எஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்
மாநில அளவிலான பண்பலை வானொலியில்கூட தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு இந்தி நிகழ்ச்சிகளை அதிகம் புகுத்துகிறார்களே?
"மன் கி பாத், ஸ்வட்ச் பாரத், ஜன்தன் யோஜனா' என தமிழ் எழுத்து வடிவிலேயே இந்திச் சொற்களைத் தொடர்ந்து திணித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. தமிழை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பிற மாநில மொழிகள் மீதும் இந்தி-சமஸ்கிருத படையெடுப்பு நடக்கிறது. அதற்கான வாகனங்களில் வானொலியும் ஒன்று.
பி.மணி, வெள்ளக்கோவில்
ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் தி.மு.க., ஆளுங்கட்சியின் அவலங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துவைத்துப் போராடுகிறதா?
உள்கட்சி அவலங்களை முடிவுக்கு கொண்டு வருவதில் மும்முரமாக இருக்கிறார் தி.மு.க செயல் தலைவர். அவர் வேகத்துக்கு கட்சி நிர்வாகிகள் ஈடு கொடுத்து ஒத்துழைத்தால், அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஆளுங்கட்சியின் அவலங்களை முனைப்பாக எடுத்து போராடக்கூடும். இல்லையென்றால், சொந்தப் பிரச்சினையிலேயே போராடிக்கொண்டிருக்க வேண்டும்.
திராதி, துடியலுர், கோவை-34
குழந்தை கடத்தல் என்னும் வாட்ஸ்ஆப் புரளி-வதந்திகளுக்கு 10 மாநிலங்களில் 31 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனரே?
உண்மையைவிட வேகமாக பரவக்கூடியவை வதந்திகள். அந்த வதந்திகளைச் சுமந்து செல்வதில் ஜெட் விமானத்தைவிட வேகமாக இருக்கின்றன வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள். விரலால் நோண்டிக்கொண்டிருப்பதே வாழ்க்கை என்றாகிவிட்ட சமூகத்தில் உண்மைக்கும் வதந்திக்குமான வேறுபாடுகள் தெரியாததால், குற்றவாளிகள் தப்பிவிட, அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள்.
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17
ஜெ.வுக்கு தெரிந்தோ தெரியாமலோ சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பணத்தையும் சொத்துகளையும் குவித்தும் திருப்தி அடையாமல் இன்னும் தமிழகத்தை ஆளவேண்டும் என அலைவது ஏன்?
குடும்பமே இல்லாத ஜெ. இவர்களை திரும்பத் திரும்ப சொத்து குவிக்க அனுமதித்து, தமிழகத்தை ஏறத்தாழ 15 ஆண்டுகாலம் ஆட்சி செய்தாரல்லவா? அந்த அதிகார ருசிதான், குடும்பம் குடும்பமாக சொத்து சேர்த்துள்ள சசிகலா வகையறாக்களையும் ஆட்டிப் படைக்கிறது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"சென்னையில் காவலர்கள் இனி தனியாக ரோந்து செல்ல வேண்டாம்' என்று காவல்துறை அறிவித்துள்ளதே?
ரவுடிகள் நவீனமயமாகிவிட்டார்கள். காவல்துறை பழைய தொழில்நுட்பத்தில் இருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டியது அரசாங்கம். அதே நேரத்தில், ரவுடிகளுடன் போலீசாருக்குள்ள ரகசிய நெருக்கமும், அதில் இரண்டு கோஷ்டிகளாகி ஒன்றையொன்று போட்டுக் கொடுப்பதும், போலீஸை பதம் பார்க்கிறது. என்கவுன்ட்டர் சம்பவங்களுக்கும் இதுதான் காரணம்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-32
ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசல் வரை சென்றுள்ளாரே திராவிட அரசியல் கட்சியின் செயல்தலைவரான மு.க.ஸ்டாலின்?
மற்றவர்களின் மன திருப்திக்காக கோவில் வாசல் வரைதானே அவரால் போக முடிந்தது, திராவிட இயக்கத் தலைவராக, கோவில் கருவறைக்குள் போகும் உரிமையை நிலை நாட்டும் காலம் எப்போது வரும்?
__________________
ஆன்மிக அரசியல்
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
ஒரு பாதிரியாரால் பாலியல் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டு 2 குழந்தைகளைப் பெற்ற ஒரு பெண், பாவமன்னிப்பு கேட்டுச் சென்றபோது, தொடர்ந்து பல பாதிரியார்களால் பாலியல் கொடூரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பது எதைக் காட்டுகிறது?
காவியோ வெள்ளையோ துறவிகள் என்னும் போர்வையில் உலவும் காம மிருகங்களின் இயல்பு ஒன்றாகத்தான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கேரளாவிலிருந்துதான் இந்த நிர்வாண உண்மைகள் அதிகளவில் வெளிப்படுகின்றன. பத்தனம்திட்டா மாவட்டத்தில், பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கப்போன ஒரு பெண் பாலியல் உறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது பற்றி அறிந்த மேலும் மூன்று பாதிரியார்கள் அதே பெண்ணிடம் மன்னிக்க முடியாத பாவச் செயலை செய்துள்ளனர். இதே தேவாலயத்தைச் சேர்ந்த பினுஜார்ஜ் என்னும் பாதிரியார் ஆலப்புழையில் பணியில் இருந்தபோது, குடும்ப பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கேட்க வந்த பெண்ணை, மாவேலிகரை என்ற இடத்தில் உள்ள தேவாலயத்திற்கு வரவைத்து பாலியல் கொடுமை நிகழ்த்தியுள்ளார்.
திருச்சூர் அருகே உள்ள முள்ளக்கல்லைச் சேர்ந்த பிராங்கோ ஜலந்தரில் பிஷப்பாக இருக்கிறார். இவர் மீது கோட்டயம் குரவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி பாலியல் புகார் கொடுத்துள்ளார். 2 வருடமாக தன்னை மிரட்டி, 13 முறை உறவு கொண்டதாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள பாதிரியார்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் பெருகி வருகின்றன. குடும்பப் பெண்கள், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்டோர் மீது வெள்ளை அங்கி பாதிரியார்களின் கைகள் வகைதொகையில்லாமல் நீண்டுள்ளன. தவறை மறைத்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக, இடமாறுதல் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் பொய்ப் புகார்களைக் கொடுப்பதாக தேவாலய நிர்வாகங்கள் சொல்கின்றன. நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். நெருப்பில்லாமல் மெழுகுவத்தி எரியாது என்பது பாவமன்னிப்பே கிடைக்காத பாவச் செயல் புரிந்துள்ள பாதிரியார்களுக்கு நன்றாகவே தெரியும்.