வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
தமிழ்நாட்டில் காங்கிரஸ்-பா.ஜ.க. ஆட்சி அமைக்க சாத்தியம் உண்டா?
50 ஆண்டுகளுக்கு முன் தகர்ந்த காங்கிரஸ் ஆட்சி, கனவில்கூட அமைய வில்லை. பா.ஜ.க.வை தூக்கி சுமக்கும் முதுகுகளைப் பொறுத்து, அதன் அரசியல் வெற்றி இருக்கும். ஒரு எம்.எல்.ஏ.வும் இல்லாமலேயே கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை பா.ஜ.க.தான் ஆள்கிறது.
சாரங்கன், கும்பகோணம்
தி.மு.க.வின் ஆன்லைன் உறுப்பினர் சேர்ப்பு திட்டம் பயன்தருமா?
பல ஆண்டுகளாக தி.மு.கவில் உறுப்பினராக இருந்தும், தலைமைக் கழகம் வழங்கிய உறுப்பினர் அட்டையை வழங்காமல் உள்ளூர் நிர்வாகிகள் உள்அரசியல் ஆடிக்கொண்டிருந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஆன்லைன் உறுப்பினர் அட்டை திட்டம். நீண்ட நாள் உறுப்பினர்கள் பலருக்கு அட்டை கிடைத்துள்ளது. அதேநேரத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு என்ற வகையில் அவரவருக்கு வேண்டியவர்களை சேர்த்து கணக்கு காட்டும் போக்கும் தொடர்கிறது. ஆதார் அட்டை போன்றவற்றை சரியாக உறுதி செய்து, உறுப்பினர் அட்டை வழங்கும்போது உண்மையான எண்ணிக்கை தெரியவரும். இல்லையென்றால், மிஸ்டுகால் மூலம் உறுப்பினர் சேர்த்த கட்சிகளின் கதையாகிவிடும்.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர் சென்னை-118
எத்தனையோ அறிஞர்கள்- தலைவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். அவற்றை படிக்கத் தவறும் இளைய தலைமுறை, சமூக வலைத் தளங்களில் எதையெதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார்களே?
அறிவுத்தேடல் எல்லாக் காலத்திலும் இருக்கிறது. ஆனால், எல்லாரிடமும் இருக்கிறதா என்பது எப்போதுமே கேள்விக்குறிதான். இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் சமூக வலைத் தளங்களின் கேளிக்கைகளிலேயே பொழுதைப் போக்கினாலும், அதே இணையத்தின் வழியே புத்தகங்களைத் தேடிப் படிக்கும் இளைஞர் பட்டாளமும் இருக் கிறது. கார்ல்மார்க்ஸ், ஹிட்லர் காந்தி, பெரியார், அம்பேத்கர், பாரதியார், நேதாஜி, மாவோ எனப் பலரையும்- அவர்களது கருத்து களையும் படிக்கிறார்கள். அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று அவருடைய புத்தகங்களை இணையத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து, படிக்கச் செய்யும் முயற்சியும் வெற்றிகரமாக நடந்துள்ளது. இளந்தலைமுறையை ஊக்கப்படுத்தி வளர்த்து விரிவாக்க வேண்டியது மூத்த தலைமுறையின் கடமை.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
தூங்கும்போது மட்டும்தான் ஒரு மனிதனுக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறதா?
நிம்மதியாக இருந்தால்தான் அமைதியான தூக்கம் கிடைக்கும். பொழுதோடு விழிப்பு ஏற்பட்டு, புத்துயிர்ப்பைத் தரும்.
__________
தமிழி
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
தமிழர்களின் சித்த மருத்துவம் சிறப்பானது. ஆங்கில மருத்துவத்திற்கு இணையானது என கொரோனா பரவி 6 மாதம் கழித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறாரே?
ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் பாரம்பரிய இயற்கை மருத்துவ முறைகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் அறிவியல்- தொழில்புரட்சிகள் ஏற்பட்ட பிறகு ஆங்கில மருத்துவ முறை பரவலானது. கொள்ளை நோய்கள் பரவிய காலத்தில் ஆங்கில மருத்துவத்தில் ரசாயன முறையில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. காலனி ஆதிக்கத்தாலும் போர்ச் சூழல்களாலும் ஆங்கில மருத்துவ முறை பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவில் சென்னை உள்பட பல நகரங்களிலும் ஆங்கிலேயர்கள் பெரிய மருத்துவமனைகளை அமைத்தனர். நவீன மருத்துவக் கருவிகள் மனித உடலைப் பகுத்தாய்வதில் முன்னேற்றம் கண்டன. அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைத்தது. பின்னர், மருத்துவமே வணிகமானபோதுதான், ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் பாரம்பரிய மருத்துவம் நோக்கித் திரும்பத் தொடங்கினர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆங்கில மருத்துவ முறைகள் பெருமளவில் கடைப்பிடிக்கப்பட்டு, குழந்தை இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு, குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, பெரியம்மை-போலியோ போன்றவை தடுப்பு மருந்துகள் மூலம் ஒழிக்கப்பட்டு, தாய்-சேய் நலம் முதல் பாம்புக்கடி போன்ற கொடூர விஷங்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மருந்து கிடைக்கத் தொடங்கிய காலத்திலேயே, 1971ல் கலைஞர் ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன், தமிழர்களின் பாரம்பரியமான சித்த மருத்துவத்தில் தனிக் கவனம் செலுத்தினார். பேராசிரியர் பெரும்பாலும் சித்தமருத்துவ முறைகளையே பின்பற்றக்கூடியவர். அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவத்திற்கெனத் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அறிவியல் முறைப்படி முன்னேற்றங்கள் ஏற்பட்டன. பின்னர் வந்த ஆட்சிகளிலும் அது தொடர்ந்தது. ஆனால், கொரோனா காலத்தில் மருத்துவக் கருவிகள் கொள்முதல் முதல் உணவு வழங்குவது வரை ஊழல் மலிந்தபிறகு, சித்தாவின் சிறப்பு பற்றி அமைச்சர் பேசுகிறார். மக்கள், அதற்கு முன்பே சித்தாவின் துணையை நாடிவிட்டனர். ஒவ்வொரு மனித உடலிலும் உள்ள வெப்பம்-காற்று-நீர் (பித்தம்-வாயு-கபம்) இவற்றை சரியாக கணித்து, இயற்கையான பொருட்களைக் கொண்டு முறையான சிகிச்சை அளிப்பதே தமிழர்களின் சிறப்பான சித்த மருத்துவமாகும்.