வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை 110

என் தலைமையை ஏற்று இருந்தால் அ.தி.முக. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று சசிகலா பேசியிருக்கிறாரே?

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோதே, தன்னிடமிருந்து பறிபோன தலைமையை மீண்டும் பெறுவேன் என அரசியல் களத்தில் சசிகலா இறங்கியிருந்தால், ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் கட்சியைப் பிடித்திருக்கலாம். இப்படி புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

Advertisment

பணமதிப்பிழப்பு -ஜி.எஸ்.டி.வரி தாக்குதல் -மதவெறி கொலைகள் இவைகளைவிடவா இந்திராகாந்தியின் எமர்ஜென்சி கொடுமையானது?

mm

ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடுகளின் அளவு சிறிதாக இருந்தா லும் பெரிதாக இருந்தாலும் அது நாட்டு நலனைப் பாதிக்கக்கூடியதுதான். 1975 ஜூன் 25 நள்ளிரவில் அன்றைய குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமதை எழுப்பி கையெழுத்துப் போட வைத்ததிலிருந்தே எமர்ஜென்சி எந்தளவு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இரவோடு இரவாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்படுகின்றன. ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசார் வைத்ததே சட்டம் என்ற நிலைமை உருவாகிறது. காவல்துறை அராஜகங்களை அரங்கேற்றுகிறது. எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய தி.மு.க ஆட்சி கலைக்கப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தியையும் அவரது மகன் சஞ்சய் காந்தியையும் தோற்கடித்து தீர்ப்பளித்தார்கள் வாக்காளர்கள். தனது தவறான செயல்பாட்டுக்கு பின்னாளில் வருத்தம் தெரிவித்தார் இந்திராகாந்தி. ஆனால், அறிவிக்கப்பட்ட அந்த எமர்ஜென்சியுடன் ஒப்பிடும்போது அறிவிக்கப்படாத இந்த எமர்ஜென்சி காலம் மிகவும் கொடூரமானது. ஆனால், குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடியின் பா.ஜ.க. தொடர்ச்சியாகப் பெற்றுவரும் வெற்றிகள்... அதனை தலைகால் புரியாதபடி ஆடச் செய்கின்றன. உரிய தீர்ப்பை மக்கள் அளிக்கும் காலம் வரும்வரை அறிவிக்கப்படாத எமர்ஜென்சி தொடரும்.

சா.ஜெகதீசன், குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் விதி 53 (3) (அ)ன் படி 7 பேரை மாநில அரசே விடுதலை செய்யலாம் என்கிறார்கள் சட்டவல்லுநர்கள். மாநில அரசு ஏன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தயங்குகிறது?

மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் அவர்கள் உள்பட மற்ற நால்வரின் விடுதலை குறித்து, உரிய அரசு முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் ஜெயலலிதா அரசின் கையில் இருந்தது. அவர் ஆடிய சட்ட விளையாட்டு, அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலும் தொடர்கிறது. ஒன்றியத்தை ஆளுகின்ற கட்சிக்கும் -ஆட்சி செய்த கட்சிக்கும் 7 பேர் விடுதலையில் மாற்றுக் கருத்து உண்டு. தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளும் இந்த இரு தேசிய கட்சிகளில் ஒன்றுடன் நெருங்கியிருக்கின்றன. முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்ட வழக்கு என்பதால் சட்டத்தின் பார்வை பலவிதமாக உள்ளது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

வாசுதேவன், பெங்களூரு

தஞ்சையில் 200 ஆண்டு பழமையான தூக்குமேடை இருந்தது தெரியவந்துள்ளதே?

மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது, கொடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. அதற்காக வரிசையாக தூக்கு மேடைகள் அமைக்கப் பட்டிருந்தன. அந்த இடம் இப்போது குடியிருப்பாகிவிட் டது. தூக்கு மேடையின் மீத முள்ள சிதைவுகளை இடிக்காமல் காப்பாற்ற வேண்டும் என் கிறார்கள் தொல்லியல் ஆர்வலர் களும் பொதுமக்களும். உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான குரல் வலுவடைந்து வரும் நிலையில், இப்படியும் தண்டனை நிறைவேற்றப்பட்டன என இன்னும் 200 ஆண்டுகள் கழித்து வரும் தலைமுறைக்கு உணர்த்தும் வகையில் மராட்டிய மன்னர் காலத் தூக்கு மேடைகளை அருங்காட்சியக மாகப் பாதுகாக்கலாம்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

இந்த சட்டமன்றத் தேர் தல் முடிவுகள் தனக்கு திருப்தியில்லை எனத் தெரிவித்திருக்கிறாரே மு.க.ஸ்டாலின்?

அ.தி.மு.க ஆட்சிக்கு எதிர்ப்பு அலை இல்லை எனச் சொல்லப்பட்ட நேரத்தில், தனக்கான ஆதரவு அலையைப் பெருக்கி அதன்மூலம் தி.மு.க.வை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டுவந்தவர் மு.க.ஸ்டாலின். அவர் எதிர் பார்த்த அளவுக்கு கட்சி நிர்வாகி கள் ஒத்துழைத்து உழைத் திருந்தால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தளவு பலத்துடன் சட்டமன்றத்தில் இருந்திருக்காது.

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்

மேடைப் பேச்சில் வலம்புரிஜான், குமரி அனந்தன், தமிழருவி மணியன் எப்படி?

சொற்களால் சிலம்பம் ஆடி அசத்தியவர் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். பேசுகிறாரா பாடுகிறாரா என்று யோசிக்கக்கூடிய வகையில் இசைத் தமிழ்போல உரைத்தமிழை வழங்கியவர் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன். தெளிவான -அழுத்தமான உச்சரிப்புடன் சிந்தனையைக் கிளறும்படி பேசுபவர் தமிழருவி மணியன். பேச்சைக் கேட்டு கிறுகிறுத்தவர்கள் அரசியலுக்குத் துணை நிற்கவில்லை என்பதைத் தனிக்கட்சி நடத்திய இந்த மூன்றுபேருமே புரிந்துகொண்டவர்கள்.