செந்தில்குமார் எம்., சென்னை - 78.

எட்டு மாதங்கள் வீட்டில் இருந்து விட்டு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வெளியே வரும் கமல்ஹாசன் ஒரு சந்தர்ப்பவாதி என அமைச்சர் ஜெயக்குமார் தாக்குகிறாரே?

கொடநாட்டில் நான்கரை ஆண்டுகாலம் ஓய்வெடுத்து விட்டு, கடைசி ஆறு மாதம் தமிழ்நாட்டில் அரசியல் நடத்திய அம்மாவின் அமைச்சர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

mavalianswers

Advertisment

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

5 ஆண்டு கால ஆட்சியில் ஆண் இரண்டரை ஆண்டுகளும் பெண் இரண்டு ஆண்டுகளும் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்கிறாரே ஓபிஎஸ்?

Advertisment

சம வாய்ப்புகள் எல்லா வகையிலும் வழங்கப்படவேண்டும் என்பது சரிதான். அதற்கு முன் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்படவேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு பெண் முதல்வர்களும் அ.தி.மு.கவினர்தான். இரண்டு அணிகளிலும் ஓ.பி.எஸ் இருந்திருக்கிறார். இப்போது அவரது சொந்த அணி பலவீனமாக இருப்பதால், முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்.ஸை சீண்டிப் பார்க்கிறார் போலும்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

20 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு பா.ம.க சென்னையில் போராடி இருக்கிறதே..?

பா.ம.க. என்ற கட்சி தொடங் கப்பட்டதற்கு காரணமே, வன்னிய சமுதாயத்திற்கான 20% இடஒதுக்கீடு கோரிக்கையும் அதற்கான போராட்டமும்தான். அதுபோலவே, மற்ற சமுதாயத்தினரும் தங்கள் எண்ணிக்கைக்கேற்ப இடஒதுக்கீடு கோருவதால், சாதிரீதியான கணக்கெடுப்புக்கு பிறகு, பல சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே இது சாத்தியம்.

பி.மணி, வெள்ளக்கோவில்

ஒரு கட்சி ஆட்சி சிறந்ததா அல்லது பல கட்சிகள் இணைந்து ஆட்சி செய்வது சிறந்ததா?

ஜனநாயகத்தின் தன்மைகளை சிதைக்காமல், மக்கள் நலன் காக்கின்ற ஆட்சி ஒரு கட்சியாகவும் இருக்கலாம், பல கட்சியாகவும் இருக்கலாம்.

வாசுதேவன், பெங்களூரு

திரை துறையிலிருந்து அரசியலுக்கு வருவது போல அரசியல் துறையிலிருந்து நடிப்பதற்கு செல்லும் காலம் வந்தால் ?

முன்னாள் அமைச்சரும் திருச்சி எம்.பி.யாக உள்ளவருமான திருநாவுக்கரசர் ஏற்கனவே திரைத்துறை பக்கம் ஹீரோவாக "அக்னி பார்வை' பார்த்து திரும்பியவர்.

சு.வெங்கடேஷ், கோட்டயம்

வசதியாக இருந்தும் எளிமை- சம்பா தித்ததைக் கொடுத்து உதவுவதில் வள்ளல் என்றால் யார் நினைவுக்கு வருகிறார்?

கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை வளர்த்து, அறக்கட்டளை உருவாக்கி, வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பதுபோல, எந்தவித விளம்பரமும் புகழும் தேடாமல், மலிவு விலையில் உணவும் பல உதவிகளும் செய்து எவ்வித விளம்பரமும் புகழும் பலனும் தேடாமல் அண்மையில் இறந்த கோவை சுப்ரமணியன்.

எம்.எம்.மயில்வாகனன், சிவகங்கை

பாரதியார் பிறந்தநாளில் பாரதி பாடலை தமிழில் உச்சரித்த மோடி பற்றி?

அடுத்ததாக, பாரதிதாசன் பிறந்தநாளில், "வடக்கினில் தமிழர் வாழ்வை வதக்கி-பின்னர் தெற்கில் வந்து-இடக்கினை செய்ய நினைத்த எதிரியை- அடக்கடா என்று உரைத்த அறம் காக்கும் தமிழே' என்ற கவிதையை பாடுவார் என எதிர்பார்ப்போம்.

_____________

தேர்தல் களம்!

நித்திலா, தேவதானப்பட்டி

தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகையின் அளவு உயர்த்தப்பட்டுள்ளதே?

பெரும் பணக்காரர்கள்- நிலச்சுவான்தார்கள்- மிட்டா-மிராசுகள் இவர்களும் இவர்களின் ஆதரவு பெற்றவர்களும் அந்தக் கால பணமதிப்பிற்கேற்ப தாறுமாறாக செலவழித்து தேர்தலில் வென்ற காலம் ஒன்று இருந்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கோயங்கா வுக்காக ஹெலிகாப்டரில் இருந்து துண்டறிக்கைகளை வீசி பிரச்சாரம் செய்தனர். அவரை எதிர்த்து நின்றவர், தமிழறிஞர் திருக்குறள் முனுசாமி ஆவார். எளிய முறையில் அவரது தேர்தல் பணி இருந்தது. தேர்தல் முடிவில் திருக்குறளாரே வெற்றி பெற்றார். பணநாயகத்தை ஜனநாயகம் முறியடிக்கும் இத்தகைய அரிய நிகழ்வுகள் தேர்தல் களத்தில் அடிக்கடி நடந்தாலும் பெரும்பாலும் பணபலத்தை நம்பியே கட்சிகள் களம் காண்கின்றன. 1962ஆம் ஆண்டு தேர்தலில் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவைத் தோற்கடிக்க, காங்கிரஸ் சார்பில் ஓட்டுக்கு 5 ரூபாய் பணமும், வெங்கடாசலபதி சாமி படத்தின் மீது சத்தியமும் பெறப்பட்டது. அண்ணா தோற்றார். காங்கிரஸ் உருவாக்கிய இந்த காஞ்சிபுரம் ஃபார்முலாதான், தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் ஃபார்முலாவாக விரிவாக்கம் பெற்றது. அ.தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஓட்டுக்குப் புடவை போன்ற அன்பளிப்பு தருவது வழக்கம். பின்னர் சாத்தான்குளம் ஃபார்முலா, ஸ்ரீரங்கம் ஃபார்முலா, ஆர்.கே.நகர் ஃபார்முலா எனப் பல ஃபார்முலாக்களை அ.தி.மு.க. உருவாக்கியது. இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். ஜனநாயகத்தை விலைபேசும் இதனை மாற்றுவதற்காக தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்து, தேர்தல் செலவுக்கு வரம்பு விதித்தது. தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளருக்கான செலவு தொகை 77 லட்ச ரூபாய் எனவும், சட்டமன்றத் தேர்தல் செலவு 30 லட்சத்து 80ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதிலும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சிறிய மாநில சட்டமன்றத் தொகுதிக்கான செலவு அளவு குறையும். தற்போது செலவு வரம்பை கூடுதலாக்க ஆலோசனைகள் நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகைக்கும் வேட்பாளர்களின் செலவுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பது வாக்காளர்களுக்கே தெரியும். ஆனால், கணக்கு காட்டுவதில் அத்தனை கட்சியினரும் கில்லாடிகள்.