்.