பி.மணி, வெள்ளக்கோவில்
அரசியல்வாதிகளின் அநாகரிகமான பேச்சுகளை அரசியல் கட்சிகள் ரசிக்கின்றனவா?
அடுத்தவர்களைப் பேசும்போது ரசிப்பதும், தன்னை நோக்கி அதே பேச்சுகள் வெளிப்படும்போது கொந்தளிப்பதும் அரசியலில் சகஜமப்பா.
தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45
இப்போது உச்ச நீதிமன்றத்தில் வரும் தீர்ப்புகள் சிறப்பாக உள்ளதே?
சட்டத்தின் பார்வையில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும்போது அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து, சிறப்பானதாகவோ ஏமாற்றம் தரக்கூடியதாகவோ அமையும். பேரறிவாளன் விடுதலை விவகாரத்திலும், ஜி.எஸ்.டி. தொடர்பான வழக்கிலும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளும் உத்தரவுகளும் மாநில உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய வகையில் இருப்பதால் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டபோது, பாரம்பரிய பழக்கத்தை மீறிய தீர்ப்பு என விமர்சனங்கள் வந்ததுடன், அந்தத் தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கான நிலைமைகள் இன்றும் நீடிக்கின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த விமர்சனத்தை சட்ட அறிஞர்களே முன்வைத்தனர். ஆழ்ற்ண்ஸ்ரீப்ங் 15 எனப்படும் இந்திய அரசியல் சட்டத்தின் 15-ஆவது பிரிவை அடிப்படையாகக் கொண்டதுதான் உதயநிதி நடித்து வெளிவந்துள்ள "நெஞ்சுக்கு நீதி' திரைப்படம். அந்தப் பிரிவின்படி, எந்த ஒரு குடிமகனையும் மதம், சாதி, பிறந்த இடம், பாலினம் உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் அரசாங்கம் பாகுபாடு செய்யக்கூடாது என்பதாகும். இதே பிரிவைக் காட்டித்தான், நீதிக்கட்சி ஆட்சியில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட கம்யூனல் ஜி.ஓ எனும் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்து, சுதந்திர இந்தியாவில் உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். இதே சட்டப்பிரிவின் அடிப்படையில்தான் அந்த இடஒதுக்கீட்டுச் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் நடத்திய போராட்டங்கள், காங்கிரஸ் தலைவரான பெருந்தலைவர் காமராஜர் காட்டிய அக்கறை, அன் றைய பிரதமர் நேருவின் முயற்சியால் மேற் கொள்ளப்பட்ட அரசியல் சட்டத் திருத்தம் இவற் றின் காரணமாகத் தான் இன்று இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு நிலைநிறுத்தப்பட்டு, அனைத்து மக்களுக்கும் பாகுபாடற்ற கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் அடிப்படை உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. சட்டமும் நீதியும் மக்களுக்கானவை. நீதிதேவன் மயக்கம் தெளிந்து செயல்பட்டால் தீர்ப்புகள் சிறப்பாக இருக்கும்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
சமீபத்தில் மாவலியாரை நெகிழவைத்த சம்பவம்..?
ஈரோட்டில் உள்ள கடைக்கு ஒரு பிச்சைக்காரர் வருகிறார். கடைக்காரரோ, வேலை தருகிறேன். செய்வாயா என்று கேட்கிறார். எவ்வளவு சம்பளம் தருவீர்கள் என்று பிச்சைக்காரர் கேட்கிறார். ஒரு நாளைக்கு 400 ரூபாய் என்கிறார் கடைக்காரர். பிச்சைக்காரர் சம்மதிப்பார் என்று நினைத்தால், வெறும் 400 ரூபாயா, நான் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டுகிறார். உழைப்பும் பிழைப்பும் நாட்டில் எப்படி இருக்கிறது என்பதற்கு சாட்சியமான இந்த நிகழ்வு பற்றிய வீடியோவைப் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"பத்திரிகை சுதந்திரம் தி.மு.க. ஸ்டாலின் ஆட்சியில் நசுக்கப்படுகிறது'' என்று அ.தி.மு.க. பழனிசாமி கூறுகிறாரே?
எந்த ஆட்சியிலும் பத்திரிகை சுதந்திரம் 100% இருந்ததில்லை. ஆனால், அ.தி.மு.க. .ஆட்சியில்தான் அது 1000 மடங்கு நசுக்கப்பட்டது என்பது எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியும். பத்திரிகைகள் மீது வழக்கு போடுவதற்காகவே ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்திருந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா. எடப்பாடி ஆட்சியில், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய பா.ஜ.க. ஆதரவு காமெடியன் வீட்டுக்கு தேடிப் போய் பால் பாக்கெட் போடும் வேலையை அரசாங்கம் செய்தது. ஆளுநர் மாளிகை புகாரின் பேரில் அவசரஅவசரமாக நக்கீரன் அலுவலகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்குப் போட்டு, ஆசிரியரை விமான நிலையத்தில் மடக்கி கைது செய்தது. இப்போது எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர். அதனால், பத்திரிகை சுதந்திரம் பற்றி நிறைய பேசுவார்.
வாசுதேவன், பெங்களூரு
வருங்காலத்தில் உலக சாம்பியனாக வாய்ப்புள்ள செஸ் ஆட்டத்தில் அசத்தும் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவின் முன்னேற்றம்?
விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி வைத்த காய் நகர்த்தல். அதன்பின் பலரும் ஆர்வமாக சதுரங்கம் ஆடினார்கள். அதில் பிரக்ஞானந்தாவின் முன்னேற்றம் அபாரம். இணைய வழியில் உலக சாம்பியன்களை மிரள வைக்கும் நொடிப்பொழுது நுணுக்கம் மேலும் மெருகேறி உச்சங்களைத் தொடட்டும்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
தமிழகத்தில் ரயில்வேயில் பணி புரியும் வட மாநிலத்தவர்கள் தமிழில் பேச வேண்டும் என ரயில்வே அமைச்சர் கூறி இருக்கிறாரே?
தமிழகத்தில் ரயில்வேயில் வட மாநிலத்தவர்கள் ஏன் முக்கியத்துவம் பெற வேண்டும்? அவர்கள் தங்களுக்குத் தெரியாத தமிழைக் கற்றுக்கொண்டு பேச ஏன் கஷ்டப்பட வேண்டும். கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்குப் பதில், தமிழக ரயில்வே சார்ந்த பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை தருவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.