ம.ரம்யா மணி -குப்பம், ஆந்திரா
கலையுலகிற்கு ஆற்றிய பணியில் கமல், ரஜினி இருவரில் அதிக பங்களிப்பு யாருடையது?
கமலின் கலையுலகப் பணியை அவரது திரைப்படங் கள் சொல்லும். ரஜினியின் பங்களிப்பை அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் சொல்வார்கள். இருவரும் அரசியலையும் கலையாக நினைத்து பணியாற்றாமல் இருந்தால் அந்த பங்களிப்பே சிறந்த பங்களிப்பு.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77
பிரதமரை வரவேற்க போகாமல், தன் வீட்டுக்கு வரவைத்தவர் ஜெயலலிதா. தவிர "மோடியா?... லேடியா...?'’ என்று கர்ஜித்தார். இப்போது. அ.தி.மு.க.வின் நிலைமை?
அரசியலில் நாகரிகமும் மரபும் அவரவர் அணுகுமுறையைப் பொறுத்தது. பிரதமரை ஜெ வரவேற்கப் போகாவிட்டாலும் தன்னுடைய அமைச்சர்களை அனுப்பி வைத்தார். குனிந்தே பழக்கப்பட்ட அவர்கள் அப்போதும் அப்படித்தான் நடந்து கொண்டனர். மோடியா லேடியா என்ற ஜெயலலிதா, தன் அமைச்சரவையிலிருந்த ஆண் அமைச்சர்கள் ஒருவரையும் மதிக்கவில்லை. பதவிக்காக அவர்களும் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. சுயமரியாதை இயக்கத்தின் திசையை மாற்றி, அடிமைத்தனமே சுகம் என்ற அவ மரியாதைத்தனத்தை வளர்த்தெடுத்தவர் ஜெயலலிதாவேதான். அவர் வளர்த்தபடியேதான் இருக்கிறது இன்றைய அ.தி.மு.க.
பா.ஜெயப்பிரகாஷ் பொள்ளாச்சி
"தமிழகத்தில் "தமிழ்' அழிவது வேதனை தருகிறது' என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பற்றி?
உயர்நீதிமன்றத்தில் தமிழ் இன்னும் வழக்காடு மொழி ஆகவில்லையே என்ற வேதனையை வெளிப்படுத்தியிருப்பாரோ!
வாசுதேவன், பெங்களூரு
விரைவில் முடிய போகும் 2020-யின் சாதனை?
பக்தர்கள் இல்லாத கோவில், மாணவர்கள் இல்லாத கல்வி நிலையம், ரசிகர்கள் இல்லாத திரையரங்கம், ரயில்கள் இல்லாத தண்டவாளம், போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை, விமானங்கள் பறக்காத வானம், சுற்றுலாப் பயணிகள் இல்லாத கடற்கரை இவை எல்லாவற்றுக்கும் காரணமான கொரோனா எனும் அனுபவப் பாடமே 2020ஆம் ஆண்டின் மகத்தான சாதனை.
செந்தில்குமார் எம்., சென்னை - 78.
செல்போனால் தனிமை என்பதே இல்லாமல் போய்விட்டதே? எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் முதல் கேள்வியில் உள்ளதை கொஞ்ச நேரம் ஸ்விட்ச் ஆஃப் செய்தால், இரண்டாவது கேள்வியில் தேடுவது கிடைக்கும்.
தா.விநாயகம், ராணிப்பேட்டை
தே.மு.தி.க கூட்டணி வைக்கும் கட்சிதான் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜய்காந்த் கூறியுள்ளரே?
ஓர் ஆக்ஷன் ஹீரோ கட்சியின் அசத்தலான காமெடி.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி
மாவலியின் பக்கபலமாக இருப்பது எது..?
நக்கீரனில் பக்கம் ஒதுக்கும்வரை வாசகர்கள் பலமாக இருப்பார்கள்.
________
தேர்தல் களம்!
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
இரண்டு தொகுதியில் போட்டியிடும் கலாச்சாரம் எப்பொழுது யாரால் எங்கே உருவானது?
இந்திய தேர்தல் முறைக்கான மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உருவாக்கப்பட்டு, முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952ஆம் ஆண்டிலேயே செல்வாக்கு மிக்கவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் கலாச்சாரம் தொடங்கிவிட்டது. இதனை அடுத்தடுத்த தேர்தல்களில் பல கட்சிகளும் கடைப்பிடித்தன. அப்போதெல்லாம் இரண்டு தொகுதிகளுக்கு மேலும் ஒருவர் போட்டியிடலாம். 1957 தேர்தலில் ஜனசங்கத்தின் இளந்தலைவரான வாஜ்பாய், உத்தரபிரதேசத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டார். 1980 தேர்தலில் இந்திராகாந்தி ரேபரேலி, மேடக் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமராவ், சட்டமன்றத் தேர்த லில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றிலும் வெற்றி பெற்றார். எத்தனை தொகுதியில் வெற்றி பெற்றாலும் ஒரு தொகுதிக்குத்தான் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வாக இருக்க முடியும் என்பதால், என்.டி.ஆர் வென்ற மூன்று தொகுதிகளில் இரண்டில் மறு தேர்தல் நடைபெற்றது. மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் பின்னர் செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஒருவர் இரு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக்கூடாது என்ற நிலை உருவானது. சோனியா, நரேந்திர மோடி, ராகுல்காந்தி போன்ற தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர்.
தமிழக முதல்வர்களில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதை வழக்கமாகக் கடைப்பிடித்தனர். ஜெயலலிதா மட்டும் 1991 சட்டமன்றத் தேர்தலில் பர்கூர், காங்கேயம் என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த தேர்தலில் இரண்டிலும் வென்று, பர்கூரைத் தக்கவைத்துக்கொண்டு காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அங்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.எம்.வீரப்பன் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்று, ஜெ அமைச்சரவையில் அமைச்சரானார். 2001 தேர்தலின் போது, டான்சி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ஜெயலலிதா, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அவமதிக்கும் வகையில் ஆண்டிப்பட்டி, புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவை தள்ளுபடி செய்யப்பட்டன. சட்டத்தை அவமதித்த செயலுக்காக ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்டது. சட்டத்தின் இத்தகைய சந்துபொந்துகள்தான் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைகின்றன.