தூயா, நெய்வேலி
ஜெயலலிதா இரும்புப் பெண்மணி என்பதற்கு ஒன்றிரண்டு உதாரணங்கள் சொல்லுங்களேன்?
சந்திரலேகா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முகத்தில் ஆசிட் அடிக்கச் செய்தது, தனது ஆடிட்டரையே செருப்பால் அடித்தது, டான்சி நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த வக்கீல் சண்முக சுந்தரத்தின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது, ஊழல் செய்து சொத்துகளைக் குவித்து சிறைக்கு சென்றது, இதையெல்லாம் சாதாரணப் பெண்மணிகள் யாராவது செய்திருக்கிறார்களா? இரும்புப் பெண்மணியால் மட்டும்தான் இதையெல்லாம் செய்ய முடியும்.
வாசுதேவன், பெங்களூரு
நர்சரி பள்ளிகள், நர்சரி செடிகள் ஒப்பிடுக
நெல் வயலில் நாற்றங்கால் இருக்கும். அங்கேதான் விதை நெல்லைத் தெளிப்பார்கள். அது நாற்றுகளாக வளரத் தொடங் கும். ஓரளவுக்கு வளர்ந்தபிறகு அந்த நாற்றுகளைப் பறித்து, வயலில் சீரான இடைவெளி விட்டு வளர்ப்பார்கள். நீர்ப் பாய்ச்சுவது, உரமிடுவது, களையெடுப்பது என ஒவ்வொன்றும் அது அதற்குரிய காலத்தில் நடக்கும். கதிரில் பால் வைத்து, அது நெல்மணியாகி, முற்றியபிறகு, அறுவடை செய்து, களத்துமேட்டுக்கு கொண்டு வந்து, அடித்து, தூற்றி, நெல் தனியாக, பதர் தனியாகப் பிரித்து, நெல்லை அளந்து மூட்டை கட்டி வீட்டுக்கு கொண்டு செல்வார்கள். அடுத்த ஆண்டுக்கான விதை நெல்லையும் எடுத்து வைப்பார்கள். இதைவிட சிறந்த நர்சரி கிடையாது. பருவத்தே பயிர் செய் என்பதற்கேற்ப, நர்சரி பள்ளிகளாக இருந்தாலும் நர்சரி கார்டன் செடிகளாக இருந்தாலும் வளர்க்கப்பட வேண்டும். வெறும் வணிகத்தை மட்டும் கவனத்தில் கொண்டால், விளைவது பயிரா, பதரா என்பது தெரியாது.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
நியூசிலாந்து கிரிக்கெட் வீரரும் டெஸ்ட் கிரிக்கெட் பத்து விக்கெட் பட்டியலில் இணைந்தது பற்றி?
ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் மொத்தமாக எடுப்பது என்பது அரிய சாதனை. கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 79 ஆண்டுகள் கடந்த நிலையில்தான் முதன்முதலாக அந்த சாதனை நடந்தது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேம்ஸ் லேகர் என்ற பவுலர் 1956-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த போட்டியில் முதன்முதலாக அந்த சாதனையை செய்தார். 51.2 ஓவர்கள் வீசி 10 விக்கெட்டுகளை எடுத்தார் லேகர். அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பின் 43 ஆண்டுகள் கழித்து, 1999-ல் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய பவுலர் அனில் கும்ப்ளே 26.3 ஓவர்கள் வீசி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 22 ஆண்டுகள் கழித்து, மும்பையில் நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் மும்பையில் பிறந்து, நியூசிலாந்தில் வளர்ந்து அந்த நாட்டு அணிக்காக விளையாடும் அஜாஸ் பட்டேல், இந்திய அணியினரின் 10 விக்கெட்டுகளை 47.5 ஓவர்களில் எடுத்தார். எனினும், மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியே அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் என்பது அவரவர் திறமையை முழுமையாக வெளிப்படுத்தவும், அணியின் ஒட்டுமொத்த திறமைக்கான வெற்றியை நிலைநாட்டவும் செய்கிறது.
நித்திலா, தேவதானப்பட்டி
அறிவாற்றலில் ராஜாஜி மிகச் சிறந்தவர் என்று போற்றப்படுகிறாரே?
அரசியல் களத்தை உணர்ந்து, சாதுர்யமான பல முடிவுகளை எடுத்து, தான் சார்ந்திருநத இயக்கத்திற்கான அதிகாரத்தையும் தனக்கான உயர் பதவியையும் பெற்றவர் ராஜாஜி. காந்தி உள்பட பலரும் அவரது திறமையை அறிவாற்றலைப் பாராட்டியுள்ளனர். ராஜாஜி இறந்தது டிசம்பர் 25ஆம் நாள். அதே டிசம்பரில் இறந்த மற்றொரு தலைவர் டாக்டர் அம்பேத்கர். அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்தில், சட்டத்துறையில், தொழிலாளர்களுக்கான உரிமையில், வங்கித் துறையில், அரசியல் சட்டத்தை வகுப்பதில், வரலாற்று ஆய்வில், மானுடவியல் ஆராய்ச்சியில் எனப் பல துறைகளிலும் பேராற்றலுடன் விளங்கியவர் டிசம்பர் 6ல் மரணமடைந்த அம்பேத்கர். ராஜாஜியின் மூளையை உலகம் போற்றுவ தாகச் சொல்வதும், அம்பேத்கரை சாதிச் சட்டத் திற்குள் அடைக்க முயற்சிப்ப தும், அம்பேத்கருடைய அறிவாற்றலின் தேவையை இப்போதும் உணர்த்துகின்றன.
மணி, வெள்ளக்கோவில்
இத்தனை பக்கங்கள் உதயநிதியின் பிறந்தநாள் விளம்பரங்கள் இடம்பெறுவது, நக்கீரன் பத்திரிகையின் செய்திகள் மீதான நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாதா?
நம்பகத்தன்மையான செய்திகளை வெளியிட்டதாலேயே நக்கீரனை கடும் பாதிப்புக்குள்ளாக்கியவர் ஜெயலலிதா. அவரது பிறந்தநாள் உள்பட அ.தி.மு.க சார்ந்த பல விளம்பரங்கள் நக்கீரனில் வெளியாகியுள்ளன. உதயநிதி பிறந்தநாள் விளம்பரங்கள் வெளியான அந்த இதழிலும் அதற்கு முன்பும் பின்பும் வெளியான இதழ்களிலும் தி.மு.க. ஆட்சி தொடர்பான விமர்சனங்கள் அடங்கிய கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. தொடர்ந்தும் வெளியாகும். அரசியல் புலனாய்வு பத்திரிகையில் அரசியல் பிரமுகர்கள் குறித்த விளம்பரங்கள் இடம்பெறுவது வழக்கமானது. விளம்பரங்களைக் கடந்து, நக்கீரன் எப்போதும் மக்களின் குரலாக இருக்கும். மக்களுக்குத் தொந்தரவு தரும் கட்சியினர்-ஆட்சியாளர்கள்- அதிகாரிகள் பற்றிய செய்திகளின் வாயிலாக அதன் நம்பகத்தன்மை எப்போதும் நிலைத்திருக்கும்.