அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
எனக்கு முதல்வராகும் தகுதியோ ஆசையோ இல்லை. முதல்வரை உருவாக்கவே வந்திருக்கிறேன் என்று அண்ணாமலை கூறுகிறாரே, அப்படியானால் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் முதல்வர் யார்?
அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும். அதற்கப்புறம், சித்தப்பாவா பெரியப்பாவா என்று முடிவு செய்யலாம்.
த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்
இலங்கைக்கு இந்தியா உணவுப் பொருட்களை அனுப்பியதை மாவலி எப்படிப் பார்க்கிறார்?
1983 ஜூலையில் இலங்கையில் இனக்கலவரம் தூண்டிவிடப்பட்டு, தமிழர்கள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தியது ஜெயவர்த்தனா தலைமை யிலான சிங்கள அரசு. சிங்கள ராணுவச் சித்திரவதையால் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் வேட்டையாடப்பட்டனர். ஈழத்தமிழர்கள் பலர் தங்கள் தாய்மண்ணை இழந்து, தாய்த் தமிழகத்திற்கு படகில் வந்து கரை சேர்ந்தனர். அதன்பிறகு, அங்கே விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்களின் தமிழீழக் கோரிக்கை வலுப்பெற்று, ராணுவத்துடன் போரிடத் தொடங்கினர். இலங்கை அரசு, தமிழர் பகுதிகளை முற்றிலுமாகப் புறக்கணித்தது. உணவுப் பொருள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட வழங்கவில்லை. இதே நிலை ஆண்டுக்கணக்கில் நீடித்தது. இந்திராகாந்தியின் படுகொலைக்குப் பிறகு, இந்தியாவின் பிரதமரான ராஜீவ்காந்தி, இலங்கை வான்வழியில் இந்தியப் படை விமானங்களை பறக்க வைத்து, தமிழீழப் பகுதிகளில் உணவுப் பொருட்களைப் போடச் செய்தார். இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை, இறையாண்மைக்கு எதிரான செயல்பாடாக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா கதறினார். ஏறத்தாழ 35 ஆண்டுகள் கழித்து, இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியின் பொருளாதாரச் சீரழிவுகளால் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்களர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர். உணவுக்கும் அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லாடுகின்றனர். இப்போது, தனது இறையாண்மை பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்தியாவிடம் கெஞ்சுகிறது இலங்கை அரசு. ராஜீவ் காலத்தில் அனுமதி யின்றி வான்வழியே பறந்த இந்திய விமானங்கள், மோடி காலத்தில் இலங்கையின் அழைப்பின் பேரில் பறந்து உதவு கின்றன. ஆட்சி யாளர்களின் அடாவடியையும் ஊதாரித் தனத் தையும் இப்போது தான் உணர்ந் திருக்கிறார்கள் இலங்கையின் சிங்கள மக்கள்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைபுதூர், தேனி
சமீபத்தில் யாரிடமாவது அர்ச்சனை வாங்கினீர்களா?
சும்மா வாங்கவில்லை. அர்ச்சனையைக் கேட்டு வாங்கியிருக்கிறேன். அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை என தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்திய பிறகு, அர்ச்சகர் பூசை செய்யும்போது, தமிழில் அர்ச்சனை செய்யுங்க என்று கேட்டு வாங்கியிருக்கிறேன்.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-8
என்கூட வந்து மோது! நீயா -நானா என்று ஒரு கை பார்க்கலாம் என்று தைரியமாக ஒருவர் சவால் விடுகிறார் என்றால் அது டாஸ்மாக் சென்று வந்தவரின் குரலாகத்தானே இருக்க முடியும்?
அப்படி ஏன் நினைக்கிறீர்கள்? அரசியல் மேடையிலிருந்து ஒலிக்கின்ற குரலாகவும் இருக்கலாம். தெருமுனையில் போடப்பட்டுள்ள மேடையில் நின்று முதல்வருக்கு, பிரதமருக்கு, அமெரிக்க ஜனாதி பதிக்கு சவால்விடும் திறமை பெற்றவர்கள் அரசியல் பேச்சாளர்கள். அண்மைக்காலமாக அவற்றைத் தொலைக்காட்சி ஊடக விவாதங்களிலும் காண முடிகிறது.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
நடிகை ரோஜா அமைச்சராவார் என்று எதிர்பார்த்தீர்களா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ. ஆகும்போது, அவர் சார்ந்த கட்சி ஆளுங்கட்சியாக இருந்தால் ரோஜா, மல்லிகை, முல்லை என யார் வேண்டுமானாலும் அமைச்சராக முடியும். அதற்கு ஆட்சித் தலைமை வாய்ப்பளிக்க வேண்டும். தமிழ்த் திரை ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ரோஜா. ஆந்திரா அரசியலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என ரோஜாவுக்கு செல்வாக்கு உண்டு. தமிழ்நாடு -ஆந்திரா எல்லையை ஒட்டிய நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2019ல் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரான போதே ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. உடனடியாக அது நிறைவேறாவிட்டாலும், தற் போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக்கப்பட்டிருக் கிறார் ரோஜா. பொதுவாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகைகளுக்கு ஜெய லலிதா ஒரு ரோல் மாடல். ரோஜாவும் ஜெயலலிதாவை ஆராதித்திருக் கிறார். அதே நேரத்தில், தி.மு.க தலைவரும் தற் போதைய முதல்வரு மான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா மேடையில் ஏறி, ஆட்சி யின் சிறப்புகளைப் பாராட்டியிருக்கிறார். அரசியல் நுணுக்கங் களை நன்கு கற்றுத் தெளிந்திருக்கும் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது ஆச்சரியமல்ல. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னணியில் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள். நடிகை ரோஜாவின் அரசியல் வெற்றிக்குப் பின்னணியில், திராவிட அரசியலில் ஈடுபாடு கொண்ட அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி என்ற ஆண் இருக்கிறார். அதை ரோஜாவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஆளுநர் பதவி என்பது அலங்கார பதவியா, அகங்கார பதவியா?
அகங்காரம் கொண்டவர்களை உட்கார வைப்பதற்கான அலங்காரப் பதவி.