தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45

2024-ல் நடக்கும் பாராளுமன்றத் தேர்தல் எதிரொலியாக ஐந்து மாநில தேர்தல் அமையுமா?

மாநிலங்களில் ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. அதனடிப்படையில் தேர்தல் முடிவுகள் அமையும். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போது ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அவசியம். அது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் முக்கியமானதாகவும் பெரிய மாநிலமாகவும் இருப்பது உத்தரப்பிரதேசம். அங்கே யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. ஒன்றியத்திலும் பா.ஜ.க. ஆட்சி என்பதால் "டபுள் ரயில் இன்ஜின் ஆட்சி' என்று பா.ஜ.க.வினர் பெருமையோடு சொல்கிறார்கள். மதவெறி, பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல், சிறுபான்மை யினருக்கான நிலைப்பாடுகள், மனித உரிமைக்கு எதிரான செயல்பாடுகள் என 5 ஆண்டு கால யோகி ஆட்சியில் பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும். அதனால் ஆட்சியாளர்கள் மீது எதிர்ப்புணர்வு இருக்கிறது. ஆனால் முக்கிய எதிர்க்கட்சிகளான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பிரியங்கா காந்தி வழிநடத்தும் காங்கிரஸ் கட்சி மூன்றுமே தனித்தனியாக மல்லுக்கட்டுகின்றன. தேர்தல் களத்தில் ஒற்றுமையாக இல்லை. இதுதான், பா.ஜ.க.வுக்கு மாநில அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் சாதகமாக அமைந்துவருகிறது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தன் செல்வாக்கை இழந்திருப்பதால், இந்திய அளவில், அதன் தலைமையில் ஒருங்கிணைய எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன. தன் நிலையை உணர்ந்து வியூகம் வகுக்க காங்கிரஸ் தயங்குகிறது. இந்த நிலை நீடிக்கும்வரை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தையும் பா.ஜ.க. நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

Advertisment

mavalianswers

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

ஞாயிறு ஊரடங்கு எதிர்பார்த்த பலனைத் தந்துள்ளதா?

ஞாயிறுதானே ஊரடங்கு! அன்றுதானே கடைகள் திறந்திருக்காது. போக்குவரத்து இருக்காது. டாஸ்மாக் மூடியிருக்கும். அதனால் சனிக்கிழமையே மீன் மார்க்கெட்டிலும், இறைச்சிக் கடைகளிலும் நாங்கள் கூடுவோம். காய்கறி மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்காரர்கள் போல ஒவ்வொரு வீட்டுக்கும் காய்கறி வாங்குவோம். மளிகை கடைகளில் கல்யாண விருந்துக்குத் தேவையான அளவுக்கு லிஸ்ட் கொடுப்போம். பொங்கல் வருகிறது என்பதால் துணிக்கடைகளில், நகைக் கடைகளில் அலைமோதுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகளில் ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று குவார்ட்டருக்குப் போட்டி போடுவோம். இத்தனைக் கூட்ட நெரிசலில் சிக்கி, கொரோனா வைரஸ் நசுங்கிவிடும். அதனால் ஞாயிறன்று ஊரடங்கு பலன் தரும் என்ற நிலைதான் ஒவ்வொரு ஊரடங்கின்போதும் நீடிக்கிறது. முதல் அலையின்போது, உலகம் தத்தளித்தது. என்ன செய்வதென்று தெரியாமல், மக்களைக் காக்க ஒரே வழியாக ஊரடங்கு போடப்பட்டது. மூன்றாவது அலை நேரத்தில், தடுப்பூசி உள்பட பல வழிகளை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் சௌமியா சாமிநாதன்கூட, ஊரடங்கு தேவையில்லை எனத் தெரிவித்திருக்கிறார். தடுப்பூசி, முகக்கவசம், தனி மனித இடைவெளி, சத்தான உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் செயல்பாடுகள் -இவைதான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்.

பி.மணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்

மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்க ஆட்சியாளருக்குத் தேவை திறமையா அல்லது நிதி நிலையா?

ஒன்றியத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு வேண்டியது திறமை. ஏனென்றால், மாநிலங்களிலிருந்து கிடைக்கின்ற நிதி வருவாய் மூலம், அவர்களுக்கு ஓரளவு நிதி வசதி இருக்கும். அதுபோக, மற்றவற்றை நட்பு நாடுகளும் உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் கடனாகக் கொடுக்கும். மாநிலத்தில் ஆட்சி செய்பவர்கள் நல்லாட்சி தருவதற்குத் தேவை, திறமை மட்டுமல்ல. நிதி நிலையும்தான். இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு மெல்ல மெல்ல குழி வெட்டும் ஒன்றிய ஆட்சியாளர்கள் உள்ள நிலையில்... அவர்களின் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதியும், மற்ற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு வழக்கமாகத் தர வேண்டிய நிதியில் கைவைப்பதுமாக பாரபட்சம் காட்டப்பட்டால், மாநிலங்கள் தள்ளாட வேண்டிய நிலைதான் தொடரும். அந்த வகையில், குறைந்த நிதி நிலையிலும் மக்களுக்கானத் திட்டங்களைத் தொடர்ந்து செயல் படுத்தும் மாநில முதல்வர்கள் அனைவருமே திறமையான ஆட்சியாளர் கள்தான்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

தமிழகத்தில் வானொலி நிலையங்கள் மூடப்படுவது குறித்து?

காட்சி ஊடகங்களின் வளர்ச்சி -சமூக வலைத்தளங்களில் பரவும் காணொலிகள் இவற்றால் வானொலி கேட்கும் பழக்கம் குறைந்துவிட்டதாகப் பொதுவான கருத்து உள்ளது. அதே நேரத்தில், எஃப்.எம். ரேடியோ எனப்படும் பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை உழைக்கும் தொழிலாளர்கள், பயணங் களை மேற்கொள்பவர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரும் விரும்பிக் கேட் கிறார்கள். தனியார் பண்பலை ஒலிபரப்பு கள் நிறைய உள்ளன. அது மட்டுமின்றி, ல்ர்க் எனப்படும் செயலிகளும் பாட்டு, கதை, கருத்துரைகளை ஒலி வடிவில் வழங்குகின்றன. இவற்றைக் கேட்பதும் பெருகிவருகிறது. ஆனால், பொதுச் சொத்துகளை தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் தாறுமாறு கொள்கையால் வானொலி நிலையங்கள் மூடப்பட்டு வருவது வேதனை.