பி.ஜெயப்பிரகாஷ் அரண்மனைப்புதூர், தேனி
""மோடியுடன் காலேஜில் படித்த ஒரே ஒருவரை பிடித்து வந்து மக்களுக்கு காட்டுங்கள். நான் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொள்கிறேன்'' என்று ராகுல்காந்தி கூறியுள்ளது பற்றி?
காங்கிரஸ் தலைவரின் பணி, தனது அரசியல் விலகல் அல்ல. மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு மாற்றாக மக்களின் செல்வாக்கைப் பெறுவது! புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காட்டிய அன்பும், ‘ராகுல் அண்ணா’ என்று அந்த மாணவிகள் பொழிந்த பாசமும் அனைத்து மக்களிடமும் தொடரவேண்டும். அதற்கு, மக்களின் குரலை மாற்றி மொழிபெயர்த்த நாராயணசாமிகளை, ராகுல் தன் பக்கத்தில் வைத்துக்கொண்டால் வேலைக்கு ஆகாது.
கே.ஆர்.உபேந்திரன், என்.கே.ரோடு, தஞ்சாவூர்.613 006.
இந்தியாவில் எரிசக்தி இறக்குமதி குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்' என்று மோடி கூறுகிறாரே?
காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் விற்றபோது, ஆட்சி மாறணும் என்றது பா.ஜ.க. இப்போது தங்கள் ஆட்சியில் 800 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் விற்கும்போது, எரிபொருளை மாற்றணும் என்கிறது. மாற்று எரிபொருளைப் பயன்படுத்துங்கள் என்கிறார் நிதின் கட்கரி. நடந்து போங்களேன் என்று ஆலோசனைகளை வழங்குகிறார்கள் பா.ஜ.க பிரமுகர்கள். 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள், நூறாண்டுகளானாலும் முந்தைய ஆட்சியாளர்களையும் பொதுமக்களையும் குற்றவாளியாக்குகிறார்கள், தங்களின் கையாலாகாத்தனத்திற்கு.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77
விஜயகாந்த்... ரஜினிகாந்த்...?
2006ல் விஜயகாந்த் எம்.எல்.ஏ.வான போது, “முதல் ரவுண்டில் ஜெயிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்’’என்றார் ரஜினி. அரசியலின் அடுத்தடுத்த ரவுண்டுகள் எப்படி இருக்கும் என்பதை ரஜினி அறிந்திருப்பார் போல. இன்றைய சூழலில், சிக்கிய விஜயகாந்த்தையும் தப்பிய ரஜினியையும் பார்க்கும்போது அதுதான் தோன்றுகிறது.
மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.
தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும் கட்சிகள் 100 சதவீதம் அதை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுகிறதா?
வாக்களிக்கும் மக்களும்கூட அந்தளவுக்கு அவர்களிடம் எதிர்பார்ப்பதில்லை. அடிப்படைத் தேவைகள்-மனிதத்தன்மையுடன் கூடிய உரிமைகள் இவற்றையாவது நிறைவேற்றுங்கள் என்பதே அவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. அந்த நம்பிக்கையைத் தலைவர்கள் எந்தளவுக்கு ஏற்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே, மக்களின் ஆதரவு கிடைக்கும். தலைவர்களின் எளிமையான அணுகுமுறையும் இதில் முக்கிய மானது. மு.க.ஸ்டாலின் தோளில் கைபோட்டு மாணவி எடுத்த செல்ஃபியும், கனிமொழியின் அரவணைப்பில் பட்டியலினப் பெண் பெற்ற ஆறுதலும் தற்போதைய எடுத்துக்காட்டுகள்.
வாசுதேவன், பெங்களூரு
அந்த காலத்திய கூடு விட்டு கூடு பாய்வது இந்த காலத்தில் சாத்தியமா?
மேற்குவங்க தேர்தல் களத்தில் பிஸியாக இருக்கும் அமித்ஷாவைக் கேளுங்கள். அவர் தான் திரிணாமூல் கூட்டில் உள்ள எம்.பி+ எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. கூட்டுக்குத் தாவ வைத்துக் கொண்டிருக்கிறார்.
_________
தேர்தல் களம்
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தேர்தலில் மக்களிடமிருந்து வாக்கை பெறுவதற்காக இலவசங்களை கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்த கட்சி எது... எப்போது நடைமுறைக்கு வந்தது?
இந்தியாவில் தேர்தல் என ஒன்று வந்தபோதே, வாக்குகளைப் பெறுவதற்கான இலவசம்- பரிசு ஆகியவையும் வந்துவிட்டன. நகராட்சித் தேர்தல்களில் சேர்மனைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கவுன்சிலர்களிடம் இருந்ததால், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தங்கம் இலவசமாகக் கொடுக்கும் அளவுக்கு சேர்மன் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952ஆம் ஆண்டில் தொடங்கி, அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு உப்புமா-காபி ஆகியவற்றை இலவசமாகக் கொடுத்து ஓட்டுப்போட அழைத்துவரும் பழக்கம் உருவானது. அதன்பிறகு, வாக்காளர்களை சைக்கிள் ரிக்ஷாவில் அழைத்துவருவதும் வழக்கமானது. 1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவைத் தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் 5 ரூபாய், 10 ரூபாய் பணம் கொடுத்து வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டனர். பின்னர், திராவிடக் கட்சிகள் வளர்ந்தபோது புடவை, வேட்டி என வாக்காளர்களுக்குத் தரப்பட்டது. பிரியாணி போடப்பட்டது. அது மெல்ல மெல்ல வளர்ந்து திருமங்கலம் ஃபார்முலா வரை பாப்புலரானது. ஓட்டு போடுவதற்காக பணம் வாங்குவதா என வாக்காளர்கள் யோசித்தபோது, ஆட்சி முழுவதும் இலவசம் தருகிறோம் என்கிற அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடத் தொடங்கின. பொதுவாக கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவை சார்ந்த இலவச அறிவிப்புகள் எல்லாக் கட்சிகளிடமிருந்தும் வெளிப்படும். எமர்ஜென்சிக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த இந்திராகாந்தி, அதன்பின் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் வியூகங்களில் ஒன்றாக, ‘தாலிக்குத் தங்கம் இலவசம்’என அறிவித்தார். வெற்றி பெற்றார். அதன்பிறகு, ஒவ்வொரு கட்சியும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டன. 2006ல் தி.மு.கவின் கலர் டி.வி, 2011ல் அ.தி.மு.க.வின் லேப்டாப், 2016ல் அதே அ.தி.மு.கவின் ஸ்கூட்டி போன்றவை இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த அறிவிப்புகள்.