ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்
மாவலியார் அடிக்கடி மனதில் முணுமுணுக்கும் பாடல் எது?
உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.
பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்
விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல்மூட்டைகளை அரசு முறையாக கொள்முதல் செய்யாததால் அவைகள் மழையில் நனைந்து வீணாவது, நானும் விவசாயிதான் என்று கூறும் முதல்வருக்கு அழகா?
நானும் விவசாயி, ஏழைத்தாயின் மகன் என்பவையெல்லாம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான விளம்பர அஸ்திரம். உழைக்கும் விவசாயிகள் படாதபாடு படுகிறார்கள். தவழும் விவசாயிகள் பதவிகளைப் பெறுகிறார்கள்.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
ரஷ்ய அதிபரை கடுமையாக எதிர்த்தவரும், எதிர்கட்சித் தலைவருமான நாவல்னியை விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்துள்ளதே?
கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவை (சோவியத் யூனியன்) இரும்புத்திரை நாடு என்றார்கள். இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அந்த சோவியத்யூனியனுக்கு பயணம் மேற் கொண்ட நிலையில், தாஷ்கண்ட் என்ற இடத்தில் மரணமடைந்தபோது, அது குறித்த சர்ச்சைகள் எழுந்தன. இப்போது சோவியத் யூனியன் சிதறி விட்டது. ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியும் நடை பெறவில்லை. ஆனாலும், முன்பைவிட இப்போது தான் புரியாத மர்மங்கள் பல அங்கே நிகழ்கின்றன. ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்தவரான எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாவல்னி, சைபீரியாவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த நிலையில், உடல்நலன் குன்றி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரான்ஸ்-ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அவரது ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது அதில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷம் அவரது உடலில் செலுத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது என ஜெர்மனி தெரிவித்திருக்கிறது. நாவல்னி மெல்ல மெல்ல நடமாட்டத்திற்குத் திரும்புகிறார் என்றும், பெட்டிலிருந்து எழுந்திருக்கிறார் என்றும் பெர்லின் மருத்துவமனை தெரிவித்துள்ளது. விஷம் செலுத்தப்பட்ட விவகாரம், ரஷ்யாவின் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறது சர்வே.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
லாக் டவுன் என்பது ஏழைகளுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை என்கிறாரே ராகுல் காந்தி?
ஏழை-நடுத்தர வர்க்கத்தினர்- தொழிலாளி-வணிகர்கள் என எல்லாருக்கும் கொடூர தண்டனை. அம்பானி குடும்பத்திற்கு மட்டும் பெரும் பரிசு. அதன் ரகசியத்தை மோடி அரசுதான் சொல்ல வேண்டும்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
""காணொலி வாயிலாக பொதுக்குழு கூட்டம் நடத்தி திமுக தொழில் நுட்பத்தை மதி நுட்பமாக வெற்றி கண்டுள்ளது' என திமுகவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியது பற்றி?
இந்தியாவில் வேறெந்த கட்சியும் செய்யாத சாதனைதான். அந்தத் தொழில்நுட்பத்தை எதிர்த் தரப்பினர் பாராட்டும் போது கூடுதல் மதிநுட்பத்துடன் அரசியல் களத்தை அணுக வேண்டும்.
________
தமிழி
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
பழங்காலத் தமிழர்களின் கல்வி முறை எப்படி இருந்தது?
கல்வி சிறந்த தமிழ்நாடு எனப் பாடியிருக்கிறார் மகாகவி பாரதியார். திருக்குறளும் சங்க இலக்கியங்களும் கல்வியின் சிறப்பை வலியுறுத்துகின்றன. கல்வியின் நோக்கத்தையும் வலியுறுத்துகின்றன. தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதை தொட்டனைத்தூறும் மணற்கேணி என்கிறார் வள்ளுவர். கல்வி என்பது கலைகள் சார்ந்ததாகவும் இருந்தது. இசைக்கருவி, நடனம், சிற்பம், ஓவியம் போன்ற கலைகளைக் கற்றுத்தரும் ஆசிரியர்களும் இருந்துள்ளனர். அதன் காரணமாக, ஆண்கள் பெண்கள் இருவருக்குமே கல்வி-கலைகள் கற்கின்ற வாய்ப்பு இருந்தது. இது பொதுவாக, அரண்மனைவாசிகளுக்கும் செல்வச் செழிப்புள்ள வணிக குடும்பத்தினருக்கும் இருந்துள்ளது என்பதை சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்களின் வாயிலாகக் காண முடியும். அதே நேரத்தில், வறுமையிலும் கல்வி கற்றல் என்பதைத் தமிழ்ச் சான்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தியே வந்துள்ளனர். பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று எடுத்துரைத்தார்கள். வறுமையிலும் செம்மையாக வாழ்வதற்கு கல்வியே சிறந்தது என்றும், ஒரு தாய்க்கு பல மகன்கள் இருந்தாலும், அவர்களில் மூத்தவனைவிட கற்றவன் யாரோ அவனுக்கு அரசவை வரை சிறப்பு கிடைக்கும் என்றும் கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது. சங்ககாலத்திற்குப் பிறகு, பல்லவர் ஆட்சிக்காலத்தில் காஞ்சியில் அமைக்கப்பட்ட கல்விநிலையங்களில் சமஸ்கிருதம்- பிராகிருதம் போன்ற மொழிகள் கல்வி மொழியாகி, தமிழைப் பின் தள்ளின. சமண சமயம் வளர்ச்சி பெற்ற காலத்தில் குகைகள்-குடவறைகள் ஆகியவற்றில் பள்ளிகள் அமைக்கப் பட்டன. சமண போதனைகளும் பின்னர் பொதுக்கல்வியும் இங்கே பயிற்றுவிக்கப்பட்ட காரணத்தால், கல்வி கற்கும் இடங்களுக்கு பள்ளி என்ற பெயர் நிலைத்துவிட்டது. வேதங்கள்-மனுதர்ம சாஸ்திரம் ஆகியவை அரசவையில் கோலோச்ச தொடங்கிய போது, அனைவருக்கும் கல்வி என்கிற சங்ககாலத் தமிழர் வழக்கம் சிதைக்கப்பட்டு, இன்னார்தான் கற்க வேண்டும் என்கிற பாகுபாடு உருவானது. குரு-சீடன் பரம்பரை முறை உருவானது. அதேநேரத்தில், எளிய மக்கள் கற்பதற்காக திண்ணைப் பள்ளிகளை அந்தந்த பகுதியினர் உருவாக்கினர். இது நீண்ட காலமாகத் தொடர்ந்த நிலையில், 18-19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷார் ஆட்சிக்குப் பிறகு முறையான கல்விக்கூடங்கள் உருவாகின. நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. காமராஜர் ஆட்சியில் பள்ளிக்கல்வி, கலைஞர் ஆட்சியில் உயர்கல்வி எனத் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்த தமிழகம், இப்போதும் தனித்தன்மையான கல்விமுறைக்காக போராடிக் கொண்டிருக்கிறது.