பா.ஜெயப்பிரகாஷ்,அரண்மனைப்புதூர் -தேனி

'பாராளுமன்றத்தில் துணை சபாநாயகர் இல்லாம லேயே 3 வருடத்தை ஓட்டி விட்டாரே பிரதமர் மோடி?

பொதுவாக, துணை சபாநாயகர் பதவி என்பதை தோழமைக் கட்சிக்கு வழங்குவது வழக் கம். 1980 காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க.வின் லட்சுமணன் எம்.பி. துணை சபாநாயகராக இருந்தார். 1984 காங்கிரஸ் ஆட்சியில் அ.தி. மு.க.வின் தம்பிதுரை எம்.பி., துணை சபா நாயகராக இருந்தார். இதுபோல, தோழமைக் கட்சிகளுக்கு வாய்ப்பளிப்பது வழக்கம். சில நேரங்களில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் துணை சபாநாயகர்களாக, தற்காலிக சபா நாயகர்களாக இருந்து அவையை நடத்தியிருக் கிறார்கள். 1990க்குப் பிறகு மோடி தலைமையி லான பா.ஜ.கதான் இரண்டு முறையும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியோ இரண்டு முறையும் முதன்மை எதிர்க்கட்சிக்குத் தேவையான அளவில் எம்.பி.க்களைப் பெறவில்லை. அதனால், மோடி அரசு தோழமையையும் மதிக்காமல், எதிர்க் கட்சிக்கும் மதிப்பளிக்காமல் தன்னிச்சையாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

Advertisment

mm

சி. கார்த்திகேயன், சாத்தூர்

ஏ.ஆர்.ரஹ்மானின் "மூப்பில்லாத் தமிழே தாயே?'

ஆஸ்கார் வரை தமிழின் புகழை உயர்த்தியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். திரைப்பாடல் களைக் கடந்து தனிப்பாடல்களான ஆல்பங்கள் கவனத்தை ஈர்க்கின்ற காலம் இது. "என்ஜாயி... எஞ்சாமி' என்ற பாடல் ரஹ்மான் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இளைய தலைமுறையைத் தனிப்பாடல்கள் ஈர்க்கும் காலத்தில் தமிழ்ப் பாடலான ‘"மூப்பில்லாத் தமிழே'’ என்று கவிஞர் தாமரை வரிகளில், தனது இசையிலான ஆல்பத்தை "துபாய் எக்ஸ்போ'வில் வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 2010 செம்மொழி மாநாட்டின்போது, கலைஞர் எழுதிய ‘"செம்மொழியான தமிழ்மொழியாம்'’ பாடலும் ரஹ்மான் இசையில் வெளியாகி, அன்றைய தலை முறையினரிடம் தமிழுணர்வை ஏற்படுத்தியது. இப்போதைய முயற்சி எந்தளவு இளைய தலைமுறையை ஈர்க்கிறது என்பதைப் போகப் போக பார்க்கவேண்டும். திருக்குறள் காலம் முதல் டிஜிட்டல் காலம் வரை மூப்பில்லாத் தன்மையுடன் சீரிளமைத் திறத்துடன் திகழ்கிறது தமிழ் மொழி.

பி.மணி, திருப்பூர் மாவட்டம்

"நாட்டின் ஜனநாயகம் சிறப்பாக இருக்க ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் வலுவாக இருக்கவேண்டும். அந்த வழியில் காங்கிரஸ் வளர்ச்சியடையும்' என்கிறாரே பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி?

கட்கரியின் அரசியல் கணக்கு என்ன என்பதை நக்கீரன் பல கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறது. நாக்பூரை தலைமையகமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.ஸின் செல்லப்பிள்ளைகளில் நிதின் கட்கரியும் ஒருவர். மோடிக்கு மாற்று கட்கரி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தில் இரண்டாவது முறையாக முதல்வராகியுள்ள யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு கட்கரிக்குப் புதிய சவாலை உருவாக்கியுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பலமாக இல்லை. உத்தரபிரதேசத்தில் உள்ள மாநிலக் கட்சிகளும் ஒற்றுமையாக இல்லை. தனிக்காட்டு ராஜாவாக பா.ஜ.க. மட்டுமே இருந்தால் அது மோடிக்கும் யோகிக்கும்தான் ராஜயோகத்தைத் தரும். காங்கிரஸ் வலுவடைந்தால் மீண்டும் பல மாநிலங்களில் போட்டி ஏற்படும். அப்போது, பா.ஜ.க.விலும் புதிய தலைமைக்கான தேவை ஏற்படும். இவையெல்லாம் கட்கரியின் கணக்குதான். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு நேர்மாறாக, காங்கிரஸ் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார் நிதின் கட்கரி.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பெண்களின் கணவர்கள் அரசியல் (அதிகாரம்) செய்வதற்கு ஸ்டாலின் தடைச் சட்டம் கொண்டு வருவாரா?

1996-ல் கலைஞர் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்பு களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொண்டு வந்தபோதும், அந்தந்த வார்டுகளில் உள்ள தி.மு.க.வின் ஆண் நிர்வாகிகள் தங்கள் குடும்பத்துப் பெண்களைத் தான் களமிறக்கி, வெற்றிபெற வைத்து, அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டார்கள். 2022ல் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மேயர் பதவி உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையிலும் அதே நிலைமை நீடிக்கிறது. பெண்களின் கல்வி உரிமை, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, சொத்துரிமை என முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தியது தி.மு.க ஆட்சி. ஆனால், பெண்களை அரசியல்மயப்படுத்துவதில் போதுமான அளவில் அக்கறை செலுத்தவில்லை தி.மு.க என்கிற கட்சி. அதே நிலைதான் அ.தி.மு.க போன்ற செல்வாக்கு மிக்க கட்சிகளிலும் இருக்கிறது. பெண் கவுன்சிலர்கள், சேர்மன்கள், மேயர்களின் அதிகாரத்தை அவரது கணவன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள ஆண்கள் கையில் எடுப்பதைத் தடுக்கும் வகையிலான உறுதியான நடவடிக்கை என்பது உடனடித் தேவை. தி.மு.க.வில் மகளிரணியை மேம்படுத்தி, விரிவாக்கி, அவர்களை அரசியல்மயப்படுத்தி, அதிகாரத்திற்கு கொண்டு வந்து தன்னிச்சையாக நிர்வாகம் செய்யும் வகையில் வளர்ப்பதே நிரந்தரத் தீர்வு. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் உள்ள சவாலான பணி இது.

வாசுதேவன், பெங்களூரு

உலக இட்லி தினத்தில் எவ்வளவு இட்லிகள் சாப்பிட்டீர்கள்?

உலகத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்களுக்கு ஒவ்வொரு நாளும் இட்லி தினம்தான். தின்ற இட்லியைக் கணக்கிட இது என்ன அப்போலோ இட்லியா?