மு.முஹம்மது ரபீக் ரஷாதி, விழுப்புரம்
"நூறாவது சுதந்திர தினத்தின்போது புதிய இந்தியா உருவாகிவிட வேண்டும்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளாரே?
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து பிரதமரும் அவரைச் சார்ந்தவர்களும் புதிய இந்தியா பிறப்பதாகச் சொல்லிவந்தனர். இப்போதுதான் அவர்களுக்கு இதுவரை எடுத்தது மசக்கை வாந்தி அல்ல, பித்த வாந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. 2047-ஆம் ஆண்டாவது நிஜமான புதிய இந்தியா பிறக்கட்டும்.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77
சுபாஷ் சந்திரபோஸ் மர்ம மரணம், ஜெயலலிதா மரண மர்மம் -உண்மை எப்போது வெளிவரும்?
நேதாஜியின் மரணம், வீர மரணம். ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, போர்க்களம் கண்டவர். பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு -வெளிநாட்டு வாழ் இந்தியர்களைத் தன் பக்கம் ஈர்த்த மாவீரர். அன்றைய உலகப் போர்ச் சூழலில் அவர் பிரிட்டிஷ் மற்றும் அதன் நேச நாடுகளுக்கு எதிரான ஜெர்மனி -இத்தாலி -ஜப்பான் நாடுகளைக் கொண்ட கூட்டணியை நம்ப வேண்டியிருந்தது. விமான விபத்தில் அவர் இறந்தார் என்பதுதான் பொதுப் பார்வை. அதைக் கடந்து, அவர் எவ்விதத்தில் கொல்லப்பட்டார்? உயிருடன் இருக்கிறாரா? என்ற சர்ச்சை நீண்டகாலம் நீடித்தது. தற்போதைய நிலையில், நேதாஜி உயிருடன் இருக்க சாத்தியமில்லை. அவர் மரணம் குறித்து டி.என்.ஏ. சோதனையை வலியுறுத்துகிறார்கள் அவரது குடும்ப வாரிசுகள்.
ஜெயலலிதாவுக்கோ குடும்பம் கிடையாது. அவர் போர்க்கள வீரரும் அல்ல. அதிகாரத்திற்காக எதையும் செய்யத் துணிந்த சராசரி இந்திய அரசியல்வாதி. தன் மீதான மற்றவர்களின் பயமே அவரது துணிவு. அதுவே அவரை இரும்புப் பெண்ணாகச் சித்தரித்தது. அத்தகைய இரும்பு ஒரு இரவில், அப்போலோ வுக்கு கொண்டு செல்லப்பட்டு, துரும்பாகி 75 நாட்கள் கழித்து, உயிரற்ற உடலாகக் கொண்டு வரப்பட்டது ஏன் என்பது பரம ரகசியம் அல்ல. அனைத்துவிதமான மருத்துவக் குறிப்புகள், சிகிச்சை முறைகள், சிகிச்சையளித்த டாக்டர்கள், உடனிருந்தவர்கள் என எல்லா வகையிலும் உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன. தூங்குவது போல நடிப்பவர் களைத் தட்ட வேண்டிய வகையில் தட்டி எழுப்பினால் உண்மை வெளிப்பட்டுவிடும்.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
உ.பி.யில் கட்சிகள் பல களத்தில் இருந்தாலும் பா.ஜ.க. வுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் தான் போட்டி என்பது பற்றி?
மேல்சாதியினரின் அதி காரக் கோட்டையாக இருந்தது உத்தரபிரதேசம். அதை முலாயம் சிங் யாதவ் தகர்த்தார். பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தினரின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. மாயாவதி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார். பட்டியல் இன மக்களின் அதிகாரம் செல்லுபடி யானது. எல்லாப் பக்கமும் ஊடுருவிய பா.ஜ.க., தன் பிராமண அடையாளத்திற்கு முகமூடி போட்டுக்கொண்டது. காவி உடுத்திய யோகி ஆதித்ய நாத்தை முதலமைச்சராக்கியது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக் கான சமூக நீதியை நிலைநாட்டுவது போல பாவனை செய்தது. ஆனால், அது உண்மையல்ல என்பதை அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியவர்களே அம்பலப்படுத்திய நிலையில்... அதிருப்தி வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றிக்கான வியூகத்தை அமைக்கப் பார்க்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
மஞ்சுவாசுதேவன், பெங்களூரு
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா?
சர்வதேச அரங்கில் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் புகழை நிலை நிறுத்திய வீராங்கனை. விளையாட்டுக்கேற்ற உடையை அவர் அணிந்த நிலையில், சொந்த மதத்தினரின் விமர்சனங்களைக் கடந்து, க்ராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாதனைகள் புரிந்தவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரைத் திருமணம் செய்ததால் மாற்று மத அரசியல் வெறியர்களால் தேசபக்தி சர்ச்சைக்குள்ளானவர். அதையும் கடந்து, இந்தியாவின் புகழை டென்னிஸ் அரங்கில் உயர்த்தி நம்பர் 1 ரேங்க் வரை உயர்ந்தவர். சளைக்காத ஆட்டக்காரர். ஓய்வு பெறும் முடிவுக்கு வந்திருந்தாலும், இந்திய டென்னிஸ் என்றால் சானியா மிர்ஸா பெயர் தனித்து ஒளிரும்.
கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு
தென்ஆப்ரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணியால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கு காரணம் என்ன?
கிரிக்கெட் தனித்தனி ஆட்டக்காரர்களின் கூட்டு முயற்சியால் உருவாகும் வெற்றி. சொந்த மண்ணில் சூரர்களாக அதை வெளிப்படுத்தும் இந்திய அணியினர் அடுத்த நாட்டில் விளையாடும்போது சொதப்பிவிடுகிறார்கள்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
ஜி.எஸ்.டி.யால் இந்திய பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா?
மாநிலங்களின் உரிமைகளும், வரி வருவாயும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
எந்த சாதனையை நம்பி தி.மு.க. ஓட்டு கேட்கும்?
தான் நிறைவேற்றிய வாக்குறுதிகளை ஆளுங்கட்சி சொல்வதும், நிறைவேற்றத் தவறியதை எதிர்க்கட்சிகள் சொல்வதும் தேர்தல் களத்தில் வழக்கம். அதைக் கடந்து, உள்ளாட்சித் தேர்தலை சந்திக் கும் நுணுக்கங்கள் ஆளுங்கட் சிக்குப் பழக்கம்.