மஞ்சுவாசுதேவன், பெங்களூரு
ஹோட்டல்களில் அன்று சாப்பிடச் சென்றதும், சூடாக என்ன இருக்கு என்று கேட்டதையும், இப்பொழுது சென்றால் மெனு கார்டு பார்த்து ஆர்டர் கொடுப்பதையும், ஒப்பிடுக?
சூடாக என்ன இருக்கு என்று கேட்ட காலத்தில் வீட்டில் செய்ய முடியாத பலகாரங்கள் நிறைந்திருந்தன. மெனு கார்டு பார்க்கும்போது, வெளிநாட்டு பர்கர் முதல் வீட்டில் மிஞ்சிய பழையசோறு வரை இருக்கிறது. காசுக்கேற்ற தோசை என்பது அந்தக் காலம். அவரவர் டேஸ்ட்டுக்கேற்ற ஆர்டர் என்பது இந்தக் காலம்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
கலைஞர் - அன்பழகன், வாஜ்பாய் -அத்வானி, மோடி -அமித்ஷா, இ.பி.எஸ். -ஓ.பி.எஸ். இரட்டையர்கள், அரசியலில் செய்த சாதனை என்னங்க?
வாஜ்பாயும் அத்வானியும் காங்கிரசின் சோஷலிச -மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக மதவாத -தனியார்மய அரசியலை முன்னெடுத்த ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் முகமான ஜனசங்கத்தின் அங்கத்தினர்கள். அது பின்னர் பா.ஜ.க.வாக உருவெடுத்தபோது வாஜ்பாய் அதன் சாதுவான முகமாகவும், அத்வானி அதன் அதிரடி முகமாகவும் வெளிப்பட்டவர்கள். வாஜ்பாய் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு அத்வானியை ஓரங்கட்டிவிட்டு அவருடைய அதிரடி முகம் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிற அளவுக்கு வெளிப்படையான மதவாத அரசியலின் நாயகர்களாக மாறி இந்தியாவைத் தங்களின் ஆளுகைக்குள் கொண்டு வந்தவர்கள் மோடியும் அமித்ஷாவும். குஜராத் மாடல் என்ற பெயரில் இந்தியாவை குஜராத் முதலாளிகளுக்குத் தாரை வார்த்து, அரசியல் வியாபாரத்தை அமோகமாக நடத்திவருபவர்கள். இ.பி.எஸ். -ஓ.பி.எஸ். ஆரம்பத்திலிருந்தே சுருதிபேதமாக வாசித்துவந்த இரட்டை நாயனங்கள். மோடி -அமித்ஷா நெருக்கடியால் இரட்டையர்கள் போலக் காட்டிக்கொண்டாலும் தனித்தனி ஆவர்த்தனக்காரர்கள். கலைஞரும் -பேராசிரியர் அன்பழகனும் ஒரு நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டு காலம் இணைந்து பயணித்தவர்கள். தங்கள் சொந்த விருப்பு -வெறுப்புகளைக் கடந்து கட்சியே முக்கியம் எனச் செயல்பட்டவர்கள். அரசியலில் அரிதாக இருக்கும் நட்பில் அதிசயமான நட்பு கலைஞர் -பேராசிரியர் நட்பு.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
"தமிழ்நாடு நாள்' அப்படி ஒன்றும் சிறப்பாக கொண்டாடப்படவில்லையே?
"தமிழ்நாடு' என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய விழாவையே எளிமையாகத்தான் நடத்தினார் அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா. அப்போது அவர் உடல்நலன் குன்றி யிருந்த நிலையில், வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொல்லியும், இந்த விழாவுக்கு செல்ல முடியாமல் இருந்தால், அந்த உயிர் இருந்துதான் என்ன பயன் என்று சொல்லிவிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் (அப்போது பாலர் அரங்கம் என்று பெயர்) 1968-ல் நடந்த விழாவில் அண்ணா பங்கேற்றார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டும் தீர்மானம் நிறைவேறிய நாளான ஜூலை 18-ஆம் தேதியன்று, தற்போது அதே கலைவாணர் அரங்கில் விழா நடத்தப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜான முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருவார காலம் கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுறுத்தலை மீறி, "இந்த விழாவில் பங்கேற்பது என் பெருமை'' என்று கூறி காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்.
மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"நாடு முழுவதும் போராட்டங்களை நிறுத்த வேண்டும் என்று கூட அவர்கள், எங்களிடம் கேட்கும் நாள் வரலாம்'' என்கிறாரே கபில்சிபல்?
கபில்சிபல் உள்ளிட்ட சீனியர்களுக்கும் காங்கிரஸ் மேலிடத்திற்கும் நிலவும் போராட் டங்கள் முடிவுக்கு வந்து, மோடி ஆட்சியின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் முனைப்பான போராட்டம் நடத்தினால், அவர் சொல்வது போன்ற நிலைமை நிச்சயம் உருவாகும். அத்தைக்கு எப்போது மீசை முளைத்து, சித்தப்பாவோ, பெரியப்பாவோ ஆவார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
எம். நிர்மலா, வாணரப்பேட்டை -புதுச்சேரி
அரசு விழாவில் இந்துமத முறைப்படி பூமி பூஜை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. எம்.பி. செந்தில்குமாரின் செயல் பற்றி?
அவர், இந்து முறைப்படி பூமி பூஜை நடத்தக்கூடாது என்று சொல்லவில்லை. திராவிட மாடல் அரசு என்கிறபோது இத்தகைய பூமி பூஜையை நடத்தினால் இந்துமத புரோகிதர்களைப் போல முஸ்லிம் இமாம், கிறிஸ்தவ பாதிரியார் உள்ளிட்ட மற்ற மதத்தினரையும் கொண்டு பூஜை செய்து, அரசு கட்டடப் பணிகளைத் தொடங்குங் கள் என்பதைத்தான் வலியுறுத்தியிருக்கிறார்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
"2002 குஜராத் கலவரத்துக்கு சோனியா, அஹமதுபடேல்தான் காரணம்' என பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளதே?
ஒரு தரப்பைக் குற்றம்சாட்டி விரலை நீட்டும்போது, ஒருவரின் மற்ற விரல்கள் அவரை நோக்கியே இருக்கும் என்பது பொன்மொழி. இது பா.ஜ.க.வுக்கு கச்சிதமாகப் பொருந்தும்.
எம். பானுமதி, கெங்கராம்பாளையம் -விழுப்புரம்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
கணிக்கவும், கவனிக்கவும் தவறிய அரசு இயந்திரத்தின் அலட்சியம்.