வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

மு.க.ஸ்டாலின் மாண்புமிகு முதல்வராகும் வாய்ப்பு உண்டா?

மாண்புமிகு மக்கள் அதற்கான தீர்ப்பினைத் தேர்தலில் வழங்குவார்கள். அது, தி.மு.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் எப்படி வழக்காடு கிறார்கள் என்பதையும் எதிர்த்தரப்பின் வியூகங்களையும் பொறுத்தது.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

Advertisment

இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் இருவருக்கும் தலா 100 தொகுதிகள் என்றும் அதில் யார் அதிகம் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்குத்தான் முதல்வர் பதவி என்றும் சொல்லப்படுகிறதே?

அவர்கள் இருவரும் சமமாகப் பிரித்துக்கொண்டாலும், மக்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதே தேர்தல் களத்தில் முக்கியமானது. அதன்பிறகு, மேலே உள்ளவர் என்ன தீர்மானித்திருக்கிறார் என்பது இந்தியாவின் இன்றைய ஜனநாயக அமைப்பில் அதிமுக்கியமானது.

அ.யாழினிபர்வதம், சென்னை-78

Advertisment

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க.வில் இணைந்தது பற்றி?

அரசியலுக்கு அண்ணாமலைகள் புதிதன்று. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி, அ.தி.மு.க.வில் எம்.பியானார். ஓய்வு பெற்ற நீதிபதி ராமசாமி. அ.தி.மு.க சார்பில் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டார். ஐ.பி.எஸ்.அதிகாரியான அலெக்சாண்டர், ஜெ முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளிலும் இதுபோன்ற முன்னாள்கள் பலர் இருந்துள்ளனர். பா.ஜ.க.வில்தான் ஓய்வுக்கு முன்பாகவே வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு கட்சியில் சேர்வது, பணியில் இருக்கும்போது நேர்மையான பேர்வழி என்ற விளம்பரம் தேடிக்கொண்ட படியே, பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள்மீது பழிபோடுவது எனப் பல வேலைகளைக் கச்சிதமாக செய்துவிட்டு. அதன்பின் பணி ஓய்வோ அல்லது வி.ஆர்.எஸ்.ஸோ கொடுத்து, பா.ஜ.க.வில் இணைந்து பரபரப்பை ஏற் படுத்துவது என்கிற புதிய கலாச்சாரம் உருவானது. இதில் கிரண்பேடி, அண்ணா மலைக்கு அக்கா. ராணுவத் தளபதியாக இருந்து பா.ஜ.க. வில் சேர்ந்து அமைச்சரான வி.கே.சிங் இவர்களை யெல்லாம் மிஞ்சியவர்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படு வதன் காரணம் என்ன?

அம்மா வழி அரசு என்கிறாரே எடப்பாடி பழனிசாமி. டெங்கு காய்ச்சல் மரணங்களை மர்மக் காய்ச்சல் மரணங்கள் எனக் கணக் கெழுதி மறைத்ததுபோல, கொரோனா மரணங்களிலும் கோல்மால் கணக்கு தொடர் கிறது.

mm

நித்திலா, தேவதானப்பட்டி

ராணுவத்தில் தற்சார்பு என்பது என்ன?

பிரான்ஸ் நாட்டிடம் ரஃபேல் போர் விமானம் வாங்கி, இந்தியாவில் விளைந்த எலுமிச்சையை வைத்து பூசை செய்வது.

________

தமிழி

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

டி-சர்ட்டில் இந்தி தெரியாது போடா என்று சொல்வதால் தமிழ் வளர்ந்துவிடுமா? அல்லது 3000 ஆண்டுகால இலக்கிய வளம் கொண்ட மொழியை இந்தி அழித்துவிடுமா?

தமிழை வளர்ப்பதற்காக டி.சர்ட்டில் இந்தி எதிர்ப்பு வெளிப்படுத்தப்படவில்லை. தமிழை இந்தி அழித்துவிடும் என்கிற அச்சமும் இல்லை. ஆனாலும், ஒரு போதும் ஆதிக்க மொழிகளுக்கு தமிழ் மண் இடம் கொடுத்ததில்லை. வடமொழிக்கு எதிரான தமிழ்ப்புரட்சிதான் சித்தர் பாடல்கள், ஆழ்வார்கள்- நாயன்மார்கள் பாசுரங்கள். ஆதிக்கத்துக்கு இடம் கொடுத்தால் அது தாய்மொழி சிதைவுக்குத் தானாகவே இடம் கொடுத்ததுபோல ஆகிவிடும். அதுவும், இந்திக்கு அத்தகைய வரலாறு உண்டு என்பதை அம்மொழி யில் முதுகலைப் பட்டம் பெற்று, ஆக்ராவில் சைனிக் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற சீனி.மோகன் என்பவர். 12 ஆம் நூற்றாண்டின் அபப்ரம்ஷ தொடங்கி, பீகாரின் பிஹாரி, மைதிலி, போஜ்புரி, மகதி, உத்தர பிரதேசத்தின் வ்ரஜ, அவதி, கடிபோலி, ராஜஸ்தானி, ஜயபுரி, மார்வாடி, இமாச்சல பிரதேசத்தின் பஹாடி உள்ளிட்ட ஒவ்வொரு குன்றிலும் பேசப்படும் மொழிகள், கட்வாலி, குமாஊங், மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்டி, சத்தீஸ்கர், ஹரியானாவின் ஹரியாணவி மற்றும் பஞ்சாபி, உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து கடன் வாங்கிய ஆயிரக்கணக்கான சொற்கள் இவற்றின் கலவைதான் கடிபோலி என்ற இன்றைய இந்தி. இதில், பல மொழிகளுக்கும் தனித்தனி எழுத்துரு இருந்தும் சமஸ்கிருதம் எழுதப்படும் தேவநாகரி என்ற எழுத்துருவை பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தங்களது இனிய தாய்மொழியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு கடிபோலி கற்கவும் பேசவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வித்யாபதி தனது படைப்புகளை மைதிலி மொழியில் எழுதினார். பீகார் தவிர பிற இந்தி பேசும் பகுதி மக்களால் விளக்கவுரை இல்லாமல் அதனைப் புரிந்துகொள்ள முடியாது. துளசிதாஸ் தனது இராமாயணம் நூலை ராமசரிதமானஸ் என்ற தலைப்பில் அவதி மொழியில் எழுதினார். சூரதாஸின் சூர்சாகர் எனும் இலக்கியப் படைப்பு வ்ரஜ என்ற மொழியில் எழுதப்பட்டது. கபீர் தாஸ் சதுக்கடி என்ற மொழியில் எழுதினார். இன்று அவர்கள் சொல்லும் இந்தி பேசும் மக்களால் இவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளவே முடியாது. கால வரிசைப்படி வீர்காதா கால், பக்தி கால், ரீதி கால், ஆதுனிக் கால் என்று நான்கு கால வரிசைகளைச் சொல்லி வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட படைப்புகளை இன்றைய இந்தியான கடிபோலியுடன் இணைத்துக் கொள்வார்கள். இதில் நான்காவதாகச் சொல்லப்பட்ட ஆதுனிக்கால் என்ற நவீன காலத்தைத் தவிர, பிற இலக்கிய காலங்களில் இன்றைய இந்தியான கடிபோலியைக் காண முடியாது என்கிறார். இலக்கியச் செழிப்புடன் விளங்கிய மற்ற மொழிகளை இப்போது தேட வேண்டியிருக்கிறது. இதுதான், ஆதிக்க மொழி ஏற்படுத்தும் விளைவு.