சி. கார்த்திகேயன், சாத்தூர்.

மோடியின் தற்போதைய கெட்டப்பினை சத்ரபதி சிவாஜி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்று மார்பிங் செய்கிறார்களே பி.ஜே.பி.யினர்?

வெளிநாடுகளை குஜராத்தாக மார்ஃபிங் செய்து, இந்தியாவின் ஆட்சியைப் பிடித்தவர் களிடம் சிவாஜி, தாகூர் எல்லாரும் சிக்கித் தவிக்கிறார்கள்.

mavali answers

Advertisment

பி.மணி, குப்பம் ஆந்திரா

ஜெயலலிதாவை தங்கள் தெய்வமாகவே போற்றும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள், தமிழக பொதுமக்களுக்கு அவர் எவ்வாறு மரணம் ஆனார் என்பதை விளக்குவார்களா?

ஜெ.வின் மரண மர்மத்தில்தான் இவர்களின் பதவி, வருமானம் எல்லாம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் ஜெ.வை தெய்வமாக்கிவிட்டனர்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

சாதி அடிப்படையிலான குடியிருப்பு மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்ற உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது குறித்து ?

தமிழ்நாட்டைப் போல சமூக சீர்திருத்தங்க ளை மேற்கொண்ட இந்திய மாநிலங்களில் மராட்டியத்திற்கு நெடிய வரலாறு உண்டு. சமூக நீதியை வலியுறுத்தி சமூக மாற்றத்திற்குப் போராடிய ஜோதி பாய்புலே, பெண் கல்விக்காக அரும்பாடுபட்ட அவரது வாழ்விணையர் சாவித்ரி பாய்புலே, தனது சமஸ்தானத்தில் இட ஒதுக்கீடு வழங்கிய அரசர் சாகு மகராஜ், வாழ்நாளெல் லாம் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவரும் -இந்திய அரசியல் சட்டத்தை வகுத்தவரு மான டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் மராட்டிய மாநிலத்தைச் சார்ந்தவர்களே. அதனால், மராட்டியத்தில் சாதிப் பெயரிலான தெருக்கள் -குடியிருப்புகள் பெயர் மாற்றம் என்பது ஆச்சரியமல்ல. ஆனால், இந்துத்வா கொள்கை யுடன் சாதிப் படிநிலையைக் கட்டிக்காப்பதில் முன்னின்ற சிவசேனா கட்சியின் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் மாற்றம் ஏற்பட்டு இதனை அறிவித்திருப்பதுதான் ஆச்சரியம்.

தா.விநாயகம் ராணிப்பேட்டை

புதிய மூன்று வேளாண் சட்டங்கள் என்னதான் சொல்கிறது?

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளை பொருள் வணிகம் ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் ஆகிய மூன்று சட்டங் களை தற்போது மத்திய அரசு நிறைவேற்றியிருக் கிறது.

ஆனால், இது விவசாயி கள் நலனுக்கானதல்ல, கார்ப்பரேட் நிறுவனங் களிடம் விளைநிலங்களை ஒப்படைப்பது என போராடு கிறார்கள் விவசாயிகள்.

செந்தில்குமார். எம், சென்னை - 78.

சூரப்பா விவகாரத்தில் கமல் அதிரடி காட்டுகிறாரே?

எல்லாரும் ரஜினி பற்றியே பேசிக்கொண்டிருந்தால், தன் பக்கம் கவனத்தை ஈர்க்க கமலும் பிலிம் காட்டவேண்டுமே!

எத்திராஜூலு, விருகம்பாக்கம்

ஓட்டுக்குப் பேரம், பணம் வாங்கும் அளவுக்கு மக்களே ஊழல்வாதிகளாக மாறி விட்டனர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனரே?

சட்டத்தின் ஓட்டை வழியே தப்பித்துக் கொள்ளும் ஊழல்வாதிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன மக்களின் விரக்தி மனநிலை இது. நீதியின் முன் நிறுத்தப்பட்ட ஊழல்வாதிகள் கடுமையாகத் தண்டிக்கப் படாமல் போனதற்கு யார் காரணம்?

_____________

தேர்தல் களம்

Advertisment

ம.ரம்யாராகவ், வெள்ளக்கோவில்

இந்தியாவின் தேர்தல் முறையை வேறு நாடுகள் பின்பற்றுகின்றனவா?

இங்கிலாந்து நாடாளுமன்றத்தைப் பின்பற்றி இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது என்றாலும், இந்தியாவின் தேர்தல் முறை என்பது தனித்துவமானது. அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து மாறுபட்டது. பக்கத்தில் உள்ள சின்ன நாடான இலங்கையின் தேர்தல் முறையும்கூட இந்தியாவிலிருந்து வேறுபட்டுள்ளது. அங்கே விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையிலான தேர்தல் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவைப் போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையைக் கொண்டு பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முறை என்பது அடிக்கடி ஜனநாயகப் படுகொலைக்குள்ளாகும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகள் முதல் ஜப்பான், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுத் தேர்தலிலும் வாக்குப்பதிவு, பிரதிநிதித்துவம், பிரதமர் தேர்வு முறை, பிரதமருக்கான அதிகாரம் என்பது மாறுபடும். எடுத்துக்காட்டாக, தாய்லாந்தில் பிரதமர் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் மன்னர் குடும்பத்திடமே அதிகாரம் மிகுந்திருக் கும். எனினும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைகள் பலவும் இங்கிலாந்தின் வழிவந்த இந்தியாவின் பாணியிலேயே இருக்கும். அதுமட்டுமின்றி, 100 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா மட்டுமே. அதில் பலவித மொழி பேசும் மக்கள், சீரான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், பல மதங் களையும், பல நூறு சாதிகளையும் கொண்ட சமுதாயம், பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட நாட்டில் முழுமையாகத் தேர்தல் நடத்துவதென்பது பெரும் சவாலானது. 1952-ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தல் முதல் 2019ல் நடந்த தேர்தல்வரை இந்தியாவின் தேர்தல் முறை என்பது உலக நாடுகளுக்கு ஆச்சரியமானது. ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் நிறுவன உறுப்பினராக இந்தியா உள்ளது. அதனால் இந்திய தேர்தல் முறையை நேரில் பார்க்க இங்கிலாந்து, ரஷ்யா, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டு பிரநிதிகள் வருவது வழக்கம். அதுமட்டுமின்றி கேமரூன், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு தேர்தலில் உதவுவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன.