பிரியன் மார்க்ஸ், தரமணி -சென்னை

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்த நடிகை விந்தியா இப்பொழுது என்ன செய்துகொண்டிருப்பார்?

போடுகிற வேடத்திற்கேற்ப கர்ஜிப்பது, கனைப்பது, குரைப்பது என்பதுதானே நடிப்புத் திறமை.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

Advertisment

முதல்வர் திறந்துவைக்க வேண்டிய சமத்துவபுரத்தை அங்கிருந்த சாதாரண பெண்ணை ரிப்பன் வெட்டி திறந்துவைக்கச் செய்த மு.க. ஸ்டாலின் குறித்து?

2011-16ல் குன்னம் சட்டமன்ற உறுப்பினராக இருந் தவர் இன்றைய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். அவரிடம் செம்பருத்தி என்ற மாணவி, தங்கள் ஊருக்கு ஒரு நூலகம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நூலகம் கட்டிக் கொடுத்த சிவசங்கர், அந்த நூலகத்தை மாணவி செம்பருத்தியின் கைகளாலேயே திறந்து வைக்கச் செய்தார். அதுமட்டுமல்ல, நூலகத் திறப்புவிழா கல்வெட்டிலும் மாணவியின் பெயர் பொறிக்கப்பட்டது. சமத்துவபுரம் என்பது இந்தியாவுக்கே முன்னோடியான திட்டம். கலைஞர் ஆட்சியில் உருவான பல சமத்துவபுரங்களைத் திறந்து வைத்தவர் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின். 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் சமத்துவபுரங்கள் கிடப்பில் போடப்பட்டன. மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் முழுமையடையாமல் இருந்த சமத்துவபுரத்தை நிறைவு செய்து, அதன் திறப்புவிழாவுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பயனாளிகளையே ரிப்பன் வெட்டி சமத்துவபுரத்தைத் திறந்து வைக்கச் செய்திருக்கிறார். சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள், இல்லத்தரசிகளின் பெயரில்தான் வழங்கப்படுகின்றன. அதனால், பெண்களே ரிப்பன் வெட்டித் திறக்கச் செய்துள்ளார் முதல்வர். 1971-76 கலைஞர் ஆட்சியில் குளித்தலைக்கும் முசிறிக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே மிக நீண்ட பாலம் கட்டப்பட்டது. பணி முடிவடைவதற்குள் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு, முதல்வரான எம்.ஜி.ஆர். அந்தப் பாலத் திறப்பு விழாவுக்கு வந்தார். கலைஞர் ஆட்சியில் கட்டப் பட்ட பாலம் என்பதால், தன் கையால் திறக் காமல், கட்டடப் பணியைச் செய்த தொழி லாளர் ஒருவரின் கைகளால் திறக்கச் செய்தார்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

Advertisment

"மாயமானைப் பார்த்து சீதை ஏமாந்தது போல... மக்கள் தி.மு.க.வின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விட்டார்கள்...'' என்று முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத் கூறியது சரியான ஒப்பீடா?

ஷேக்தாவூதிடம் ஏமாந்தவர்கள் அளித்துள்ள புகார்கள் ஏராளம். ஆனால், அவர் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொண்டார். அந்த விசுவாசத்தை இப்போது வெளிப்படுத்துகிறார். வாக்குறுதிகள் சீதை ஏமாந்த மாயமானா, மணிமேகலை கை அமுதசுரபியா என்பதை முதல்வர்தான் நிரூபிக்க வேண்டும்.

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

7.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்கிறாரே ஓ.பி.எஸ்.?

bb

அ.தி.மு.க. ஆட்சியில்தான், நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் முன்னுரிமை அளிக்கும் 7.5% இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. நீட் எதிர்ப்புத் தீர்மானங்களை மோடி அரசு குப்பைக் கூடைக்கு அனுப்பியதால், அதை சமாளிக்க இந்த ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. சமூகநீதிக்கான டாக்டர்கள் பலர் இதனைப் பல காலமாக வலியுறுத்தி வந்தனர். கவர்னரிடம் இந்த ஃபைல் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், தி.மு.க. சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டு, அதன் பிறகே ஒப்புதல் கிடைத்தது. மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மருத் துவம் மட்டுமின்றி பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட மேலும் 5 துறைகளுக்கு இந்த முன்னுரிமை இடஒதுக்கீடு விரிவாக்கம் செய்யப் பட்டது. 7.5% ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடரப் பட்ட பொதுநல மனுக்கள் மீதான விசாரணை யின்போது உயர்நீதிமன்றத்தில் ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர், இந்த இடஒதுக்கீடு ஒரே நாடு -ஒரே தகுதி என்கிற கொள்கைக்கு எதிரானது என்றும், மருத்துவப் படிப்புக்கான தகுதியை நீர்த்துப்போகச் செய்துவிடும் என்றும், மாநில அரசுக்கு இத்தகைய சட்டத்தை நிறைவேற்ற உரிமையில்லை என்றும் வாதாடினார். தமிழ்நாடு அரசு சார்பில் சரியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு, நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. இதில் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு அரசுகளுக்கும் பங்கு உண்டு. எதிர்த்த மோடி அரசைப் பற்றி பன்னீர் மணக்க நாலு வார்த்தைகளை ஓ.பி.எஸ். சொன்னால் நன்றாக இருக்கும்.

ஜோதிடான் சஞ்சுகிருஷ்ணா, ராயப்பேட்டை.

பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி வழிபடும் தாய்மார்களுக்கும், பாம்புக்கறியை ஆர்டர் செய்து ரசித்து ருசித்து சாப்பிடும் தாய்மார்களுக் கும் என்ன வித்தியாசம்?

பயம், வழிபடச் செய்கிறது. பசி, உணவாக்கிவிடுகிறது.